Friday, March 14, 2008

அதிகார மையங்களை கேள்வி கேட்கும் போராளி அரைபிளேடு குறித்து...

இந்த தமிழ்பரப்பில் பார்ப்பனீய உருவாக்கத்தாலும் கருத்தாக்கத்தாலும் பாதிக்கப்பட்டு, கட்டியமைக்கப்பட்ட அதிகார மையங்களை நோக்கி குரலெழுப்பி அவற்றை வென்று அதன் மீதேறி நின்று நம்மை நாமே பார்த்துக்கொள்ளும் போது அதிகாரங்களை சிதைத்த நாம், அந்த அதிகாரங்களை சிதைத்ததால் மற்றுமொரு அதிகார மையத்தை நிறுத்தி, அந்த அதிகாரத்தின் காரணமாக இதற்குமுன் அதிகாரத்தை நாம் கேள்வியெழுப்பியது சமத்துவத்தை நிலைநிறுத்துவதற்காகவே என்னும் அடிப்படையை மறந்து சமத்துவத்தை தொலைத்து ஆதிக்கத்தில் இருந்து விடுபட்ட பிண்ணனியை கொண்டாட இனம் சார்ந்த ஆதிக்க பின்னணியை கட்டி நிறுத்தி வென்ற இடத்தில் சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் தொலைத்திருக்கிறோமா என்ற கேள்வி அந்த வாசிப்பின் மூலமாக நீண்டு, என்னுள் பொங்கி எழுந்த ஒரு தருணத்தில், இந்த சமூகத்தில் தனி மனிதனின் இருப்பும் சிறப்பும் பிறப்பு சார்ந்து அமைகிறது என்ற கட்டுகளை வெட்டியுடைத்த நாம் அதே கட்டுகளை அதே பிறப்பு சார்ந்து பிறரிடம் பிரயோகித்து நமது கொள்கை வழுவி தடம் புரண்டு அதிகார போதையேறி அரண்டது பேயாக கண்டது பாம்பாக, பார்ப்பது எல்லாம் பார்ப்பனீயமாக கண்ணுக்குள் திராவிட திரை மறைப்பதால் சாதீயங்களை ஒழிக்க வேண்டிய இடத்தில் அதனை ஒழிக்காது ஒழிந்து அடிப்படையில் சாதீயத்திற்கு எதிரான குரல் என்று எழுப்பப்படும் எமது குரல் சாதீய விழுமங்களையே மீண்டும் கட்டியெழுப்புவது குறித்ததான எமது கருத்துக்கள் குறித்ததான எமது விமர்சனங்களை நாமே மேற்கொள்ளவேண்டிய தருணங்களில் அதனை புறக்கணித்து புறந்தள்ளி புனிதங்களை பிட்டுப்போட்டு சிதைத்து புனித பிம்பங்களை புடைத்து சமூக புத்துணர்வு தந்து புதுயுகம் தரவேண்டிய கடமையே புறந்தள்ளி எமது கொள்கைகளுக்கு யாம் புனிதத்தன்மை கொடுத்து அந்த புதிய புனிதத் தன்மையில் மனிதருக்காய் போராட கிளம்பிய தருணங்கள் தொலைந்து இனம் சார்ந்த இருத்தலை இறுதிவடிவமைப்பதான ஒரு பணியை செய்து கொண்டிருக்கிறோமா என்ற கேள்வியை கேட்க வேண்டிய தருணத்தில் அமைப்புகளை அதிகார மையங்களை எதிர்ப்பதே புரட்சியென்றும் அப்புரட்சியே சமூகத்தின் தேவையென்றும் களப்பணியாற்றி வந்த நாம் அந்தக் களப்பணியில் வென்று அந்த அதிகாரங்களையும் வென்றெடுத்தவர்களாக இருக்கும் தருணத்தில் புரட்சிகரமான போராளிகளான நாம் நமது போராட்டத்தில் என்றும் ஓய்வதில்லை என்பதால் அதிகாரம் சார்ந்த அமைப்புகளுக்கு எதிரான போராட்டத்தை தொடரும் வேளையில் அப்போராட்டம் அதிகாரத்தை அடைந்தவர்களான எமது மீதே இருப்பதால் அதிகாரத்தை எதிர்ப்பது தன்னைத் தானே எதிர்ப்பதாகுமா என்ற எண்ண அலைகளை ஒரு போராளியாக கடந்து போராளியின் கடன் போராட்டம் மற்றும் போராட்டத்தை பதித்தலாகவே இருக்கவேண்டும் என்பதற்காக இக்கருத்தை இங்கு பதிவதன் அவசியத்தையும் இக்கருத்து பதிதல் கருத்துக் களத்தில் இலக்கிய வடிவம் பெற்று பின்நவீனத்துவ புனிதத்தை பெறுவது என்ற இலக்கிய அறிவு உடையவர்களாக காலத்தால் அழியாத இந்த இலக்கியங்களை எமது போராட்டத்தின் வலியை தன்மையை மக்கள் அறியக் கொடுப்பதற்காக மக்கள் கலைகளான கவிதைகள் பக்கம் கவனம் செலுத்தி புதுயுகம் காண புதுக்கவிதை படைத்து களப்பணி ஆற்றி வருங்கால் அப்பணியை எதிர்த்தும் எமது கருத்துக்களை மறுத்தும் வெறுத்தும் எழும் எதிர் கருத்துக்கள் மதிப்பேதும் கொடுத்து கவனிக்கப் படவேண்டியவையே அல்ல என்றாலும் குப்பைக் கூடைக்குள் போக வேண்டியவை என்றாலும் எதிர் கருத்துக்களை எதிர்ப்பவனே போராளி என்ற போராளிக்கான இலக்கணத்தை கைவிடாது எதிர்கருத்து கண்டவிடத்தில் எகிறி எம்கருத்துக்களை செலுத்தி எம் கருத்துக்களால் மட்டுமே மறுமலர்ச்சியும் புத்துணர்ச்சியும் புதுமையும் கொண்ட குமுதாயம் ஒன்றை அமைக்க முடியும் என்பதை இந்த குமுதாயத்திற்கு உணர்த்துவதற்காக கும்மிகளை பதிலுக்கு கும்மி அல்லது கும்பி இக்கும்முதலுக்கும் கும்புதலுக்கும் இலக்கிய வடிவம் பெற வேண்டி எம் மொழியின் வீச்சை குறித்தும் செறித்தும் பறித்தும் பயோனித்தும் மொழியை தன்வயப்படுத்துவதான ஒரு தோற்றத்தை கட்டமைப்பதற்காக தேவைப்படின் மொழியை சிதைத்தும் கதைத்தும் பதைத்தும் எழுதுவதும் இலக்கிய வடிவமே என்ற பின்நவீன அறிவு கொண்டும் மொழியும் பகுத்தே அறியப்படுவது என்பதும் பகுத்தறிவதே முதல் பொருள் என்னும் தன்மையால் யாவையும் பகுத்தும் வகுத்தும் கூட்டியும் கழித்தும் அறிந்து பதிந்து வரும் இக்கருத்துக்களை பகுத்தறிவோடு அணுகாது மதமென்னும் சாயம் கொண்டு அணுகி எம்மை இங்கு இழித்தும் பழித்தும் தோழர் உரைப்பது தகுமா என்ற சக தோழரின் கேள்விக்கு பதிலளிப்பதற்காக பகுத்தறிவும் கொள்கையும் கோட்பாடும் இணையும் இடம் எது என்பதை இணையத் தோழர்கள் அறிய வேண்டும் என்பதற்காக பதிவின் தேவை மிக முக்கியம் என்பதாலேயே தொடர்ந்து அத்தனை எதிர்ப்புகளையும் புறந்தள்ளி எதிர்ப்பின்னூட்டங்களை குப்பைக் கூடைக்கு தள்ளி எம் கருத்துக்களை யாம் பதிவதை எம்மிடம் பொருத்திப் பார்த்து எமது பின்னூட்டத்தை உமது அதிகார மையப் பார்வை கொண்டு புறந்தள்ளல் சரியா எனக்கேள்வி கேட்பது அதிகார மையத்திற்கு எதிரான குரலாகாது என்பதை உணர்ந்தே இருந்தாலும் எதிர்க்குரல் எழுப்பும் புல்லர்கள் தொலைந்து போன அதிகார மையங்களை மீண்டும் கட்டமைக்கும் குரூர எண்ணத்துடனேயே இக்கேள்வியை எழுப்புகிறார்கள் என்பதை நாம் அறியாமல் இல்லை என்பதும் இத்தகு கேள்விகளே அதிகாரத்தை யாம் பெற்ற பின்னும் போராளியாக தொடருவதற்கான நியாமான காரணங்களாக தொடருகின்றது என்ற நியாயத்தை நாம் தொடர்ந்து எமது பதிவுகளில் நிலை நிறுத்தியும் கட்டமைத்தும் தொடர்ந்து எழுதியும் தேவைப்படும் இடங்களில் பின்னூட்டம் இட்டும் தொடர்ந்து வந்திருக்கிறோம் என்பதை மீண்டும் மீள்பதிவு செய்து தொடர்ந்து தொடரும் எமது கருத்துக்கள் எம் மனதில் தொடர்ச்சியான அலைகளாக எமது போராட்டம் எமது இருப்பு எமது எழுத்தின் தேவை இதனால் நாட்டுக்கு ஏற்படும் சேவை இவற்றின் காரணமாகவே நாளொன்றுக்கு குறைந்தது மூன்று நான்கு பதிவுகளாவது இட்டு இந்த ஆதிக்க சக்திகளை எதிர்க்க வேண்டிய அவசியம் மிக முக்கிய காரணமாகிறது என்பதை மீண்டும் மீண்டும் சிந்திப்பதால் இந்த சமூகத்திற்காக சிந்திக்கும் எமது சிந்தனை இருபத்திநான்கு மணிநேரமும் தொடர்வதால் அந்த தொடர்ச்சியின் நீட்சியானது இந்தப் பதிவை போல் முற்றுப்பெறாதாக முற்றுப்புள்ளிகள் மறந்ததாக தொடர்ந்து போராட்டங்கள் பதிவுகள் பின்னூட்டங்கள் அவற்றால் அசைபடும் அதிகார மையங்கள் என எமது பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தொடர்ந்து கொண்டிருப்பேன் என்பதை இவ்விடத்தில் எந்த பாசாங்கும் கும்மியும் இல்லாமல் தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டிருப்பதானாது இந்த அமைப்புகளை கேள்வி கேட்பதற்கான எமது கடமையே என்பதும் அதிகார மையங்களை எதிர்க்கும் போராளியான நான் எனது தொடர்ச்சியான எண்ணங்களை எனது அடுத்த பதிவுகளில் தொடர்ந்து பகிர்ந்து கொள்வேன் என்பதை தெரிவித்துக்கொள்வதோடு............

Tuesday, March 11, 2008

பால்விலை உயர்வு - சில எதிரொலிகள்.

செய்தி: 13 ரூபாய் 75 காசாக இருந்த ஒரு லிட்டர் பாலின் விலை, 15 ரூபாய் 75 காசாக அதிகரித்தது.

----------

ஜெயலலிதா அறிக்கை: ஏழைகளின் நலனை சிறிதும் கருதாத அரசு என்று இந்த மைனாரிட்டி அரசு மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறது. பாலுக்கு அழும் பிள்ளை கூட பாலின் விலையை கேட்டு வாய் மூடும் அவலம் நேர்ந்திருக்கிறது. இந்த அரசு இனியும் தொடரவேண்டுமா. கருணாநிதி பதவி விலகவேண்டும்.

கலைஞர் கடிதம்: உடன்பிறப்பே. கழகத்தின் கட்டுக்கோப்பான ஆட்சியில் விலைகள் கட்டுக்குள்தான் இருக்கின்றன. பாலின் விலை அதிகரித்தது என்று கூப்பாடு போடுபவர்கள் அண்டை மாநிலங்களில் பாலின் விலை என்ன என்று பார்க்க வேண்டும். டெல்லி எருமைகள் மிகுந்த டெல்லியில் கூட பால் லிட்டர் 20 ரூபாய். பாலின் விலை சிறிதளவே உயர்ந்துள்ளது. இதனால் பால் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள 21 லட்சம் குடும்பங்கள் பயன்படுகின்றன என்பதை யாரும் எண்ணிப் பார்ப்பதாய் தெரியவில்லை. பாலின் விலைகுறித்து முழக்கமிடுபவர்கள் ஆந்திரா, கர்நாடாகா, கேரளாவுக்கு சென்று பாலின் விலை என்னவென்று முதலில் விசாரிக்கட்டும்.

--------

குமுதம் ஆனந்த விகடனில் அடுத்தவார ஜோக்குகள்.

கல்யாணமான புதிதில் கணவன்:
கமலா. நான் நம்ம முதலிரவுக்கு ஒரு சொம்பு பால்தானே கேட்டேன். இதுக்குபோய் வரதட்சணை புகார் கொடுப்பேன்னு நீ சொல்றது கொஞ்ச கூட நல்லாயில்லை.

--------

தலைவரே. உளர்றத நிறுத்துங்க. பால் விக்கறவங்களை பால் வியாபாரிங்கன்னு சொல்லலாம். ஆனா பாலியல் தொழிலாளிகள்னு சொல்லக்கூடாது.

---------

ஆசிரியர்: நீயெல்லாம் பசுமாடு மேய்க்கத்தான் லாயக்கு.
மாணவன்: ரொம்ப தாங்ஸ் சார்.

--------

பந்தியில்:

அது என்ன ஸ்பூன்ல கொஞ்சமா விடறாளே. நெய்யா?

இல்லை. பால் பாயாசம்.

-----

பால் விலையை குறைக்கறதுக்காக மூலிகைப் பால் கண்டுபிடிச்சதுக்கா உன்னை உள்ளே தள்ளிட்டாங்க.

ஆமா. நான் கண்டு பிடிச்சது கள்ளிப் பால்.

----

Sunday, March 09, 2008

ராதை என்றொரு பேதையும், உள்ளத்தில் கள்ளம் வைத்த கண்ணனும்

புள்ளினங்களும் ஆவினமும் நிறைந்த பிருந்தாவனம். அதன் அமைவிடம் அழகிய யமுனை தீரம். இனிய மாலை நேரம். நீராட கிளம்பினாள் ராதா. அவள் விருஷபானுவின் மகள். இன்று அயனாவின் மனைவி.

அந்த இனிய மாலைப் பொழுது அவளின் மனதில் எந்த மகிழ்வையும் தருவதாயில்லை. குயில்களையோ மற்ற புள்ளினங்களையோ அவள் கவனித்தாளில்லை. அவளது கால்கள் பழகிய அந்த வழி நடந்தன. அவள் மனம் அங்கிருப்பதாயில்லை. கண்கள் கண்ணீரை சிந்தி கொண்டிருந்தன. கண்ணீர் தாரை தாரையாக பெருக்கெடுத்தது. மனம் அவளுக்கு ஒரு வாரத்திற்கு முன் நிகழ்ந்த திருமணத்தை நினைத்தது. ஏன். ஏன் எனக்கு இது நிகழ்ந்தது. எனது மனம் கண்ணனிடம் சென்ற பின் மணமும் அவனுடனல்லவா நிகழ்ந்திருக்க வேண்டும். இன்று நான் அயனாவின் மனைவி. இன்னும் என் மனம் கண்ணனை ஏன் எண்ணுகிறது. கண்ணனை இன்னும் என் மனம் நினைப்பது சரியா. தவறா. இது முறையா. மனம் குழப்பமடைந்தது. ஆடைகளைந்து நீரில் இறங்கினாள். தண்ணீரின் குளுமை உடல் தொட்டது. உள்ளம் இன்னமும் தணலாய்த் தகித்தது.

இது என்ன முரளீதரனின் மூங்கிலின் இசை கேட்கிறதே. முகுந்தன் கண்ணன் இங்குதான் உள்ளான் போலும். ஏன் அந்தக் கண்ணன் நேரத்தில் வரவில்லை. ஏன் என்னை அவன் தடுத்தாட்கொள்ளவில்லை. எங்கே அவன்.

"ராதை." புல்லாங்குழலினினும் இனிய குரல். கண்ணன் நதியின் கரையில் சிரித்த வண்ணம் இருந்தான்.

"கண்ணா. நான் குளிக்குமிடத்திற்கு ஏன் வந்தாய்."

"நான் வரக்கூடாதா ராதா. நம் காதல் மறந்தாயா. கோபியர் கூட்டத்தில் நிலவு நீ. ஆயிரம் கோபியர் இருப்பினும் என்உள்ளம் உன்னிடமே. உன் உள்ளத்தில் உறைந்தவளே. நான் உன் காதலன்."

"காதலன். சிலகாலமாய் எங்கிருந்தாய் கண்ணா. எனது திருமணம் நடந்து முடிந்தது. என் வாழ்வும் முடிந்தது. ஏன் என்னை தடுத்தாட்கொள்ளவில்லை. இன்று நான் மாற்றான் மனைவி. இங்கு நில்லாதே. அது பாவம்."

"எது பாவம். ராதை. காதல் பாவமா. உனது திருமணத்தை நான் அறியவில்லை. குருகுலத்தில் என் மாயைகளை மறைத்து சாதாரண மாணவனாய் நானிருந்த காலத்தில் உன் திருமணம் நடந்தது. அறிந்திருந்தால் வந்து தடுத்திருப்பேன். இப்போதும் உனக்காகவே இங்கு வந்தேன். நமது காதலுக்கு உன்திருமணம் ஒரு தடையல்ல."

"ஏது பேசுகிறாய் கண்ணா. இன்று நான் மாற்றான் மனைவி. இனி உன்னை நினைப்பதும் பாவமன்றோ."

"ராதை நான் சூரியனென்றால் நீ ஒளி. நான் புல்லாங்குழலெனில் நீ காற்று. நான் தண்ணீரென்றால் நீ அதன் குளுமை. நான் உன்னை நினைப்பதும் நீ என்னை நினைப்பதும் எப்படிப் பாவமாகும்."

"கண்ணா...."

"பேதை ராதையே. மாயை பிரித்ததடி நம்மை. மாயை விலக்க நானே வந்தேன். இனி நம்மிடையே எது தடை.."

"கண்ணா.. ஆனால் என் கணவன்."

"ராதை. நான் பரம் பொருள். நீ என் ஜீவன். ஜீவன்கள் பிறப்பதும் பின் பரத்தில் கலப்பதும் இயற்கை. நான் யார். நீ யார் என்பதை புரிந்து கொள். உனது திருமணம். உனது கணவன் யாவும் மாயை. நீ நிஜம். நான் நிஜம். ராதையின்றி கண்ணனில்லை. கண்ணனின்றி ராதையில்லை. நீயும் நானும் ஒரே பொருளின் இருவடிவங்கள். ஒன்றின்றி ஒன்றில்லை. எழுந்து வா. என்னில் கலந்திடு. "

"கரையில் இருக்கும் ஆடைகளை எடுத்துப்போடு கண்ணா. அணிந்து கொண்டு வருகிறேன்."

"ஆடைகள் என் முன் உனக்கெதற்கு ராதை. மறையின் பொருளே உன் முன் நிற்க ஆடை கொண்டு எதை மறைப்பாய். எழுந்து வா." மாயவன் கள்ளப் புன்னகை பூத்தான்.

ராதை கண்ணனை பார்த்தாள். கார்முகில் வண்ணன் தன் மாயச்சிரிப்பு மயக்கியது. அவன் மேனிகண்டவள் மோகம் தாக்குற்றாள். கண்ணன் புல்லாங்குழல் எடுத்தான். இசை. இன்னிசை. ராதை தன்னை மறந்தாள். தான் யார் என்பது மறந்தாள். உலகம் மறந்தாள். எதிரே கண்ணன். மாயவன். இசை. உள்ளம் உருகியது. இது காதலா. காமமா. பக்தியா. அவள் நீர் நிலை விடுத்தாள். கண்ணன் தன் மார்பு சாய்ந்தாள். உன்னித்தெழுந்த ராதை தடமுலைகள்.. தீண்டி அணைத்த கண்ணன் கைவிரல்கள்... மயக்கம். மாயை. மாலை. மாலையின் வேளை. ஆதவன் மறைய, ஒளி குறைய, மனதில் மோகம் நிறைய. இவன் இறை. நான் இவனின் நிறை. இனி ஏது குறை. யமுனையின் வெள்ளத்தினும் பெரிது என் உள்ளத்து காதல். காதல் நிறைந்தது. கண்ணனை கடவுளென உணர.. தகித்த அவள் உள்ளம் குளிர.. உடல்கள் புணர.. இரு பொருள்கள் ஒரு பொருளாக.. பரமாத்மாவை ஜீவாத்மா அடைய...

விளையாட்டு தினமும் தொடர்ந்தது. தினமும் மாலையில் நீராட யமுனையை அடைந்தாள் ராதை. கண்ணனை கலந்தாள். பிறவிப்பயன் அடைந்தாள். அந்த இறைவனையே அடைந்த பின் அடையப்பெறும் பேறு ஏது இவ்வுலகில்.

ஒரு நாள் மாலை. ஜோடி கண்கள் கண்ணீரோடு இந்த விளையாட்டை பார்த்தன. அவை அயனாவின் கண்கள்... பார்த்தவன் அங்கிருந்து அகன்றான்.

"கண்ணா. ஊர் அறியாமல் உலகம் அறியாமல் உன்னுடன் இவ்விளையாட்டை எத்தனை நாள் நடத்துவது. ஊரறிய என்னை உன் மனையாளாக ஏற்றுக்கொள்." ராதை தன் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தினாள்.

"ராதை. நான் நாளை மதுரா செல்கிறேன். அதன் உரிமை என்னுடையது. அதை வெல்வேன். அதன் மன்னாக திரும்பி வருவேன் உன்னை மணப்பேன்."

"நிச்சயமாக.."

"நிச்சயமாக ராதா. எனது கண்ணே."

கண்ணன் தனது மாயா லீலைகளை தொடர்ந்தான். ராச லீலைகளால் அந்த மாலை நிறைந்தது. ராதை மீண்டும் மீண்டும் அந்தப் பரம்பொருளில் கலந்தாள்.




---

வீடு திரும்பிய ராதையை அவள்கணவன் பேசாது புறக்கணித்தான். மாற்றானோடு கலந்து திரும்பிய மனைவியை அவன் திரும்பியும் பார்த்தானில்லை.
பரம்பொருளோடு தன்னை தன் கணவன் பார்த்துவிட்டான் என்பதை ராதை உணர்ந்து கொண்டாள். அவள் அவனது புறக்கணிப்பை பொருட்படுத்தவில்லை.

கண்ணன் வருவான். மதுராபுரி மன்னாக. நான் மனம் விரும்பும் மணாளனாக. என்னை ஏற்பான். அவள் மனம் முழுதும் கண்ணன் நிறைந்திருந்தான்.

ராதையின் சேதி ஊருக்கு தெரிய வந்தது. புறக்கணிப்புகள் தொடர்ந்தன. பெற்றோரும் மற்றோரும் கூட அவளை பொருட்படுத்துபவராயில்லை.
கணவன் கைவிட தனியனானாள். யமுனையின் தீரத்தில் கண்ணனோடு களித்திருந்த இடங்கள் தோறும் அவள் சுற்றி வந்தாள்.

கண்ணன் வருவான். எனக்காக வருவான். காலங்கள் பறந்தன. வருடங்கள் உருண்டன. கண்ணன் வரவில்லை.

கண்ணன் பற்றிய செய்திகள் வந்தன. கண்ணன் மதுரா விடுத்து துவாரகை புகுந்தான். கண்ணனுக்கு மணமானது. ருக்குமணி, சத்யபாமா, ஜாம்பவதி, காளிந்தி, மித்ரபிந்தா, சத்யா, பத்ரா, லக்ஷ்மணா. எட்டு மனைவிகள் பட்ட மகிஷிகளாக. நரகனை கொன்று மீட்ட 16000 மங்கைகளின் மணாளனான் கண்ணன். கண்ணன் வருவான் என்று இன்னமும் ராதை காத்திருந்தாள்.

அவள் யெளவனம் தேய்ந்தது. நரை கூடியது. தோல் சுருங்கியது. ஆனால் மனம் இன்னமும் கண்ணன் வருவான் என்று நம்பியது. கண்ணன் வருவான். அவன் பரந்தாமன். அவன் வந்து தீண்ட தன் இளமை திரும்பும் என்று நம்பினாள்.

சமூகம் அவளை முற்றிலும் நிராகரித்து விட்டதால் அவள் காட்டிலேயே வாழ்ந்தாள். கானகம் முழுவதும் கண்ணன் மீது கொண்ட காதலால் அவள் சுற்றி வந்தாள். கண்ணா கண்ணா என்று கதறினாள். கண்ணன் மட்டும் வரவேயில்லை.
ஒரு நாள் பரமாத்மாவையே நினைத்திருந்த அவள் ஜீவாத்மா உடல் உகுத்தது.
கண்ணனுக்கு என்று மட்டுமே அவள் அர்ப்பணித்த அவள் தேகத்தை காகங்களும் கழுகுகளும் நரிகளும் பங்கிட்டுக்கொண்டன.

கண்ணன். அவன் கடைசிவரை வரவேயில்லை.

----------

Thursday, March 06, 2008

நெறி தவறிய சீதையும், நெருப்புக் குழியிறக்கிய இராமனும்.

மோகத்தீ மூட்டும் மூன்றாம் ஜாமம். வெண்ணிலவும் தென்றலும் மன்மதனின் தொழிலுக்கு துணை செல்ல தன் அந்தப்புரத்தில் மகிழ்ந்திருந்தான் மன்னன் இராமன். இராவணனை வில்லெடுத்து வென்றவன் மன்மதனை வெல்ல சீதையை நாடினான். இதுவும் ஒரு போர். யுத்தக்களத்தில் அல்ல. மஞ்சத்தில். மோகம் மன்னனையும் மங்கை சீதையையும் ஆரத்தழுவியது. மோகம் தலைக்கேற உடல்கள் இயங்க, முனகல் ஒலிகள் கிளம்பின.

சீதை முனகினாள். "ஆ... இராவணா...".

இராமனின் இயக்கங்கள் நின்றன. காது பிழை செய்யவில்லையே. இராமனின் பத்தினி "இராவணா" என்று முனகுகிறாள்.

சீதை தன் நாக்கை கடித்துக் கொண்டாள். வார்த்தை வாய் தவறி வந்து விழுந்திருந்தது. இராமனின் கண்கள் சினம் கக்கின.

"உடலால் என்னைத் தழுவினாய். உள்ளத்தை யாரிடம் கொடுத்தாய்."

சீதை இனியும் மறைக்க முடியாதவள் ஆனாள். "எனது உள்ளத்தால் இராவணனைத்தான் நினைத்தேன்."

"இது என் செய்தாய். இப்பிறப்பில் என் மனதாலும் இன்னொரு மங்கையை நாடாத மாபெரும் விரதம் ஏற்ற என் மனைவி மாற்றானை மனதில் கொண்டாளா. உடலால் என்னைத் தழுவியவள் உள்ளத்தால் மாற்றானை தழுவினாளா. நீயும் பத்தினியா?"

"நான் பத்தினிதான். தீ இறங்கி நிரூபித்திருக்கிறேன்."

"பேசாதே. மாற்றானிடம் சிறைப்பட்ட மனைவியை ஏற்பதற்காக நான் நடத்திய நாடகம் அது. என் மீது பழி ஏற்படாதிருக்க. எனது கெளரவத்திற்காக. அந்த நாடகத்தில் நீயும் நன்றாகவே நடித்தாய்."

"சாத்திரங்களின் படியும் விதிகளின் படியும் நடக்கும் உத்தமரே. அந்த நாடகத்தில்தான் தங்கள் உண்மையுருவை தரிசித்தேன். உங்களை விடவும் சகலவிதங்களிலும் உயர்ந்தவன் ஒருவனை கண்டேன். மனம் சஞ்சலம் கொண்டாலும் தர்மத்தின் பக்கம் நின்று அவனை விலக்கினேன். உடலளவில் நான் உத்தமிதான். உள்ளம்தான் சஞ்சலம் கொண்டது."

"சீ. உள்ளத்தாலும் அவனை நீ நினைக்கலாமா.".

"மென்மையை மட்டும் தங்களிடம் கண்ட என் பெண்மை, பேராண்மையை அவனிடம் கண்டதால் மனம் சஞ்சலம் கொண்டது. மன்னியுங்கள்.."

"இதை எப்படி மன்னிக்க முடியும். உடலால் நீ மாசுபடவில்லை என்று சாதித்தாலும் மனத்தால் மாசுபட்டவளே. நீ என் முகத்தே விழிக்காதே."

"நான் செய்தது தவறுதான். மன்னியுங்கள். மாற்றானை மனதில் கொண்டது தவறு. இனி மனதாலும் அவனை நினைக்க மாட்டேன்."

"உன்னை எவ்வாறு நம்புவதே. என்னை விட்டு விலகிப் போ."

"போ என்று சொன்னால் எங்கு போவேன். இது பெருங்குற்றம். இந்த குற்றம் புரிந்தேன் என குற்றம் சாட்டினால் இந்த குற்றத்தை கொண்டவளாக என் தந்தை வீட்டிற்கும் செல்ல முடியாதே."

"எங்கேனும் போ. எனது கோபம் எல்லை கடக்குமுன் போய்விடு."

"சுவாமி.."

"போ. மறுமுறை என்முகத்தில் விழித்தால் அந்தக் கணமே உன்னைக் கொல்வேன்."

"மன்னியுங்கள்."

"இப்போது உன்னைக் கொல்லாமல் விடுவதே அதிகம்."

இராமன் உறுதியுடையவனாய் நின்று இருந்தான்.

அழுது கண்ணீர் வற்றிப்போன சீதை மரக்கட்டையாய் வெளியேறி கானகம் புகுந்தாள்.

--------------

ஆண்டுகள் பல கடந்தன.

தனது புகழை பாடிய சிறுவர்களை இராமன் பார்த்தான். அவனுள் அன்பு சுரந்தது.

"குழந்தைகாள். நன்று பாடினீர். யார் உமது பெற்றோர்."

"மன்னா. அவர்கள் தங்கள் புதல்வர்கள். எனது வயிறு உதித்தோர்." சீதை தோன்றினாள்.

"நீயா.. எனது முன்வர என்ன துணிச்சல்."

"இன்னும் உங்கள் மனம் மாறவில்லையா."

இராமன் கல்லாயிருந்தான்.

"இவர்கள் தங்கள் புதல்வர்கள். தங்களிடம் ஒப்புவிக்கவே வந்தேன்."

"எனது புதல்வர்கள் ?"

"ஆம்."

"இவர்கள் எனது புதல்வர்கள்தான் என்பதற்கு என்ன சாட்சி.".

"ஐயோ." சீதை தனது காதுகளை பொத்திக் கொண்டாள்.
"இந்த வார்த்தைகளை கேட்டும் நான் உயிர் வாழ வேண்டுமா. ஏ பூமா தேவி. நீ பிளந்து என்னை உள்ளிழுத்துக் கொள்ளக் கூடாதா."

இராமன் ஒரு குரூரப் புன்னகையை வெளிப்படுத்தினான்.

"சீதை. உனது வேண்டுதல் நிறைவேறும்."

பூமியில் குழியொன்று தோண்டப்பட்டது. சீதை அதில் உயிரோடு இறக்கப்பட்டாள். இராமன் ஒரு கைப்பிடி மண்ணை அள்ளிப் போட்டான்.

"பூமித்தாயே. உனது புதல்வியை ஏற்றுக்கொள்."

தொடர்ந்து மண் கொட்டப்பட்டது. சீதை புதையுண்டாள்.

பூமாதேவியால் உள்ளிழுத்துக் கொள்ளப்பட்ட தன் மனைவிக்காக இராமன் தன் மகன்களோடு அழத் துவங்கினான்.

Saturday, March 01, 2008

வடாபாவ் தேசமும் கோதுமைநிற அழகியும் காதலும்

"அவளைப் பார்க்கும் போது என்னோட உடம்புல எல்லா ஹார்மோனும் அலர்ட்டாயிடுது. அளவுக்கு அதிகமா எல்லாம் வேலை செய்யுது. இது காதல்தான். நீ என்ன சொல்ற நண்பா."
கேட்டவன் என் அலுவலக மற்றும் அறை நண்பன் சுரேஷ் ஆர். என்கிற சுரேஷ் ராஜரத்தினம்.

"இருக்கலாம். நண்பா." நான்.

"காதலுக்கான ஹார்மோன் என்னடா. அட்ரீனலின் இல்லாட்டி பிட்யூட்டரி."

"இரண்டும் இல்லை. ஆணா இருந்தா ஆண்ட்ரோஜன். பெண்ணா இருந்தா ஈஸ்ட்ரோஜன்."

"ஆங். ஆண்ட்ரோஜன். காதல் எனக்குள்ள சுரக்க ஆரம்பிச்சிருச்சி நண்பா."

"எனக்கு வேற ஒண்ணுதான் அளவுக்கு அதிகமா சுரக்கறதா தெரியுது."

"என்னது."

"ஹார்மோன் இல்லை. சலைவா. தமிழ்ல சொல்லணும்னா ஜொள்ளு."

"ஹி.. ஹி." வழிந்தான்.

அவனை இப்படி வழிய வைத்தவள் ஸ்ருதி ராஜ்தான். கோதுமை பிரதேச செழிப்பில் மிளிர்ந்த கோதுமை நிறத்தவள். அலுவலகத்தில் கவன ஈர்ப்பு பெற்ற கட்டழகி. இந்த ஈர்க்குச்சிக்கு அவள் மேல் காதலா. இருக்கட்டும்.
இந்த மும்பை நகரில் தமிழ்பேச தெரிந்தவன் அறைநண்பனாக வேண்டும் என்பதற்காகவே இவனையெல்லாம் பொறுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

"நண்பா. நீ தான் என் காதலுக்கு உதவி பண்ணனும்."

"நான் என்னடா பண்ணனும். தூது போகனுமா. கணையாழியை கழட்டிக் கொடு. எத்தனை தடைகள் இருந்தாலும் அத்தனையும் தாண்டி சென்று அவளிடம் உன் காதலை சொல்கிறேன்."

"அதெல்லாம் வேண்டாம். காதலை சொல்லுறத எல்லாம் நான் பாத்துக்கறேன். அவகிட்ட பேச நீ எனக்கு இந்தி கத்துக்கொடு போதும்."

"உனக்கு இந்தி சொல்லித் தரணுமா. கொஞ்சம் கஷ்டம் முயற்சி பண்றேன்."

"தாங்ஸ். அப்புறம் இரண்டாவது உதவி. நீ அவகிட்ட இந்தியில கடலை போடறதை நிறுத்தணும்."

"இது ரொம்ப ரொம்ப கஷ்டம். நம்ம ஆஃபீஸ்ல இருக்கறதிலேயே உருப்படியான ஃபிகர் அது ஒண்ணுதான். இருந்தாலும் ஃபிரெண்டு நீ கேட்டுட்ட. உனக்காக முயற்சி பண்ணுறேன். ஒரு நண்பனுக்காக இந்த தியாகத்தை கூட நான் பண்ண மாட்டேனா என்ன."

"டேய்..."

"சரி. சரி. ஒழிஞ்சித் தொலை. உனக்காக விட்டுக் கொடுத்துட்டேன்."

"அது போதும் நண்பா. எனக்கு இந்தி சொல்லிக் கொடு. இந்தியில பேசியே காதலை வளர்க்கிறேன். ஆமா காதலுக்கு இந்தியில என்ன"

"ப்யார். இஷ்க். முஹப்பத். மூணுமே காதல்தான்."

"ஒண்ணு ஒண்ணா சொல்லுடா. எழுதிக்கிறேன்."

"சொல்லித் தொலைக்கறேன். என்ன பண்றது. மஜ்பூரி."

"இப்ப என்னமோ சொன்னியே அது என்ன"

'எது."

"ஏதோ பேல்பூரி மாதிரி சொன்னியே."

மஜ்பூரி என்ற வார்த்தை எனக்கு பழக்கத்தில் வந்திருந்தது. இதற்கான தமிழ்வார்த்தை என்ன என்று மண்டையை உடைத்துக் கொண்டு "(காலத்தின்) கட்டாயம். கம்பல்ஷன்." என்று ஒரு வழியாக மொழிபெயர்த்தேன்.

அவனுக்கு காதல் ஆரம்பித்தது. எனக்கு தலைவலி.

"எல்லாம் சரிடா. அவளுக்கு உன் மேல காதல் வரும்னு நினைக்கிறாயா."

"உனக்கு காதலோட முதல் விதி தெரியுமா."

"அது என்னடா."

"எந்த ஒரு பெண்ணும் காதல் விசை அவள் மீது செலுத்தப்படாத வரை காதலற்ற நிலையிலும், காதல் செலுத்தப்பெற்றால் காதல் இயக்கத்திலும் தொடர்ந்து இருக்கிறாள். இதுதான் காதல் நிலைமம்."

"தெய்வமே. ஒரு முடிவோடதான் இருக்கே. நடத்து."

அவன் நடத்தத் துவங்கினான்.

ஸ்ருதியிடம் நெருங்கி பழகத் துவங்கினான். அவளுக்காக சின்னச் சின்ன உதவிகள் செய்யத் துவங்கினான். இருவரையும் ஒன்றாக நிறைய பார்க்க முடிந்தது. திங்கட்கிழமைகளில் வடாபாவ் சாப்பிட அழைத்துச் சென்றான். செவ்வாயில் பாவ் பாஜி. புதனில் தஹி சேவ் பூரி. வியாழனில் போஹா. வெள்ளிக் கிழமை ரகடா பட்டீஸ். அவனது காதல் நாளொரு பொழுதும் தினமொரு சாட் ஐட்டமுமாக வளர்ந்தது.
ஸ்ருதிதாசன் என்ற பெயரில் இணையத்தில் கவிதைகள் எழுதினான். முப்பது நாட்களில் இந்தியுடன் முட்டி மோதினான். இதற்கென்ன அர்த்தம் அதற்கென்ன அர்த்தம் என்று என்னை பின்னி பெடலெடுத்தான். பிராண்டி எடுப்பதால்தான் ஃபிரெண்டு என்று சொல்கிறார்கள் போலும்.

மாதங்கள் மூன்று ஓடி மறைந்தன.

"நண்பா. இந்த இந்தி கவிதை எப்படி." என்றான்.

ஆகா. இத்துணை நாளா தமிழில் மட்டும் கவிதை எழுதியவன் இப்போது இந்தியிலுமா.

கவிதையை படித்தேன்.

"ஜப் தூ ஹன்ஸ்தி ஹை ஹஜாரோன் ஃபூல் கில்தி ஹை.
ஜப் தூ போல்தி ஹை பான்சுரி பஜ்தி ஹை."

"தமிழ்ல சொல்லவா." சொன்னான்.

"நீ சிரித்தால் ஆயிரம் பூக்கள் மலர்கின்றன.
நீ பேசினால் புல்லாங்குழல் ஒலிக்கிறது."


"அபாரம்டா. பன்மொழி புலவனாயிட்ட. கவிதையில கலக்கற போ."

சிரித்தான்.

"அதெல்லாம் சரிடா. உன் காதலெல்லாம் எப்படிப் போயிட்டிருக்கு. கனெக்ட் பண்ணி காதல் கரெண்டு கொடுத்து பல்பு பிரகாசமா எரியுது போல."

சிரித்தான்.

"காதலை சொல்லிட்டியா."

"இல்லைடா. காதலோட இரண்டாவது விதியை கிட்டத்தட்ட இப்பத்தான் அப்ளை பண்ணி முடிச்சிருக்கேன்."

"அது என்னடா இரண்டாவது விதி."

"காதல் விசையானது காதலின் எடை மற்றும் காதல் முடுக்கம் இரண்டிற்கும் நேர்விகிதத்தில் இருக்கும். இதுதான் இரண்டாவது விதி. அவளுக்குள்ள காதல் விசை வர்ரதுக்காக என்னோட காதலில கொஞ்சம் கொஞ்சமா முடுக்கத்தை கூட்டி காதலின் எடையையும் அதிகரிச்சுக்கிட்டே வந்திருக்கேன்."

"விளங்கின மாதிரிதான். இப்ப என்ன செய்யப் போற."

"நாளைக்கு அவளோட பிறந்த நாள். காதலின் மூன்றாவது விதியை செயல்படுத்தப் போகிறேன். காதலை சொல்லப் போகிறேன்."

பரிசாக வாங்கி வைத்திருந்த மோதிரத்தை காட்டினான். அழகாக காதலின் சின்னம் பொறித்து இருந்தது அதில்.

"அது என்னடா மூன்றாவது விதி."

"காதலைச் சொல்லுதல். எந்த ஒரு காதல் விசைக்கும் சமமான அதே போன்ற எதிர் காதல் விசை உண்டு."

"சரிதான்."

"நான் எவ்வளவு விசையோட நாளைக்கு காதலை சொல்லப் போறனோ. அதே விசையோட அவளும் பதிலுக்கு காதலை சொல்லுவா."

"வாழ்த்துக்கள். நண்பா. உன் காதல் கொடி அவள் உள்ளத்தில் பறக்கட்டும். ஆல் தி பெஸ்ட்."

அடுத்த நாள் அவன் மகிழ்ச்சியாக தன் காதலைச் சொல்ல கிளம்பி சென்றான்.

----------------

மாலை வீடு திரும்பியவன் கண்கள் கலங்கியிருந்தன.

"என்னடா. என்ன ஆச்சு."

"முடிஞ்சு போச்சு. எல்லாம் முடிஞ்சு போச்சு."

"என்னடா சொல்றே."

"அவள் கிட்ட காதலை சொன்னேன். வாட் ஈஸ் திஸ் ஃபூலிஷ்னஸ். யூ ஆர் மை பெஸ்ட் ஃபிரெண்டுன்னு சொன்னா."

"அச்சச்சோ. கவலைப்படாத. எப்படியும் உன் காதலை அவ புரிஞ்சிப்பா. ஏத்துப்பா."

"இல்லைடா. முக்கேஷ்னு ஒருத்தனை அறிமுகப்படுத்துனா. அவனைத்தான் இன்னும் மூணு மாசத்துல கல்யாணம் பண்ணிக்கப் போறாளாம். வேலைய கூட ரிசைன் பண்ணப் போறாளாம்."

கேட்ட எனக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. "நண்பா...." பேச வாயெடுத்தேன்.

"இல்லை நண்பா. என்னை கொஞ்சம் தனியா விடு. எனக்கு கொஞ்சம் அழணும்."

புரிந்து கொண்டு அமைதியானேன். கவலையின் கனத்த மெளனம் இருவருக்கும் இடையில்.

அவன் தன் காதலை கண்ணீரால் கழுவித் தள்ளும் முயற்சியில் இறங்கினான்.

உள்ளத்தில் தோன்றி உயிரில் உறைந்த காதலை அத்துணை எளிதில் உதறித் தள்ள முடியுமா.

கண்ணீரில் கரைந்து காணாமல் போவதோ காதல். காலம் அவனுக்கு பதில் சொல்லக்கூடும்.

-----------------