Friday, March 14, 2008

அதிகார மையங்களை கேள்வி கேட்கும் போராளி அரைபிளேடு குறித்து...

இந்த தமிழ்பரப்பில் பார்ப்பனீய உருவாக்கத்தாலும் கருத்தாக்கத்தாலும் பாதிக்கப்பட்டு, கட்டியமைக்கப்பட்ட அதிகார மையங்களை நோக்கி குரலெழுப்பி அவற்றை வென்று அதன் மீதேறி நின்று நம்மை நாமே பார்த்துக்கொள்ளும் போது அதிகாரங்களை சிதைத்த நாம், அந்த அதிகாரங்களை சிதைத்ததால் மற்றுமொரு அதிகார மையத்தை நிறுத்தி, அந்த அதிகாரத்தின் காரணமாக இதற்குமுன் அதிகாரத்தை நாம் கேள்வியெழுப்பியது சமத்துவத்தை நிலைநிறுத்துவதற்காகவே என்னும் அடிப்படையை மறந்து சமத்துவத்தை தொலைத்து ஆதிக்கத்தில் இருந்து விடுபட்ட பிண்ணனியை கொண்டாட இனம் சார்ந்த ஆதிக்க பின்னணியை கட்டி நிறுத்தி வென்ற இடத்தில் சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் தொலைத்திருக்கிறோமா என்ற கேள்வி அந்த வாசிப்பின் மூலமாக நீண்டு, என்னுள் பொங்கி எழுந்த ஒரு தருணத்தில், இந்த சமூகத்தில் தனி மனிதனின் இருப்பும் சிறப்பும் பிறப்பு சார்ந்து அமைகிறது என்ற கட்டுகளை வெட்டியுடைத்த நாம் அதே கட்டுகளை அதே பிறப்பு சார்ந்து பிறரிடம் பிரயோகித்து நமது கொள்கை வழுவி தடம் புரண்டு அதிகார போதையேறி அரண்டது பேயாக கண்டது பாம்பாக, பார்ப்பது எல்லாம் பார்ப்பனீயமாக கண்ணுக்குள் திராவிட திரை மறைப்பதால் சாதீயங்களை ஒழிக்க வேண்டிய இடத்தில் அதனை ஒழிக்காது ஒழிந்து அடிப்படையில் சாதீயத்திற்கு எதிரான குரல் என்று எழுப்பப்படும் எமது குரல் சாதீய விழுமங்களையே மீண்டும் கட்டியெழுப்புவது குறித்ததான எமது கருத்துக்கள் குறித்ததான எமது விமர்சனங்களை நாமே மேற்கொள்ளவேண்டிய தருணங்களில் அதனை புறக்கணித்து புறந்தள்ளி புனிதங்களை பிட்டுப்போட்டு சிதைத்து புனித பிம்பங்களை புடைத்து சமூக புத்துணர்வு தந்து புதுயுகம் தரவேண்டிய கடமையே புறந்தள்ளி எமது கொள்கைகளுக்கு யாம் புனிதத்தன்மை கொடுத்து அந்த புதிய புனிதத் தன்மையில் மனிதருக்காய் போராட கிளம்பிய தருணங்கள் தொலைந்து இனம் சார்ந்த இருத்தலை இறுதிவடிவமைப்பதான ஒரு பணியை செய்து கொண்டிருக்கிறோமா என்ற கேள்வியை கேட்க வேண்டிய தருணத்தில் அமைப்புகளை அதிகார மையங்களை எதிர்ப்பதே புரட்சியென்றும் அப்புரட்சியே சமூகத்தின் தேவையென்றும் களப்பணியாற்றி வந்த நாம் அந்தக் களப்பணியில் வென்று அந்த அதிகாரங்களையும் வென்றெடுத்தவர்களாக இருக்கும் தருணத்தில் புரட்சிகரமான போராளிகளான நாம் நமது போராட்டத்தில் என்றும் ஓய்வதில்லை என்பதால் அதிகாரம் சார்ந்த அமைப்புகளுக்கு எதிரான போராட்டத்தை தொடரும் வேளையில் அப்போராட்டம் அதிகாரத்தை அடைந்தவர்களான எமது மீதே இருப்பதால் அதிகாரத்தை எதிர்ப்பது தன்னைத் தானே எதிர்ப்பதாகுமா என்ற எண்ண அலைகளை ஒரு போராளியாக கடந்து போராளியின் கடன் போராட்டம் மற்றும் போராட்டத்தை பதித்தலாகவே இருக்கவேண்டும் என்பதற்காக இக்கருத்தை இங்கு பதிவதன் அவசியத்தையும் இக்கருத்து பதிதல் கருத்துக் களத்தில் இலக்கிய வடிவம் பெற்று பின்நவீனத்துவ புனிதத்தை பெறுவது என்ற இலக்கிய அறிவு உடையவர்களாக காலத்தால் அழியாத இந்த இலக்கியங்களை எமது போராட்டத்தின் வலியை தன்மையை மக்கள் அறியக் கொடுப்பதற்காக மக்கள் கலைகளான கவிதைகள் பக்கம் கவனம் செலுத்தி புதுயுகம் காண புதுக்கவிதை படைத்து களப்பணி ஆற்றி வருங்கால் அப்பணியை எதிர்த்தும் எமது கருத்துக்களை மறுத்தும் வெறுத்தும் எழும் எதிர் கருத்துக்கள் மதிப்பேதும் கொடுத்து கவனிக்கப் படவேண்டியவையே அல்ல என்றாலும் குப்பைக் கூடைக்குள் போக வேண்டியவை என்றாலும் எதிர் கருத்துக்களை எதிர்ப்பவனே போராளி என்ற போராளிக்கான இலக்கணத்தை கைவிடாது எதிர்கருத்து கண்டவிடத்தில் எகிறி எம்கருத்துக்களை செலுத்தி எம் கருத்துக்களால் மட்டுமே மறுமலர்ச்சியும் புத்துணர்ச்சியும் புதுமையும் கொண்ட குமுதாயம் ஒன்றை அமைக்க முடியும் என்பதை இந்த குமுதாயத்திற்கு உணர்த்துவதற்காக கும்மிகளை பதிலுக்கு கும்மி அல்லது கும்பி இக்கும்முதலுக்கும் கும்புதலுக்கும் இலக்கிய வடிவம் பெற வேண்டி எம் மொழியின் வீச்சை குறித்தும் செறித்தும் பறித்தும் பயோனித்தும் மொழியை தன்வயப்படுத்துவதான ஒரு தோற்றத்தை கட்டமைப்பதற்காக தேவைப்படின் மொழியை சிதைத்தும் கதைத்தும் பதைத்தும் எழுதுவதும் இலக்கிய வடிவமே என்ற பின்நவீன அறிவு கொண்டும் மொழியும் பகுத்தே அறியப்படுவது என்பதும் பகுத்தறிவதே முதல் பொருள் என்னும் தன்மையால் யாவையும் பகுத்தும் வகுத்தும் கூட்டியும் கழித்தும் அறிந்து பதிந்து வரும் இக்கருத்துக்களை பகுத்தறிவோடு அணுகாது மதமென்னும் சாயம் கொண்டு அணுகி எம்மை இங்கு இழித்தும் பழித்தும் தோழர் உரைப்பது தகுமா என்ற சக தோழரின் கேள்விக்கு பதிலளிப்பதற்காக பகுத்தறிவும் கொள்கையும் கோட்பாடும் இணையும் இடம் எது என்பதை இணையத் தோழர்கள் அறிய வேண்டும் என்பதற்காக பதிவின் தேவை மிக முக்கியம் என்பதாலேயே தொடர்ந்து அத்தனை எதிர்ப்புகளையும் புறந்தள்ளி எதிர்ப்பின்னூட்டங்களை குப்பைக் கூடைக்கு தள்ளி எம் கருத்துக்களை யாம் பதிவதை எம்மிடம் பொருத்திப் பார்த்து எமது பின்னூட்டத்தை உமது அதிகார மையப் பார்வை கொண்டு புறந்தள்ளல் சரியா எனக்கேள்வி கேட்பது அதிகார மையத்திற்கு எதிரான குரலாகாது என்பதை உணர்ந்தே இருந்தாலும் எதிர்க்குரல் எழுப்பும் புல்லர்கள் தொலைந்து போன அதிகார மையங்களை மீண்டும் கட்டமைக்கும் குரூர எண்ணத்துடனேயே இக்கேள்வியை எழுப்புகிறார்கள் என்பதை நாம் அறியாமல் இல்லை என்பதும் இத்தகு கேள்விகளே அதிகாரத்தை யாம் பெற்ற பின்னும் போராளியாக தொடருவதற்கான நியாமான காரணங்களாக தொடருகின்றது என்ற நியாயத்தை நாம் தொடர்ந்து எமது பதிவுகளில் நிலை நிறுத்தியும் கட்டமைத்தும் தொடர்ந்து எழுதியும் தேவைப்படும் இடங்களில் பின்னூட்டம் இட்டும் தொடர்ந்து வந்திருக்கிறோம் என்பதை மீண்டும் மீள்பதிவு செய்து தொடர்ந்து தொடரும் எமது கருத்துக்கள் எம் மனதில் தொடர்ச்சியான அலைகளாக எமது போராட்டம் எமது இருப்பு எமது எழுத்தின் தேவை இதனால் நாட்டுக்கு ஏற்படும் சேவை இவற்றின் காரணமாகவே நாளொன்றுக்கு குறைந்தது மூன்று நான்கு பதிவுகளாவது இட்டு இந்த ஆதிக்க சக்திகளை எதிர்க்க வேண்டிய அவசியம் மிக முக்கிய காரணமாகிறது என்பதை மீண்டும் மீண்டும் சிந்திப்பதால் இந்த சமூகத்திற்காக சிந்திக்கும் எமது சிந்தனை இருபத்திநான்கு மணிநேரமும் தொடர்வதால் அந்த தொடர்ச்சியின் நீட்சியானது இந்தப் பதிவை போல் முற்றுப்பெறாதாக முற்றுப்புள்ளிகள் மறந்ததாக தொடர்ந்து போராட்டங்கள் பதிவுகள் பின்னூட்டங்கள் அவற்றால் அசைபடும் அதிகார மையங்கள் என எமது பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தொடர்ந்து கொண்டிருப்பேன் என்பதை இவ்விடத்தில் எந்த பாசாங்கும் கும்மியும் இல்லாமல் தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டிருப்பதானாது இந்த அமைப்புகளை கேள்வி கேட்பதற்கான எமது கடமையே என்பதும் அதிகார மையங்களை எதிர்க்கும் போராளியான நான் எனது தொடர்ச்சியான எண்ணங்களை எனது அடுத்த பதிவுகளில் தொடர்ந்து பகிர்ந்து கொள்வேன் என்பதை தெரிவித்துக்கொள்வதோடு............

Tuesday, March 11, 2008

பால்விலை உயர்வு - சில எதிரொலிகள்.

செய்தி: 13 ரூபாய் 75 காசாக இருந்த ஒரு லிட்டர் பாலின் விலை, 15 ரூபாய் 75 காசாக அதிகரித்தது.

----------

ஜெயலலிதா அறிக்கை: ஏழைகளின் நலனை சிறிதும் கருதாத அரசு என்று இந்த மைனாரிட்டி அரசு மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறது. பாலுக்கு அழும் பிள்ளை கூட பாலின் விலையை கேட்டு வாய் மூடும் அவலம் நேர்ந்திருக்கிறது. இந்த அரசு இனியும் தொடரவேண்டுமா. கருணாநிதி பதவி விலகவேண்டும்.

கலைஞர் கடிதம்: உடன்பிறப்பே. கழகத்தின் கட்டுக்கோப்பான ஆட்சியில் விலைகள் கட்டுக்குள்தான் இருக்கின்றன. பாலின் விலை அதிகரித்தது என்று கூப்பாடு போடுபவர்கள் அண்டை மாநிலங்களில் பாலின் விலை என்ன என்று பார்க்க வேண்டும். டெல்லி எருமைகள் மிகுந்த டெல்லியில் கூட பால் லிட்டர் 20 ரூபாய். பாலின் விலை சிறிதளவே உயர்ந்துள்ளது. இதனால் பால் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள 21 லட்சம் குடும்பங்கள் பயன்படுகின்றன என்பதை யாரும் எண்ணிப் பார்ப்பதாய் தெரியவில்லை. பாலின் விலைகுறித்து முழக்கமிடுபவர்கள் ஆந்திரா, கர்நாடாகா, கேரளாவுக்கு சென்று பாலின் விலை என்னவென்று முதலில் விசாரிக்கட்டும்.

--------

குமுதம் ஆனந்த விகடனில் அடுத்தவார ஜோக்குகள்.

கல்யாணமான புதிதில் கணவன்:
கமலா. நான் நம்ம முதலிரவுக்கு ஒரு சொம்பு பால்தானே கேட்டேன். இதுக்குபோய் வரதட்சணை புகார் கொடுப்பேன்னு நீ சொல்றது கொஞ்ச கூட நல்லாயில்லை.

--------

தலைவரே. உளர்றத நிறுத்துங்க. பால் விக்கறவங்களை பால் வியாபாரிங்கன்னு சொல்லலாம். ஆனா பாலியல் தொழிலாளிகள்னு சொல்லக்கூடாது.

---------

ஆசிரியர்: நீயெல்லாம் பசுமாடு மேய்க்கத்தான் லாயக்கு.
மாணவன்: ரொம்ப தாங்ஸ் சார்.

--------

பந்தியில்:

அது என்ன ஸ்பூன்ல கொஞ்சமா விடறாளே. நெய்யா?

இல்லை. பால் பாயாசம்.

-----

பால் விலையை குறைக்கறதுக்காக மூலிகைப் பால் கண்டுபிடிச்சதுக்கா உன்னை உள்ளே தள்ளிட்டாங்க.

ஆமா. நான் கண்டு பிடிச்சது கள்ளிப் பால்.

----

Sunday, March 09, 2008

ராதை என்றொரு பேதையும், உள்ளத்தில் கள்ளம் வைத்த கண்ணனும்

புள்ளினங்களும் ஆவினமும் நிறைந்த பிருந்தாவனம். அதன் அமைவிடம் அழகிய யமுனை தீரம். இனிய மாலை நேரம். நீராட கிளம்பினாள் ராதா. அவள் விருஷபானுவின் மகள். இன்று அயனாவின் மனைவி.

அந்த இனிய மாலைப் பொழுது அவளின் மனதில் எந்த மகிழ்வையும் தருவதாயில்லை. குயில்களையோ மற்ற புள்ளினங்களையோ அவள் கவனித்தாளில்லை. அவளது கால்கள் பழகிய அந்த வழி நடந்தன. அவள் மனம் அங்கிருப்பதாயில்லை. கண்கள் கண்ணீரை சிந்தி கொண்டிருந்தன. கண்ணீர் தாரை தாரையாக பெருக்கெடுத்தது. மனம் அவளுக்கு ஒரு வாரத்திற்கு முன் நிகழ்ந்த திருமணத்தை நினைத்தது. ஏன். ஏன் எனக்கு இது நிகழ்ந்தது. எனது மனம் கண்ணனிடம் சென்ற பின் மணமும் அவனுடனல்லவா நிகழ்ந்திருக்க வேண்டும். இன்று நான் அயனாவின் மனைவி. இன்னும் என் மனம் கண்ணனை ஏன் எண்ணுகிறது. கண்ணனை இன்னும் என் மனம் நினைப்பது சரியா. தவறா. இது முறையா. மனம் குழப்பமடைந்தது. ஆடைகளைந்து நீரில் இறங்கினாள். தண்ணீரின் குளுமை உடல் தொட்டது. உள்ளம் இன்னமும் தணலாய்த் தகித்தது.

இது என்ன முரளீதரனின் மூங்கிலின் இசை கேட்கிறதே. முகுந்தன் கண்ணன் இங்குதான் உள்ளான் போலும். ஏன் அந்தக் கண்ணன் நேரத்தில் வரவில்லை. ஏன் என்னை அவன் தடுத்தாட்கொள்ளவில்லை. எங்கே அவன்.

"ராதை." புல்லாங்குழலினினும் இனிய குரல். கண்ணன் நதியின் கரையில் சிரித்த வண்ணம் இருந்தான்.

"கண்ணா. நான் குளிக்குமிடத்திற்கு ஏன் வந்தாய்."

"நான் வரக்கூடாதா ராதா. நம் காதல் மறந்தாயா. கோபியர் கூட்டத்தில் நிலவு நீ. ஆயிரம் கோபியர் இருப்பினும் என்உள்ளம் உன்னிடமே. உன் உள்ளத்தில் உறைந்தவளே. நான் உன் காதலன்."

"காதலன். சிலகாலமாய் எங்கிருந்தாய் கண்ணா. எனது திருமணம் நடந்து முடிந்தது. என் வாழ்வும் முடிந்தது. ஏன் என்னை தடுத்தாட்கொள்ளவில்லை. இன்று நான் மாற்றான் மனைவி. இங்கு நில்லாதே. அது பாவம்."

"எது பாவம். ராதை. காதல் பாவமா. உனது திருமணத்தை நான் அறியவில்லை. குருகுலத்தில் என் மாயைகளை மறைத்து சாதாரண மாணவனாய் நானிருந்த காலத்தில் உன் திருமணம் நடந்தது. அறிந்திருந்தால் வந்து தடுத்திருப்பேன். இப்போதும் உனக்காகவே இங்கு வந்தேன். நமது காதலுக்கு உன்திருமணம் ஒரு தடையல்ல."

"ஏது பேசுகிறாய் கண்ணா. இன்று நான் மாற்றான் மனைவி. இனி உன்னை நினைப்பதும் பாவமன்றோ."

"ராதை நான் சூரியனென்றால் நீ ஒளி. நான் புல்லாங்குழலெனில் நீ காற்று. நான் தண்ணீரென்றால் நீ அதன் குளுமை. நான் உன்னை நினைப்பதும் நீ என்னை நினைப்பதும் எப்படிப் பாவமாகும்."

"கண்ணா...."

"பேதை ராதையே. மாயை பிரித்ததடி நம்மை. மாயை விலக்க நானே வந்தேன். இனி நம்மிடையே எது தடை.."

"கண்ணா.. ஆனால் என் கணவன்."

"ராதை. நான் பரம் பொருள். நீ என் ஜீவன். ஜீவன்கள் பிறப்பதும் பின் பரத்தில் கலப்பதும் இயற்கை. நான் யார். நீ யார் என்பதை புரிந்து கொள். உனது திருமணம். உனது கணவன் யாவும் மாயை. நீ நிஜம். நான் நிஜம். ராதையின்றி கண்ணனில்லை. கண்ணனின்றி ராதையில்லை. நீயும் நானும் ஒரே பொருளின் இருவடிவங்கள். ஒன்றின்றி ஒன்றில்லை. எழுந்து வா. என்னில் கலந்திடு. "

"கரையில் இருக்கும் ஆடைகளை எடுத்துப்போடு கண்ணா. அணிந்து கொண்டு வருகிறேன்."

"ஆடைகள் என் முன் உனக்கெதற்கு ராதை. மறையின் பொருளே உன் முன் நிற்க ஆடை கொண்டு எதை மறைப்பாய். எழுந்து வா." மாயவன் கள்ளப் புன்னகை பூத்தான்.

ராதை கண்ணனை பார்த்தாள். கார்முகில் வண்ணன் தன் மாயச்சிரிப்பு மயக்கியது. அவன் மேனிகண்டவள் மோகம் தாக்குற்றாள். கண்ணன் புல்லாங்குழல் எடுத்தான். இசை. இன்னிசை. ராதை தன்னை மறந்தாள். தான் யார் என்பது மறந்தாள். உலகம் மறந்தாள். எதிரே கண்ணன். மாயவன். இசை. உள்ளம் உருகியது. இது காதலா. காமமா. பக்தியா. அவள் நீர் நிலை விடுத்தாள். கண்ணன் தன் மார்பு சாய்ந்தாள். உன்னித்தெழுந்த ராதை தடமுலைகள்.. தீண்டி அணைத்த கண்ணன் கைவிரல்கள்... மயக்கம். மாயை. மாலை. மாலையின் வேளை. ஆதவன் மறைய, ஒளி குறைய, மனதில் மோகம் நிறைய. இவன் இறை. நான் இவனின் நிறை. இனி ஏது குறை. யமுனையின் வெள்ளத்தினும் பெரிது என் உள்ளத்து காதல். காதல் நிறைந்தது. கண்ணனை கடவுளென உணர.. தகித்த அவள் உள்ளம் குளிர.. உடல்கள் புணர.. இரு பொருள்கள் ஒரு பொருளாக.. பரமாத்மாவை ஜீவாத்மா அடைய...

விளையாட்டு தினமும் தொடர்ந்தது. தினமும் மாலையில் நீராட யமுனையை அடைந்தாள் ராதை. கண்ணனை கலந்தாள். பிறவிப்பயன் அடைந்தாள். அந்த இறைவனையே அடைந்த பின் அடையப்பெறும் பேறு ஏது இவ்வுலகில்.

ஒரு நாள் மாலை. ஜோடி கண்கள் கண்ணீரோடு இந்த விளையாட்டை பார்த்தன. அவை அயனாவின் கண்கள்... பார்த்தவன் அங்கிருந்து அகன்றான்.

"கண்ணா. ஊர் அறியாமல் உலகம் அறியாமல் உன்னுடன் இவ்விளையாட்டை எத்தனை நாள் நடத்துவது. ஊரறிய என்னை உன் மனையாளாக ஏற்றுக்கொள்." ராதை தன் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தினாள்.

"ராதை. நான் நாளை மதுரா செல்கிறேன். அதன் உரிமை என்னுடையது. அதை வெல்வேன். அதன் மன்னாக திரும்பி வருவேன் உன்னை மணப்பேன்."

"நிச்சயமாக.."

"நிச்சயமாக ராதா. எனது கண்ணே."

கண்ணன் தனது மாயா லீலைகளை தொடர்ந்தான். ராச லீலைகளால் அந்த மாலை நிறைந்தது. ராதை மீண்டும் மீண்டும் அந்தப் பரம்பொருளில் கலந்தாள்.




---

வீடு திரும்பிய ராதையை அவள்கணவன் பேசாது புறக்கணித்தான். மாற்றானோடு கலந்து திரும்பிய மனைவியை அவன் திரும்பியும் பார்த்தானில்லை.
பரம்பொருளோடு தன்னை தன் கணவன் பார்த்துவிட்டான் என்பதை ராதை உணர்ந்து கொண்டாள். அவள் அவனது புறக்கணிப்பை பொருட்படுத்தவில்லை.

கண்ணன் வருவான். மதுராபுரி மன்னாக. நான் மனம் விரும்பும் மணாளனாக. என்னை ஏற்பான். அவள் மனம் முழுதும் கண்ணன் நிறைந்திருந்தான்.

ராதையின் சேதி ஊருக்கு தெரிய வந்தது. புறக்கணிப்புகள் தொடர்ந்தன. பெற்றோரும் மற்றோரும் கூட அவளை பொருட்படுத்துபவராயில்லை.
கணவன் கைவிட தனியனானாள். யமுனையின் தீரத்தில் கண்ணனோடு களித்திருந்த இடங்கள் தோறும் அவள் சுற்றி வந்தாள்.

கண்ணன் வருவான். எனக்காக வருவான். காலங்கள் பறந்தன. வருடங்கள் உருண்டன. கண்ணன் வரவில்லை.

கண்ணன் பற்றிய செய்திகள் வந்தன. கண்ணன் மதுரா விடுத்து துவாரகை புகுந்தான். கண்ணனுக்கு மணமானது. ருக்குமணி, சத்யபாமா, ஜாம்பவதி, காளிந்தி, மித்ரபிந்தா, சத்யா, பத்ரா, லக்ஷ்மணா. எட்டு மனைவிகள் பட்ட மகிஷிகளாக. நரகனை கொன்று மீட்ட 16000 மங்கைகளின் மணாளனான் கண்ணன். கண்ணன் வருவான் என்று இன்னமும் ராதை காத்திருந்தாள்.

அவள் யெளவனம் தேய்ந்தது. நரை கூடியது. தோல் சுருங்கியது. ஆனால் மனம் இன்னமும் கண்ணன் வருவான் என்று நம்பியது. கண்ணன் வருவான். அவன் பரந்தாமன். அவன் வந்து தீண்ட தன் இளமை திரும்பும் என்று நம்பினாள்.

சமூகம் அவளை முற்றிலும் நிராகரித்து விட்டதால் அவள் காட்டிலேயே வாழ்ந்தாள். கானகம் முழுவதும் கண்ணன் மீது கொண்ட காதலால் அவள் சுற்றி வந்தாள். கண்ணா கண்ணா என்று கதறினாள். கண்ணன் மட்டும் வரவேயில்லை.
ஒரு நாள் பரமாத்மாவையே நினைத்திருந்த அவள் ஜீவாத்மா உடல் உகுத்தது.
கண்ணனுக்கு என்று மட்டுமே அவள் அர்ப்பணித்த அவள் தேகத்தை காகங்களும் கழுகுகளும் நரிகளும் பங்கிட்டுக்கொண்டன.

கண்ணன். அவன் கடைசிவரை வரவேயில்லை.

----------

Thursday, March 06, 2008

நெறி தவறிய சீதையும், நெருப்புக் குழியிறக்கிய இராமனும்.

மோகத்தீ மூட்டும் மூன்றாம் ஜாமம். வெண்ணிலவும் தென்றலும் மன்மதனின் தொழிலுக்கு துணை செல்ல தன் அந்தப்புரத்தில் மகிழ்ந்திருந்தான் மன்னன் இராமன். இராவணனை வில்லெடுத்து வென்றவன் மன்மதனை வெல்ல சீதையை நாடினான். இதுவும் ஒரு போர். யுத்தக்களத்தில் அல்ல. மஞ்சத்தில். மோகம் மன்னனையும் மங்கை சீதையையும் ஆரத்தழுவியது. மோகம் தலைக்கேற உடல்கள் இயங்க, முனகல் ஒலிகள் கிளம்பின.

சீதை முனகினாள். "ஆ... இராவணா...".

இராமனின் இயக்கங்கள் நின்றன. காது பிழை செய்யவில்லையே. இராமனின் பத்தினி "இராவணா" என்று முனகுகிறாள்.

சீதை தன் நாக்கை கடித்துக் கொண்டாள். வார்த்தை வாய் தவறி வந்து விழுந்திருந்தது. இராமனின் கண்கள் சினம் கக்கின.

"உடலால் என்னைத் தழுவினாய். உள்ளத்தை யாரிடம் கொடுத்தாய்."

சீதை இனியும் மறைக்க முடியாதவள் ஆனாள். "எனது உள்ளத்தால் இராவணனைத்தான் நினைத்தேன்."

"இது என் செய்தாய். இப்பிறப்பில் என் மனதாலும் இன்னொரு மங்கையை நாடாத மாபெரும் விரதம் ஏற்ற என் மனைவி மாற்றானை மனதில் கொண்டாளா. உடலால் என்னைத் தழுவியவள் உள்ளத்தால் மாற்றானை தழுவினாளா. நீயும் பத்தினியா?"

"நான் பத்தினிதான். தீ இறங்கி நிரூபித்திருக்கிறேன்."

"பேசாதே. மாற்றானிடம் சிறைப்பட்ட மனைவியை ஏற்பதற்காக நான் நடத்திய நாடகம் அது. என் மீது பழி ஏற்படாதிருக்க. எனது கெளரவத்திற்காக. அந்த நாடகத்தில் நீயும் நன்றாகவே நடித்தாய்."

"சாத்திரங்களின் படியும் விதிகளின் படியும் நடக்கும் உத்தமரே. அந்த நாடகத்தில்தான் தங்கள் உண்மையுருவை தரிசித்தேன். உங்களை விடவும் சகலவிதங்களிலும் உயர்ந்தவன் ஒருவனை கண்டேன். மனம் சஞ்சலம் கொண்டாலும் தர்மத்தின் பக்கம் நின்று அவனை விலக்கினேன். உடலளவில் நான் உத்தமிதான். உள்ளம்தான் சஞ்சலம் கொண்டது."

"சீ. உள்ளத்தாலும் அவனை நீ நினைக்கலாமா.".

"மென்மையை மட்டும் தங்களிடம் கண்ட என் பெண்மை, பேராண்மையை அவனிடம் கண்டதால் மனம் சஞ்சலம் கொண்டது. மன்னியுங்கள்.."

"இதை எப்படி மன்னிக்க முடியும். உடலால் நீ மாசுபடவில்லை என்று சாதித்தாலும் மனத்தால் மாசுபட்டவளே. நீ என் முகத்தே விழிக்காதே."

"நான் செய்தது தவறுதான். மன்னியுங்கள். மாற்றானை மனதில் கொண்டது தவறு. இனி மனதாலும் அவனை நினைக்க மாட்டேன்."

"உன்னை எவ்வாறு நம்புவதே. என்னை விட்டு விலகிப் போ."

"போ என்று சொன்னால் எங்கு போவேன். இது பெருங்குற்றம். இந்த குற்றம் புரிந்தேன் என குற்றம் சாட்டினால் இந்த குற்றத்தை கொண்டவளாக என் தந்தை வீட்டிற்கும் செல்ல முடியாதே."

"எங்கேனும் போ. எனது கோபம் எல்லை கடக்குமுன் போய்விடு."

"சுவாமி.."

"போ. மறுமுறை என்முகத்தில் விழித்தால் அந்தக் கணமே உன்னைக் கொல்வேன்."

"மன்னியுங்கள்."

"இப்போது உன்னைக் கொல்லாமல் விடுவதே அதிகம்."

இராமன் உறுதியுடையவனாய் நின்று இருந்தான்.

அழுது கண்ணீர் வற்றிப்போன சீதை மரக்கட்டையாய் வெளியேறி கானகம் புகுந்தாள்.

--------------

ஆண்டுகள் பல கடந்தன.

தனது புகழை பாடிய சிறுவர்களை இராமன் பார்த்தான். அவனுள் அன்பு சுரந்தது.

"குழந்தைகாள். நன்று பாடினீர். யார் உமது பெற்றோர்."

"மன்னா. அவர்கள் தங்கள் புதல்வர்கள். எனது வயிறு உதித்தோர்." சீதை தோன்றினாள்.

"நீயா.. எனது முன்வர என்ன துணிச்சல்."

"இன்னும் உங்கள் மனம் மாறவில்லையா."

இராமன் கல்லாயிருந்தான்.

"இவர்கள் தங்கள் புதல்வர்கள். தங்களிடம் ஒப்புவிக்கவே வந்தேன்."

"எனது புதல்வர்கள் ?"

"ஆம்."

"இவர்கள் எனது புதல்வர்கள்தான் என்பதற்கு என்ன சாட்சி.".

"ஐயோ." சீதை தனது காதுகளை பொத்திக் கொண்டாள்.
"இந்த வார்த்தைகளை கேட்டும் நான் உயிர் வாழ வேண்டுமா. ஏ பூமா தேவி. நீ பிளந்து என்னை உள்ளிழுத்துக் கொள்ளக் கூடாதா."

இராமன் ஒரு குரூரப் புன்னகையை வெளிப்படுத்தினான்.

"சீதை. உனது வேண்டுதல் நிறைவேறும்."

பூமியில் குழியொன்று தோண்டப்பட்டது. சீதை அதில் உயிரோடு இறக்கப்பட்டாள். இராமன் ஒரு கைப்பிடி மண்ணை அள்ளிப் போட்டான்.

"பூமித்தாயே. உனது புதல்வியை ஏற்றுக்கொள்."

தொடர்ந்து மண் கொட்டப்பட்டது. சீதை புதையுண்டாள்.

பூமாதேவியால் உள்ளிழுத்துக் கொள்ளப்பட்ட தன் மனைவிக்காக இராமன் தன் மகன்களோடு அழத் துவங்கினான்.

Saturday, March 01, 2008

வடாபாவ் தேசமும் கோதுமைநிற அழகியும் காதலும்

"அவளைப் பார்க்கும் போது என்னோட உடம்புல எல்லா ஹார்மோனும் அலர்ட்டாயிடுது. அளவுக்கு அதிகமா எல்லாம் வேலை செய்யுது. இது காதல்தான். நீ என்ன சொல்ற நண்பா."
கேட்டவன் என் அலுவலக மற்றும் அறை நண்பன் சுரேஷ் ஆர். என்கிற சுரேஷ் ராஜரத்தினம்.

"இருக்கலாம். நண்பா." நான்.

"காதலுக்கான ஹார்மோன் என்னடா. அட்ரீனலின் இல்லாட்டி பிட்யூட்டரி."

"இரண்டும் இல்லை. ஆணா இருந்தா ஆண்ட்ரோஜன். பெண்ணா இருந்தா ஈஸ்ட்ரோஜன்."

"ஆங். ஆண்ட்ரோஜன். காதல் எனக்குள்ள சுரக்க ஆரம்பிச்சிருச்சி நண்பா."

"எனக்கு வேற ஒண்ணுதான் அளவுக்கு அதிகமா சுரக்கறதா தெரியுது."

"என்னது."

"ஹார்மோன் இல்லை. சலைவா. தமிழ்ல சொல்லணும்னா ஜொள்ளு."

"ஹி.. ஹி." வழிந்தான்.

அவனை இப்படி வழிய வைத்தவள் ஸ்ருதி ராஜ்தான். கோதுமை பிரதேச செழிப்பில் மிளிர்ந்த கோதுமை நிறத்தவள். அலுவலகத்தில் கவன ஈர்ப்பு பெற்ற கட்டழகி. இந்த ஈர்க்குச்சிக்கு அவள் மேல் காதலா. இருக்கட்டும்.
இந்த மும்பை நகரில் தமிழ்பேச தெரிந்தவன் அறைநண்பனாக வேண்டும் என்பதற்காகவே இவனையெல்லாம் பொறுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

"நண்பா. நீ தான் என் காதலுக்கு உதவி பண்ணனும்."

"நான் என்னடா பண்ணனும். தூது போகனுமா. கணையாழியை கழட்டிக் கொடு. எத்தனை தடைகள் இருந்தாலும் அத்தனையும் தாண்டி சென்று அவளிடம் உன் காதலை சொல்கிறேன்."

"அதெல்லாம் வேண்டாம். காதலை சொல்லுறத எல்லாம் நான் பாத்துக்கறேன். அவகிட்ட பேச நீ எனக்கு இந்தி கத்துக்கொடு போதும்."

"உனக்கு இந்தி சொல்லித் தரணுமா. கொஞ்சம் கஷ்டம் முயற்சி பண்றேன்."

"தாங்ஸ். அப்புறம் இரண்டாவது உதவி. நீ அவகிட்ட இந்தியில கடலை போடறதை நிறுத்தணும்."

"இது ரொம்ப ரொம்ப கஷ்டம். நம்ம ஆஃபீஸ்ல இருக்கறதிலேயே உருப்படியான ஃபிகர் அது ஒண்ணுதான். இருந்தாலும் ஃபிரெண்டு நீ கேட்டுட்ட. உனக்காக முயற்சி பண்ணுறேன். ஒரு நண்பனுக்காக இந்த தியாகத்தை கூட நான் பண்ண மாட்டேனா என்ன."

"டேய்..."

"சரி. சரி. ஒழிஞ்சித் தொலை. உனக்காக விட்டுக் கொடுத்துட்டேன்."

"அது போதும் நண்பா. எனக்கு இந்தி சொல்லிக் கொடு. இந்தியில பேசியே காதலை வளர்க்கிறேன். ஆமா காதலுக்கு இந்தியில என்ன"

"ப்யார். இஷ்க். முஹப்பத். மூணுமே காதல்தான்."

"ஒண்ணு ஒண்ணா சொல்லுடா. எழுதிக்கிறேன்."

"சொல்லித் தொலைக்கறேன். என்ன பண்றது. மஜ்பூரி."

"இப்ப என்னமோ சொன்னியே அது என்ன"

'எது."

"ஏதோ பேல்பூரி மாதிரி சொன்னியே."

மஜ்பூரி என்ற வார்த்தை எனக்கு பழக்கத்தில் வந்திருந்தது. இதற்கான தமிழ்வார்த்தை என்ன என்று மண்டையை உடைத்துக் கொண்டு "(காலத்தின்) கட்டாயம். கம்பல்ஷன்." என்று ஒரு வழியாக மொழிபெயர்த்தேன்.

அவனுக்கு காதல் ஆரம்பித்தது. எனக்கு தலைவலி.

"எல்லாம் சரிடா. அவளுக்கு உன் மேல காதல் வரும்னு நினைக்கிறாயா."

"உனக்கு காதலோட முதல் விதி தெரியுமா."

"அது என்னடா."

"எந்த ஒரு பெண்ணும் காதல் விசை அவள் மீது செலுத்தப்படாத வரை காதலற்ற நிலையிலும், காதல் செலுத்தப்பெற்றால் காதல் இயக்கத்திலும் தொடர்ந்து இருக்கிறாள். இதுதான் காதல் நிலைமம்."

"தெய்வமே. ஒரு முடிவோடதான் இருக்கே. நடத்து."

அவன் நடத்தத் துவங்கினான்.

ஸ்ருதியிடம் நெருங்கி பழகத் துவங்கினான். அவளுக்காக சின்னச் சின்ன உதவிகள் செய்யத் துவங்கினான். இருவரையும் ஒன்றாக நிறைய பார்க்க முடிந்தது. திங்கட்கிழமைகளில் வடாபாவ் சாப்பிட அழைத்துச் சென்றான். செவ்வாயில் பாவ் பாஜி. புதனில் தஹி சேவ் பூரி. வியாழனில் போஹா. வெள்ளிக் கிழமை ரகடா பட்டீஸ். அவனது காதல் நாளொரு பொழுதும் தினமொரு சாட் ஐட்டமுமாக வளர்ந்தது.
ஸ்ருதிதாசன் என்ற பெயரில் இணையத்தில் கவிதைகள் எழுதினான். முப்பது நாட்களில் இந்தியுடன் முட்டி மோதினான். இதற்கென்ன அர்த்தம் அதற்கென்ன அர்த்தம் என்று என்னை பின்னி பெடலெடுத்தான். பிராண்டி எடுப்பதால்தான் ஃபிரெண்டு என்று சொல்கிறார்கள் போலும்.

மாதங்கள் மூன்று ஓடி மறைந்தன.

"நண்பா. இந்த இந்தி கவிதை எப்படி." என்றான்.

ஆகா. இத்துணை நாளா தமிழில் மட்டும் கவிதை எழுதியவன் இப்போது இந்தியிலுமா.

கவிதையை படித்தேன்.

"ஜப் தூ ஹன்ஸ்தி ஹை ஹஜாரோன் ஃபூல் கில்தி ஹை.
ஜப் தூ போல்தி ஹை பான்சுரி பஜ்தி ஹை."

"தமிழ்ல சொல்லவா." சொன்னான்.

"நீ சிரித்தால் ஆயிரம் பூக்கள் மலர்கின்றன.
நீ பேசினால் புல்லாங்குழல் ஒலிக்கிறது."


"அபாரம்டா. பன்மொழி புலவனாயிட்ட. கவிதையில கலக்கற போ."

சிரித்தான்.

"அதெல்லாம் சரிடா. உன் காதலெல்லாம் எப்படிப் போயிட்டிருக்கு. கனெக்ட் பண்ணி காதல் கரெண்டு கொடுத்து பல்பு பிரகாசமா எரியுது போல."

சிரித்தான்.

"காதலை சொல்லிட்டியா."

"இல்லைடா. காதலோட இரண்டாவது விதியை கிட்டத்தட்ட இப்பத்தான் அப்ளை பண்ணி முடிச்சிருக்கேன்."

"அது என்னடா இரண்டாவது விதி."

"காதல் விசையானது காதலின் எடை மற்றும் காதல் முடுக்கம் இரண்டிற்கும் நேர்விகிதத்தில் இருக்கும். இதுதான் இரண்டாவது விதி. அவளுக்குள்ள காதல் விசை வர்ரதுக்காக என்னோட காதலில கொஞ்சம் கொஞ்சமா முடுக்கத்தை கூட்டி காதலின் எடையையும் அதிகரிச்சுக்கிட்டே வந்திருக்கேன்."

"விளங்கின மாதிரிதான். இப்ப என்ன செய்யப் போற."

"நாளைக்கு அவளோட பிறந்த நாள். காதலின் மூன்றாவது விதியை செயல்படுத்தப் போகிறேன். காதலை சொல்லப் போகிறேன்."

பரிசாக வாங்கி வைத்திருந்த மோதிரத்தை காட்டினான். அழகாக காதலின் சின்னம் பொறித்து இருந்தது அதில்.

"அது என்னடா மூன்றாவது விதி."

"காதலைச் சொல்லுதல். எந்த ஒரு காதல் விசைக்கும் சமமான அதே போன்ற எதிர் காதல் விசை உண்டு."

"சரிதான்."

"நான் எவ்வளவு விசையோட நாளைக்கு காதலை சொல்லப் போறனோ. அதே விசையோட அவளும் பதிலுக்கு காதலை சொல்லுவா."

"வாழ்த்துக்கள். நண்பா. உன் காதல் கொடி அவள் உள்ளத்தில் பறக்கட்டும். ஆல் தி பெஸ்ட்."

அடுத்த நாள் அவன் மகிழ்ச்சியாக தன் காதலைச் சொல்ல கிளம்பி சென்றான்.

----------------

மாலை வீடு திரும்பியவன் கண்கள் கலங்கியிருந்தன.

"என்னடா. என்ன ஆச்சு."

"முடிஞ்சு போச்சு. எல்லாம் முடிஞ்சு போச்சு."

"என்னடா சொல்றே."

"அவள் கிட்ட காதலை சொன்னேன். வாட் ஈஸ் திஸ் ஃபூலிஷ்னஸ். யூ ஆர் மை பெஸ்ட் ஃபிரெண்டுன்னு சொன்னா."

"அச்சச்சோ. கவலைப்படாத. எப்படியும் உன் காதலை அவ புரிஞ்சிப்பா. ஏத்துப்பா."

"இல்லைடா. முக்கேஷ்னு ஒருத்தனை அறிமுகப்படுத்துனா. அவனைத்தான் இன்னும் மூணு மாசத்துல கல்யாணம் பண்ணிக்கப் போறாளாம். வேலைய கூட ரிசைன் பண்ணப் போறாளாம்."

கேட்ட எனக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. "நண்பா...." பேச வாயெடுத்தேன்.

"இல்லை நண்பா. என்னை கொஞ்சம் தனியா விடு. எனக்கு கொஞ்சம் அழணும்."

புரிந்து கொண்டு அமைதியானேன். கவலையின் கனத்த மெளனம் இருவருக்கும் இடையில்.

அவன் தன் காதலை கண்ணீரால் கழுவித் தள்ளும் முயற்சியில் இறங்கினான்.

உள்ளத்தில் தோன்றி உயிரில் உறைந்த காதலை அத்துணை எளிதில் உதறித் தள்ள முடியுமா.

கண்ணீரில் கரைந்து காணாமல் போவதோ காதல். காலம் அவனுக்கு பதில் சொல்லக்கூடும்.

-----------------

Tuesday, February 26, 2008

செல்போனில் பெண்ணை படம் பிடித்து

"ஏய். மிஸ்டர். என்னை எதுக்கு போட்டோ எடுத்தீங்க."

"நான் உங்களை போட்டோ எடுக்கலையே."

"பொய். ஒரு அழகான பொண்ணு தனியா போகக் கூடாதே. பின்னாடியே வந்து மொபைல்ல போட்டோ எடுக்கறது. பொறுக்கி."

"மிஸ். வார்த்தைய அளந்து பேசுங்க."

"உனக்கென்ன மரியாதை. கொண்டா அந்த மொபைலை."

அவனிடம் இருந்து அந்த மொபைலை அவள் பறித்தாள். புகைப்பட ஃபோல்டரை திறந்து முதல் படத்தை பார்த்தாள். அவளது படமேதான்.

"மிஸ்டர் இப்ப இதுக்கு என்ன சொல்றீங்க."

"நான் உங்களை எடுக்கணும்னு எடுக்கலை. நான் எடுத்த போட்டோவில நீங்க வந்தது தற்செயல்."

"என்ன கதை விடறீங்க."

"மிஸ். மத்த போட்டோக்களையும் பாருங்க. நான் இங்க இருக்கற ஒவ்வொரு புக் ஸ்டாலையும் படம் பிடிச்சிட்டு இருக்கேன். அந்த புக் ஸ்டாலை படம் பிடிச்சப்ப நீங்க அதுல வந்தது யதார்த்தமா வந்ததுதான்."

அவள் மத்த போட்டோக்களை பார்த்தாள். ஒவ்வொரு புத்தக நிலையத்தின் படமும் பதிவாகி இருந்தது. முல்லை பதிப்பகம், மருதம் பதிப்பகம் என..

"மிஸ். இந்த புக் ஃபேர்ல இருக்கிற ஸ்டால்களைத்தான் படம் பிடிச்சிட்டுருக்கேன். உங்களை இல்லை."

"ஆமா.. ஆனா இத்தனை புக் ஸ்டாலையும் படம்பிடிச்சு.. எதுக்கு."

"ஐ அம் ரைட்டிங் பிளாக். தமிழ்ல. இந்த புத்தகக் கண்காட்சியை பத்தி ஒரு ரைட் அப்புக்காக இந்த படங்களை எடுத்தேன்."

"ஓ. ஐ அம் சாரி."

"பரவாயில்லை. வேணுமின்னா நீங்க இருக்கற படத்தை டெலீட் பண்ணிட்டு மொபைலை கொடுங்க."

"இட். ஈஸ் ஓக்கே. இந்தாங்க."

"தாங்ஸ். மிஸ்."

"சத்தம் போட்டு உங்க கையில இருந்து மொபைலை எல்லாம் பிடுங்கி... ஐ அம் ரியல்லி சாரி."

"நோ பிராப்ளம்."

"இஃப் யூ டோண்ட் மைண்ட். நாம ஒரு காபி சாப்பிடலாமா."

முன்பின் தெரியாத தன்னை காபி சாப்பிட அழைக்கும் அவளது தைரியம் அவனுக்கு ஆச்சரியமளித்தது.

"ஓக்கே." இருவரும் அங்கிருந்த கேண்டீனுக்கு சென்றார்கள்.

"மிஸ் உங்க பெயர் என்னன்னு நான் தெரிஞ்சிக்கலாமா."

"அர்ச்சனா." சிரித்தாள்.

"என் பெயர்.." அவன் ஆரம்பித்தான்.

"கிள்ளி வளவன்." அவள் முடித்தாள்.

"என் பெயர் உங்களுக்கு எப்படித் தெரியும்."

"வளவன் நான் உங்க பதிவுகள் எல்லாம் படிக்கறதுண்டு. உங்க பதிவுல உங்க புகைப்படம் எல்லாம் பார்த்திருக்கேன்."

"ஓ.."

"நீங்க புக் ஸ்டாலைத்தான் படம் எடுக்கறீங்கன்னு எனக்கு தெரியும். சும்மா கலாய்ச்சேன்."

"நீங்க..."

"நான் உங்க ரசிகை. ஒரு வருடத்துக்கு மேல உங்க பதிவெல்லாம் படிக்கறேன். உங்க பதிவுல முதல் பின்னூட்டம் எப்பவுமே நான் தான் போடுவேன்."

"நீங்க... மாணிக்க மலர்."

"ஆமா. மாணிக்க மலர் அப்படின்ற பெயர்ல உங்களுக்கு பின்னூட்டம் போடுவது நான்தான். நாம மின்னஞ்சல் மூலமா ரொம்பவே பேசியிருக்கிறோம். உங்களைப் பத்தி எல்லாம் எனக்கு தெரியும். என்னைப் பத்தி எல்லாமே உங்களுக்கும் தெரியும் என்னோட பெயரைத்தவிர.."

"வாவ். உங்களை இப்படி சந்திச்சது ஆச்சரியம்."

"எனக்கும். உங்களை இப்படி புத்தகக் கண்காட்சியில் பார்ப்போம்னு நினைக்கலை. சும்மா கலாய்ச்சேன். சாரி."

அவன் சிரித்தான்.

அவர்களுக்கு இடையே நீண்ட ஒரு மெளனம் நிலவியது.

அவள் அதை உடைத்தாள். "உங்க ரசனைகள் என்னுடைய ரசனைகள் எல்லாமே ஒத்துப் போகுது. எழுத்தையும் தாண்டி ஏதோ ஒண்ணு இருக்கிறதா உணர்கிறேன்."

"நானும்." என்றான் அவன்.

அவர்கள் கண்கள் பேசிக்கொண்டிருந்தன.

"காதலை பின்னூட்டத்தில சொல்ல முடியாது. நேர்லதான் சொல்லணும்."

"அப்ப சொல்லிடலாமே."

காதல் அவர்கள் இருவருக்கும் இடையே கயமை செய்து விளையாட துவங்கியது.

Monday, February 25, 2008

கோணிக்குள் என்ன இருக்கிறது.

"தோ. பார்றா. ஒரு கோணி.".

"அண்ணாத்தை இந்த கோணிக்குள்ள இன்னா கீது."

"நல்ல கிரெளடு இருக்கிற செண்ட்ரல் ஸ்டேஷன்ல வாசல்ல இந்த கோணியை விட்டுட்டு யாரு போயிருப்பாங்க."

"ஏதாவது கிராமத்து டிக்கட் கோணியை வச்சுட்டு எங்கயாவது டீ சாப்பிட போயிருக்கும். வா அண்ணாத்தை நாம போவலாம்."

அந்த இரண்டு போர்ட்டர்களும் அங்கிருந்து அகன்றார்கள்.

செண்ட்ரல் ரயில்வே நிலையத்தின் மாலை நேரம். அந்த கோணி கவனிப்பாரற்றுக் கிடந்தது.

-----------

அரை மணி நேரம் கழித்து...

"அண்ணே இந்த கோணி இங்கயே இருக்கு பாருண்ணே."

"இத இங்க வச்ச புண்ணியவான் யாருன்னு தெரியலையே."

"திறந்து பார்ப்பமா அண்ணே."

"அட. இவனே ஏதாச்சும் ஏடா கூடமா இருக்கப் போதுடா."

அந்த சணல் கோணி ஏதாலோ நிறைந்து கட்டப்பட்டு துருத்தி கொண்டிருந்தது.

"போலீஸ்ல சொல்லுவமா.".

----------

"சார் இந்த கோணிதான். சார். பாம் ஏதாச்சும் இருக்குமா சார்"

"யாரும் கிட்ட போகாதீங்க. அலர்ட்."

"யோவ் கான்ஸ்டபிள். கிரவுட் இந்த பக்கம் வராம பாத்துக்கய்யா."

அதற்குள் மக்களுக்கு கோணியில் பாம் இருக்கும் செய்தி பரவியது. எல்லோரும் அதை ஒரு அச்சத்தோடு பார்த்தார்கள். கிரவுட் வரக்கூடாது என்று சொன்ன பிறகுதான் கோணியை பார்ப்பதற்கு அதிக கிரவுட் சேர்ந்தது.

"சார். ஒரு வேளை அந்த கோணியில பாம் இல்லைன்னா."

"யோவ். இப்படி அனாமத்தா ஒரு கோணி. அதுவும் சரக்கு குடோன் பக்கத்துல கூட இல்லாம, இப்படி ஜனங்க நடமாடுற இடத்துல இப்படி தனியா இருக்குன்னா... ஏதாச்சும் இருக்கும்யா."

"யாராச்சும் தெரியாம போட்டிருந்தா. எவ்வளவு கிராமத்து ஆளுங்க கோணியோட வாராங்க போறாங்க."

"ஏன்யா இது பப்ளிக் ப்ளேஸ். இந்த இடத்துல இப்படி ஒரு கோணியை கொண்டாந்து போட்டுட்டு போயிருக்குன்னா கட்டாயம் அதுக்குள்ள விவகாரமா பாம் ஏதாவது இருக்கலாம்."

"ஆர்.பி.எஃப். பாம் ஸ்குவாடுக்கு சொல்லியாச்சு. சார்."

-------

மக்கள் பய பீதியோடு அந்த கோணியை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ஒரு கோணி. ஒரு அழுக்கு சணல் கோணி.

எல்லோரிடமும் அதைப் பற்றியே பேச்சு.

இரண்டொரு நிருபர்கள் எட்டி பார்த்தார்கள். செய்திகளை முந்தித் தரும் சேனல் ஒன்றும்.

செய்தி கசியத் துவங்கியது. பதட்டம் நிலவியது. சிலர் பயத்தில் ரயில் நிலையத்தை விட்டு ஓடத் துவங்கினர்.

மோப்ப நாய்கள் வந்தன.

மெட்டல் டிடக்டர்களோடு இருவர். மெட்டல் டிடக்டர் வைத்துப் பார்த்தனர்.

சுற்றியிருந்தவர்கள் நாடித் துடிப்பு எகிறியது. மெட்டல் டிடக்டரில் எதுவும் தெரியவில்லை.

அந்த போலீஸ்காரர் வேர்த்து வழியும் தன் நெற்றியை துடைத்துக் கொண்டு கோணியைத் திறந்தார் படு ஜாக்கிரதையாக.

"சார். எருமட்டை சார்,"

"என்னது."

"பசுஞ்சாண எருமட்டை சார்." அந்த கோணி முழுதும் எருமட்டைகள் வட்டவட்டமாக...

எல்லோரும் பெருமூச்சு விட்டார்கள்.

"ஒரு ஒண்ணுமில்லாத கோணியை இந்த அளவுக்கு பில்ட் அப் கொடுத்து விட்டீங்களேய்யா."

"கோணி. கோணிக்குள்ள காய்ஞ்சுகோன எருமட்டை சாணி. இந்த விஷயத்தை ஏணி வெச்சு ஏத்திவிட்டுட்டீங்களேய்யா."

"நான் அப்பவே சொன்னேன் இது ஒரு சாதாரண கோணிதான்னு."

"ஆமாய்யா இப்ப சொல்லுங்க. பப்ளிக் ப்ளேஸ்ல இதோ கோணி... அதோ கோணின்னு கிளப்பிவிட்டுட்டு.... எவனோ போணியாகாத கோணியை இங்க வந்து போட்டுட்டு போயிருக்கான்.. கண்டுக்காம போவீங்களா."

அங்கு சகஜநிலை திரும்பியது.

"செண்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்ல அதுவும் நிறைய பப்ளிக் நடமாடுற எடத்துல இந்த மாதிரி கோணியெல்லாம். இனிமே கோணியை ரயில்வே ஸ்டேஷன் மாதிரி பப்ளிக் பிளேஸ்ல கொண்டு வரவே தடை விதிக்கணும்." ஒருவர் கருத்து தெரிவித்தார். இன்னொருவர் ஆமாம் போட்டுக் கொண்டிருந்தார்.

Friday, February 22, 2008

மனு ஸ்மிருதி என்ன சொல்கிறது

மனு தர்மம். மனு நீதி அப்படின்னு நிறைய பேர் சொல்லி கேட்டு இருக்கோம். அது என்னன்னு தெரியாம இருந்தது.

மனு நீதியோட ஆங்கில ஆக்கம் இணையத்துல படிக்க கிடைச்சது.

படிச்சு பார்த்தா. அது மனு தர்மமா தெரியலை. அதர்மமா தெரியுது.

உலகம் ஆரம்பத்துல இருட்டா தண்ணியில மூழ்கி கிடந்ததாம்.

அப்போ சுயம்புவா ஒரு பொன்னிற முட்டை சூரிய வெளிச்சத்தோட தோணுச்சாம். அதுலதான் பிரம்மன் இருந்தாராம். நாரா அப்படின்ற தண்ணியல அயணம் (வசித்தல்) செஞ்சதால அவருக்கு நாராயணா அப்படின்னும் பேராம்.
அப்பாலிக்கா அந்த முட்டை உடைஞ்சு அவர் வெளிய வர மேல் பகுதி சொர்க்கமாவும், கீழ்ப்பகுதி பூமியாவும் ஆச்சாம். அப்புறம் அவர் உலகத்தை படைக்க ஆரம்பிச்சாராம்.
நெருப்பு, காத்து, சூரியன் இதுல இருந்து அவர் ரிக், யஜீர், சாம வேதங்களை எடுத்து அதும்படி சிருஷ்டிய ஆரம்பிச்சாராம்.
அப்புறம் பஞ்சபூதங்கள், காலம், நல்லது கெட்டதெல்லாம் படைச்சுட்டு மனுசப்பயலை படைக்கணும்னு முடிவு பண்ணாராம்.

பிராமணன், ஷத்ரியன், வைசியன், சூத்திரன் இவர்களை முறையே வாய், கை, தொடை, கால் இதிலிருந்து படைச்சாராம். (கதையா இருக்கே ?)

அப்புறம் மரிகி, அத்ரி, ஆங்கிரஸ், புலஹா, கிருது, பிரகதேஸ், வஷிஸ்டர், நாரதர் எல்லாரையும் படைச்சாராம்.

அப்புறம் யக்ஷர்கள், ராக்சசர்கள், அசுரர்கள் (யார் இவங்க?), கந்தர்வர்கள், அப்சரசுகள், நாகர்கள் எல்லாரையும் படைச்சாராம்.
கூடவே புல், பூண்டு பூச்சி, கால்நடை, வனவிலங்கு, பறவை. பாம்பு, மீனு எல்லாம் உட்கார்ந்து படைச்சிருக்காரு.

கிருத, திரேத, துவாபர கலியுகத்தை பத்தி அப்புறம் குறிப்பு இருக்கு.

பிராமணனோட தொழில் வேதத்தை படித்தல் சொல்லி கொடுத்தல்.
ஷத்ரியனோட தொழில் ஜனங்களை காத்தல், பரிசளித்தல் (யாருக்கு), வேதம் படித்தல்.
வைசியன் தொழில் கால்நடை பராமரிப்பு, வாணிகம், உழவு, பரிசளித்தல் (யாருக்கு), வேதம் படித்தல்.
இவங்க மூணு பேருமே பூணூல் தரிக்கலாம். முறையே பருத்தி, சணல், மற்றவை.

சூத்திரனுக்கு தொழில் ஒண்ணே ஒண்ணுதான். இவங்க மூணு பேருக்கும் சேவை செய்தல். அவன் வேதம் படிக்க கூடாது.

ஏன்னா தொப்புளுக்கு மேல இருக்கற பகுதி புனிதம். சுயம்புவான கடவுளுக்கு அதுல இருந்து பிறந்தவங்க புனிதம். அதுவும் புனிதமான வாயில இருந்து பிறந்தவங்க இன்னும் புனிதம். (வாட் ஈஸ் திஸ். மிஸ்டர் மனு.)

பிராமணர்களே யாவரிலும் அதிபுத்திசாலிகள் என்கிறார் மனு. அது இல்லாமல் பெயர் சூட்டும் விதிகளை வகுக்கிறார்.
பிராமணணின் முதல் பெயர் மங்களகரமானதாகவும், சத்ரியனின் முதல் பெயர் வீரமானதாக அதிகாரத்தைகுறிப்பதாகவும், வைசியனின் முதல்பெயர் செல்வத்தைக் குறிப்பதாகவும், சூத்திரனின் பெயர் விலக்கத்தக்கதாகவும் இருக்க வேண்டுமாம்.
அதே போல் இரண்டாவது பெயர் (குடும்பபெயர்) முறையே மகிழ்ச்சி, பாதுகாப்பு, செல்வத்தை குறிக்க சூத்திரனுக்கு மட்டும் அவனது தொழிலை குறிக்க வேண்டுமாம்.

பிராமணன் நான்கு சாதியிலும் திருமணம் செய்யலாம். சத்ரியன் சத்ரிய, வைசிய சூத்திர பெண்களை மணக்கலாம். வைசியன் வைசிய சூத்திர பெண்களை மணக்கலாம். சூத்திரன் சூத்திர பெண்ணை மட்டும் மணக்க வேண்டும்.
அனைவருக்கும் முதல் மனைவி அதே வர்ணத்தில் இருக்க வேண்டும்.

பிராமணண் கடும் விரதமேற்று குறைந்தது 9 ஆண்டுகளாவது வேதம் பயில வேண்டும். குறைந்தது ஒரு வேதத்தையாவது.

பிராமணன் எதை சாப்பிட வேண்டம் எதை சாப்பிடக்கூடாது என்றெல்லாம் சொல்லப் படுகிறது. வெங்காயம் வெள்ளப்பூண்டு சாப்பிடக் கூடாது. மந்திர நீர் தெளிக்கப்படாத இறைச்சியை சாப்பிடக்கூடாது. பன்றி, நாட்டுக்கோழி என்று சாப்பிடக்கூடாத லிஸ்ட் நீளுகிறது.

அரசன் எப்படி தண்டனை விதிக்க வேண்டும் என்பதெல்லாம் இருக்கிறது.

பிராமணனுக்கு வெறும் ஐந்து நாள் உபவாசமும் காயத்ரி மந்திர ஜபமுமாய் போகும் தண்டனை சூத்திரனுக்கு மரணத்தை விதிக்கிறது.

சூத்திரன் காதிலும் வாயிலும் ஈயத்தை காய்ச்சி ஊற்றச் சொல்லும் தண்டனைகள் இருக்கின்றன. மற்றவர்களுக்கு அப்படி இருப்பதாய் காணோம்.

ஒரு சில தண்டனைகள் சூத்திரனுக்க 8 மடங்கு பிராமணனுக்கு 64 மடங்கு என்று இருக்கிறது. அடடே என்று பார்த்தால் அது அபராதத் தொகையாக இருக்கிறது.

சூத்திரனுக்கு எந்த கட்டத்திலும் வேதத்தை சொல்லிக் கொடுக்கக் கூடாது என்று சொல்கிறது.

பெண்களை இன்னும் சிறப்பாக வைத்திருக்கிறது மனுதர்மம்.
அவர்கள் வேதம் கற்கக்கூடாது. இயற்கையாகவே பெண் அலையாயும் மனம் உடையவள். அவர்கள் காவலில் வைக்கப்படவேண்டியவர்கள்.

மொத்தம் ஒரு பன்னிரண்டு சேப்டர் இருக்கு. நாலு சேப்டர் படிச்சேன். இதுக்கு மேலயும் இந்த குப்பையை படிக்க முடியாதுன்னு விட்டாச்சு.

மனுவோட இந்த தர்மம் தோன்றிய புண்ணிய பூமி பிரம்மவார்த்தா. மனுவே சொல்வது போல அது சரஸ்வதி நதிக்கும் திருஷ்டாவதி நதிக்கும் இடைப்பட்ட பகுதி.

நிலைநாட்டப்பட்ட பகுதி ஆர்யவார்த்தா இமயத்தில இருந்து விந்தியம் வரைக்கும்.

அதுக்கு கீழே இருப்பது மிலேச்சர்களின் பூமியாம்.
நல்லது. இந்த மிலேச்சர்களின் பூமிக்கு நிச்சயம் மனு ஸ்மிருதி தேவையில்லை.

Reference: The Laws of Manu
George Bühler, translated 1886.

Tuesday, February 19, 2008

இதெல்லாம் கவிதையாடா ?

தனிமை பயம் அவனை
"பீடி"த்திருக்கிறது.
பீடி புகைநடுவே
அவன்.

பயம் என்னை
பீடித்திருக்கிறது.
அவனது கவிதை
தாள்களுடன் நான்.

------

"காதலி"
என்றான்.
என்னடா என்றால்
மூன்றெழுத்து கவிதையென்றான்.
இதெல்லாம் கவிதையாடா ?

------------

பாரி கதறினான்...
முல்லைக்கு தேர் தரவோ
கார் தரவோ காசில்லை
என்னிடம்.

போடாவென்று
சொல்லி போய்விட்டாள்
காதலி முல்லை.

(யதார்த்தக் கவிஞன் !!)

----------

மெதுவாகவும்..
ஊர்ந்தும்..
தேய்ந்தும்..
நீடித்தும்..
நின்றும்
நீண்டுகொண்டிருக்கிறது.
காலம்
அவளில்லாத காரணத்தால்.

(உண்மையில் அவன் கடிகாரத்தில் ஒழுங்கான பேட்டரி போடாத காரணத்தால்.)

------

கையில் பேனா...
கன்னத்தில் கைவைத்து
விட்டம் வெறிக்கிறான்.
கொட்டுகிறது கவிதை.
போட்டோ பிடித்தால்
பின்னட்டைக்கு பயன்படும்.

----------

அவள் போனதால்.
அவன் கவிதை எழுதினான்.
எலக்கியம் வளர்ந்தது.
அதை விட அவன் தாடி
நன்றாக வளர்ந்தது.

----------

வெங்காயம் அரை கிலோ.
தக்காளி கால் கிலோ.
இஞ்சி.
பச்சை மிளகாய்.
கருவேப்பிலை, கொத்தமல்லி.
உ. பருப்பு அரை கிலோ.
து. பருப்பு ஒரு கிலோ.
2 ரெக்சோனா.

(பின்குறிப்பு: ஒண்ணுங் கீழ ஒண்ணு எழுதப் படுவதெல்லாம் கவிதையல்ல. மளிகை கடைக்கான லிஸ்ட்டாக கூட இருக்கலாம்.)

-----------

Monday, February 18, 2008

அமெரிக்காவில் சி.ஐ.டி. ஷங்கர். - "தி கிங்பின்"

"பாஸ். நாம அமெரிக்காவில நியூயார்க் வந்து இறங்கிட்டோம். நினைச்சாலே ரொம்ப சந்தோஷமா இருக்கு." மாலு மிக மகிழ்ச்சியாக இருந்தாள்.

"வேற என்ன பண்றது. ஆசிரியர் நிறைய தமிழ்வாணன் துப்பறியும் கதை படிச்சிருப்பாரு போல. "அமெரிக்காவில் சி.ஐ.டி. ஷங்கர்" அப்படின்னு தலைப்பு வெச்சிட்டார். உனக்கும் எனக்கும் விசிட்டர் விசாவெல்லாம் எடுத்து எவ்வளவு செலவாயிடுச்சு தெரியுமா." ஷங்கர் சலித்துக் கொண்டான்.

"பாஸ். நீங்களேதான் டிராவல் எஜென்சியும் வெச்சிருக்கீங்களே. இதென்ன பெரிய விஷயமா." மாலு தொடர்ந்தாள்.

"நாம இங்க வெறுமனே சுத்தி பார்க்க மட்டும் வரலை. எதுக்கு வந்திருக்கோம்னு தெரியும் இல்லை"

"தெரியும் பாஸ். ஏதோ "சேஃப்டி பின்"னை கண்டு பிடிக்கணும்னு சொன்னீங்க."

"அது சேஃப்டி பின் இல்லை. கிங் பின்."

"கிங் பின்னா. கேள்வி பட்டதே இல்லையே பாஸ். அது எவ்வளவு பெரிசா இருக்கும். "

"கிங் பின் அப்படின்றது கேங் லீடர். நிழலுலக தாதா. அந்த தாதாவை கண்டு பிடிக்கிறதுதான் நம்ப பிளான்."

"தாதா ?"

"நீ மார்வல் காமிக்ஸ் எல்லாம் படிக்கிறது இல்லையா. கிங் பின்தான் ஸ்பைடர் மேனோட வில்லன். இப்ப வந்த டேர் டெவில் படத்திலயும் கிங்பின்தான் வில்லன். இங்க அண்டர் கிரவுண்ட் தாதாவை கிங்பின் அப்படின்னு சொல்வாங்க."

"வாவ். கண்டுபிடிச்சு என்ன செய்யப் போறோம்."

"உலகப் பொருளாதாரத்தை நிமிர்த்தப் போறோம்."

"வாட்?"

"உனக்கு தெரியும் இல்லையா. அமெரிக்கா பெரிய அளவுல பொருளாதார சரிவை நோக்கி போயிட்டிருக்கு. அதுக்கு காரணம் என்னன்னு பார்த்தா வீட்டுக் கடன். இங்க ஒரு கும்பல் வீடுகளை வாங்கிட்டு வட்டி கட்டாம விட்டுடறாங்க. இதனால வீடு ஏலத்துக்கு வருது. வாங்க ஆளில்லாம வீடு மதிப்பு குறைஞ்சு, வட்டி வீதம் குறைஞ்சு அதனால உலக பொருளாதாரமே சரிஞ்சு போச்சு. இத்தனைக்கும் பின்னாடி அந்த கும்பலோட தலைவனா ஒரு தாதா இருக்கான். அந்த கிங்பின்னை தான் நாம கண்டு பிடிக்கறோம். இதை தடுத்தி நிறுத்தி உலகப் பொருளாதாரத்தையே உயர்த்தப் போறோம்."

"பாஸ். கேட்கவே சூப்பரா இருக்கு. சின்ன வயசுல ராணி காமிக்ஸ்ல படிச்ச ஜேம்ஸ் பாண்டு கதையெல்லாம் நியாபகம் வருது."

"இது ஆக்சன் டைம்."

"தட் ஈஸ் மை ஷங்கர்." இந்த முறை அவனுக்கு புத்துணர்வு கன்னத்திலல்ல. உதட்டில் கிடைத்தது. அமெரிக்க மண்ணில்லையா.

அவன் கிறுகிறுத்துப் போனான். அவர்கள் வெளியேறும் வழிக்காக முன்னேறினார்கள்.

"பாஸ் அங்க பாருங்க NEWARK இண்டர்நேஷனல் ஏர்போர்ட் அப்படின்னு எழுதியிருக்கு. நாம NEWYORK தான வந்து இறங்கி இருக்கோம்."

"ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா இருக்கும்."

"ஏர்போர்ட்ல பத்தடிக்கு இருபதடின்னு பெரிசா எழுதிவைக்கறவன் தப்பாவா எழுதியிருப்பான்."

"எனக்கும் புரியலையே. இரு பக்கத்துல கேட்கிறேன்." என்றவன் பக்கத்திலிருந்த தமிழ் இளைஞனிடம் கேட்டான் (சாஃப்ட்வேராயிருக்கும்.). "இது நியூயார்க்தானே."

அவன் ஷங்கரை பூச்சி போல பார்த்து விட்டு சொன்னான். "இது நெவார்க். நியூஜெர்சி. ஆனா நியூயார்க் பக்கம்தான்."

சிறிது நேரத்தில் மாலு ஷங்கரை பின்னி எடுத்துக் கொண்டிருந்தாள். "வந்து இறங்குனது நெவார்க்கா, நியூயார்க்கான்னு கூட தெரியலை. பெரிய துப்பறியும் நிபுணர்."

"டிக்கட்ல ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா நெவார்க்னு அடிச்சிட்டாங்கன்னு நினைச்சிட்டிருந்தேன். ஹி... ஹி." வழிந்தான். "சரி வா. இங்க எதோ கிரவுண்ட் ட்ரான்ஸ்போர்ட்ல போய் கேட்டா நாமளே ஓட்டற மாதிரி கார் கிடைக்குமாம்."

"ஓக்கே. போய் காரை எடுங்க... ஆமா உங்களுக்கு லைசென்ஸ் ?"

"இண்டர்நேஷனல் ட்ரைவிங் லைசென்ஸ், இண்டியன் ட்ரைவிங் லைசென்ஸ் இரண்டும் வெச்சிருக்கேன். கார் எடுக்கிறோம். நியூயார்க் லாங் ஐலண்ட்ல நாம தங்கப் போற ஹோம் ஸ்டீட் ஹோட்டல், ஜாக்சன் ஹைட்ஸ் பக்கத்துல இருக்கு. அங்க போறோம்."

"வழி தெரியுமா."

"இங்க ஜிபிஎஸ் சிஸ்டம் இருக்கு. போய்ச்சேர வேண்டிய அட்ரசை கொடுத்தா போதும். சேட்டிலைட் மூலமா கனெக்ட் ஆகி போய் சேர வேண்டிய இடத்துக்கு வழியை அதுவே சொல்லும். மேப் ஸ்கிரீன்ல தெரியும்."

"வாவ்."

----------------------

"பாஸ். ரைட்ல ஓட்டுங்க"

"ரைட்டாதான் ஓட்டுறேன்."

"அய்யோ ரைட் சைட்ல ஓட்டுங்க."

"ஆமால்ல. இந்த ஊருல ரைட் சைடுதான் ரைட் சைடு." ஒரு வழியாக அவர்கள் ஹோட்டலை போய் சேர்ந்தார்கள்.

----

அடுத்த இரண்டு நாட்களும் சுதந்திர தேவி சிலை, எம்பயர் ஸ்டேட் பில்டிங், மேடம் டுஸாட்ஸ், செண்ட்ரல் பார்க் இன்னும் சில மியூசியங்கள் எல்லாம் சுற்றி பார்த்தார்கள்.

"பாஸ். உண்மைய சொல்லுங்க. சும்மா சுத்தி பார்க்கலாம்னு தான வந்தோம். கிங்பின் எல்லாம் உடான்ஸ் தானே."

"என்ன இப்படி சொல்லிட்டே. நாம வெறுமனே சுத்தி பார்த்தோம்னு நினைச்சியா. நான் கிங்பின்னோட ஆட்களோட நடமாட்டத்தையும் நோட் செஞ்சுட்டுதான் இருந்தேன். நாம தங்கியிருக்கிற ஓட்டல்லதான் கிங்பின்னோட காதலி வெனஸ்ஸா ஃபிஸ்க் தங்கியிருக்கா. அவளுடைய நடமாட்டத்தை நோட் பண்ணிட்டுதான் இருக்கேன்.".

"வெனஸ்ஸா பிஸ்க்தான் கிங்பின்னோட காதலி அப்படின்னு உங்களுக்கு எப்படி தெரியும்."

"சும்மாவா எத்தனை ஸ்பைடர்மேன், டேர்டெவில் கதையெல்லாம் படிச்சிருக்கேன்."

"இப்ப என்ன பண்ண போறிங்க."

"ஜேம்ஸ் பாண்டு ஸ்டைல். அவளை செட்யூஸ் பண்ணி கிங்பின் பத்தின ரகசியங்களை கேட்டு தெரிஞ்சுக்கப் போறேன்."

"என்னது.."

"பத்தியா என்னை தப்பா நினைச்சிட்டு. சும்மா மயக்க மட்டும்தான் செய்வேன். உண்மைகள் தெரியணும் இல்லையா.."

"சரி எப்படியோ போங்க. இந்த மூஞ்சிக்கு எவளும் மயங்க மாட்டா. நான் ஒருத்தியே உங்களுக்கு அதிகம்..."

ஷங்கர் அந்த ஹோட்டலின் பாரில் அமர்ந்திருந்த வெனஸ்ஸாவை நோக்கி முன்னேறினான்.

"ஹாய். ஐ யம் ஷங்கர்."

"ஐ யம் வெனஸ்ஸா." வன்னிலா ஐஸ்கிரீமில் செய்தது போல் இருந்தாள்.

"யூ ஆர் பியூட்டிஃபுல். மே ஐ கிவ் யூ கம்பெனி."

"இட் ஈஸ் மை பிளஷர். யூ ஆர் சோ மேன்லி.. குட் யூ ப்ளீஸ் ஆர்டர் வைன் ஃபார் மி."

"ஷ்யூர்." ஷங்கர் மாலுவை பார்த்து கண்ணடித்தான்.

"வாட் யூ வில் ஹாவ்."

"ய கேன் ஆஃப் கோக். ஓப்பன்டு பட் நாட் ஸ்ட்ராவ்டு."

கொஞ்ச நேரத்தில் வெனஸ்ஸாவோடு அவன் அவளது அறைக்கு சென்றான்.

பின்தொடர்ந்த மாலு அந்த அறைக்கதவு சாத்தப்பட்டதால் வெளியே இருந்து பார்த்து விட்டு அவர்கள் அறைக்கு திரும்பினாள்.

-------
அரை மணி நேரம் போனது. ஷங்கர் திரும்பாததால் மாலு மீண்டும் அந்த அறைக்கு சென்றாள்.

உள்ளே இருந்து முக்கல் முனகல் ஒலிகள்.

அடப்பாவி. "சும்மாதான்.." அப்படின்னு சொன்னானே.

கதவை திறந்து கொண்டு நுழைந்தவள் ஷங்கரை தேடினாள்.

தரையில் ஷங்கர் கைகால்கள் கட்டப்பட்டு பனியன் ஜட்டியோடு இருந்தான். வாயில் ஒட்டியிருந்த பிளாஸ்டரை பிரித்தாள்.

"பாஸ். என்ன இது. செட்யூஸ் பண்றேன்னு கிளம்பி வந்து இப்படி டிரெஸ் எல்லாம் ரெட்யூஸ் ஆகி கிடக்கறீங்க."

"ஆக்சுவலி கோக் ட்ரஸ் மேல ஊத்திக்கிச்சு. அதுக்காகத்தான் ட்ரெஸ்ஸை கழட்டினேன். ஹி.. ஹி."

"நம்பி தொலைக்கிறேன்."

"ஏமாந்த நேரமா பார்த்து கட்டி போட்டுட்டு பாக்கெட்ல இருந்த கேஷ் மொத்தமும் எடுத்துக்கிட்டா. நல்ல வேளை கார்டு எல்லாம் உங்கிட்டதானே இருக்கு."

"இப்படியா ஏமாறுவீங்க."

"இல்லை. நான் கிங் பின்னை பத்தி கேட்டதும் உஷாராயிட்டா. என்ன கட்டி போட்டுட்டு தப்பிச்சிட்டா."

"பாஸ். உங்க ட்ரெஸ் எல்லாம் இதோ இந்த மூலையில இருக்கு."

"தாங்ஸ்" எடுத்து அணிந்தான்.

"பாஸ். இந்த விளையாட்டு நமக்கு வேண்டாம். ஊருக்கு போயிடலாம்."

"முன் வெச்ச காலை பின் வெச்சு ஷங்கருக்கு பழக்கமேயில்லை. கட்டாயம் கிங் பின்னை பிடிப்பேன்."

அப்போது அவள் உள்ளே நுழைந்தாள். வெனஸ்ஸா. உடன் நான்கு தடியர்கள்.

அவர்கள் துப்பாக்கியை நீட்டினார்கள்.

-----------

"பாஸ். இவங்க நம்மை எங்க கொண்டு வந்திருக்காங்க."

"யாருக்கு தெரியும் கண்ணைக் கட்டி கொண்டு வந்திருக்காங்க. கிங் பின்னோட ஆட்களா இருக்கலாம்."

அப்போது அவர்களுக்கு எதிரே இருந்த சுவர் சுற்றியது. மறுபுறம் மேஜை. சுழல் நாற்காலி. அதில் ஒரு மொட்டைத் தலையர் இவர்களுக்கு முதுகு காட்டியபடி.

"வெல்கம் மிஸ்டர் ஷங்கர்."

"யூ... யூ... கிங் பின்."

"எஸ். கரெக்டா கண்டுபிடிச்சிட்டியே."

"உனக்கு தமிழ் தெரியுமா."

"வேலூர் ஜெயில்ல இரண்டு வருசம் இருந்தேன். தமிழ் கத்துகிட்டேன்."

"அப்படியா.. ரோஜா படத்தில வர்ற காஷ்மீர் தீவிரவாதி தமிழ் நாட்டு ஜெயில்ல தமிழ் கத்துக்க முடியும். ஆனா அமெரிக்க கிங் பின்... எப்படி வேலூர் ஜெயில்ல..."

"ஹா.. ஹா... ஜோக்கடிச்சா நம்பிடறதா... என்னைத் தெரியலை."
கிங்பின் மொட்டைத் தலையில் தாளம் தட்டினார்.

"நீ... நீங்க.."

"ஷிவாஜி. த பாஸ். தி கிரேட் கிங்பின்."
ஷங்கரும் மாலுவும் அதிர்ச்சியானார்கள்.

"நீங்க சாஃப்ட்வேர்ல இருந்து இருநூறு கோடி சம்பாதிச்சு மக்களுக்கு உதவறதா......"

"ஹா.. ஹா.. ஹா.. அதை நீயும் நம்பறியா. நூறு இல்லை இருநூறு வருசம் பொட்டி தட்டுனாலும் இருபது கோடி கூட சாப்ட்வேர்ல சம்பாதிக்க முடியாது. நான் சம்பாதிச்சதெல்லாம் கிங் பின்னா இருந்துதான்."

"இது தப்பில்லையா."

"கண்ணா. தப்பு எதுன்னு நீ பாக்குறே. சரி எதுன்னு நான் பாக்குறேன்."

"என்ன சொல்றீங்க."

"இன்னைக்கு நீ 45 ரூபாய் கொடுத்து ஒரு டாலர் வாங்குறதுக்கு பதிலா 39 ரூபாய்கு ஒரு டாலர் வாங்கி ஈஸியா அமெரிக்கா வர முடிஞ்சிருக்கு. காரணம் யாருன்னு யோசிச்சு பார்த்தியா."

ஷங்கர் யோசிக்க ஆரம்பித்தான்.

"இந்திய கருப்பு பணத்தை ஆஃபீஸ் ரூம் போட்டு அங்கிருந்து இங்க கடத்துறேன். அந்த பணத்தை வெச்சு இங்க வீடு குறைஞ்ச விலைக்கு வாங்கி அதை எங்க ஆளுங்களை வெச்சு அதிக விலைக்கு பேங்க் லோன் போட்டு வாங்க வைக்குறேன். லாபத்துக்கு லாபம். கொஞ்ச நாள்ல அவங்க கடன் கட்டாம போக பேங்க் திவால் ஆகுது. அதனால அமெரிக்கா திவால் ஆகுது. அதனால இந்தியா சூப்பர் பவராகுது."

"இது தப்பில்லையா."

"நான் இந்திய தேசத்துக்காக உழைக்கிற ஒரு வீரன். என்னோட வழி உனக்கு தப்பா தெரியலாம். ஆனா அது இந்திய தேசத்தை முன்னேத்துற வழி. என் வழி தனி வழி."

"இருந்தாலும்..."

"கண்ணா இப்ப நான் உனக்கு இரண்டு சாய்ஸ் தர்றேன். நான் பண்றது சரின்னு நினைச்சா உன்னை கூட்டி வந்த மாதிரியே கொண்டு போய் விட்டுடுவாங்க. நான் பண்றது தப்புன்னு நினைச்சின்னா வா என்னோட ஆஃபீஸ் ரூம் போய் பேசலாம்."

"ஆஃபீஸ் ரூமா... நீங்க செய்யறது தப்புன்னு நான் எப்ப சொன்னேன்."

"ஹா... ஹா... ஹா.."

"நாங்க உங்க முகத்தை பார்க்கலாமா."

"ஹா... ஹா.. ஹா.. எனக்கு விளம்பரம் பிடிக்காது. "
அவர் ஸ்டைலாக தன் தலையில் மீண்டும் தாளம் தட்டினார்.
"ஷிவாஜியும் நானே. எம்ஜியாரும் நானே."

"அப்ப வெற்றிமோகன் எழுதினது உங்களை பத்திதானா ?"

"யாரது என்னை பத்தி எழுதறது. அடுத்த தடவை அந்த ஆளை தூக்கிட்டு வாங்க."

"விட்டுடுங்க சார். பாவம். அவர் ஒரு எலக்கியவாதி."

"சரி. நீங்க போகலாம்"
----------

மாலுவும் ஷங்கரும் அதே ஹோட்டலில் இறக்கி விடப்பட்டார்கள்.

"மாலு நாம நாளைக்கு இந்தியா திரும்பறோம்."

"அப்ப கிங்பின்."

"அவர் சட்டப் படி நடக்காம இருக்கலாம். நியாயப்படி நடக்கிறார். அதனால அவரை சட்டத்துல பிடிச்சிக் கொடுக்க என் மனசாட்சி இடம் கொடுக்கலை. ஹி ஈஸ் எ கிரேட் பேட்ரியாட். ஜெய் ஹிந்த்."

------

விமானத்தின் ஜன்னலில் கீழே தெரியும் நியூயார்க்கை பார்த்துக் கொண்டிருந்தாள் மாலு. (நெவார்க் அல்ல).

"இட் ஈஸ் ஆல் இன் த கேம்" என்றான் ஷங்கர்.

--------------


சி.ஐ.டி. ஷங்கர் கதைகள்:

3.
சி.ஐ.டி. ஷங்கர் தோன்றும் "ஆப்பரேஷன் ப்ளூ ஃபிலிம் ஸ்டார்."
2. மீண்டும் சி.ஐ.டி. ஷங்கர் தோன்றும் "நடிகையின் அந்தரங்கம்".
1. மீண்டும் சி.ஐ.டி. ஷங்கர் தோன்றும் "என்ன எழவுடா இது ?".

Wednesday, February 13, 2008

சி.ஐ.டி. ஷங்கர் தோன்றும் "ஆப்பரேஷன் ப்ளூ ஃபிலிம் ஸ்டார்."

"ஹாய். பாஸ். வாட்ஸ் அப்?" மாலு ஷங்கரை அழைத்த படியே உள்ளே நுழைந்தாள்.

"மாலு. நாம ரொம்ப ஆங்கிலம் பேசுறோமாம். இது தமிழ் கதையா ஆங்கில கதையான்னு வாசகர்கள் கேள்வி கேட்கிறாங்க. தமிழ்லயே பேசுறயா."

"அப்படியே ஆகட்டும். நாதா. தங்கள் சித்தம் என் பாக்கியம்."

"கொடுமையா இருக்கு. சாதாரணமாவே பேசு.".

"சரி. சரி. ஏதாவது புது கேஸ் வந்து இருக்கா."

"எதுவும் இல்லை. நான் என்ன நினைக்கிறேன்னா, நாம கேஸ் நம்ம கிட்ட வரணும்னு நினைக்கிறத விட கேஸை தேடி போறதுதான் பெட்டர்னு நினைக்கிறேன்."

"ஆமா யாரோ ஒரு கொத்தனார் கூட யாரோ லீனாவோ வீணாவோ, அவங்க ஜாக்கெட்டை காணலைன்னு சொல்லியிருந்தார். நாம அந்த கேஸை எடுத்துகிட்டா என்ன பாஸ்."

"இதெல்லாம் ஒரு கேசா. நாம துப்பறியறத ஒரு ஹாபியா ஒரு த்ரில்லுக்காக பண்றோம். அதை சமூகத்துக்கு பயன்படுற மாதிரி பண்ணா என்ன."

"புரியலையே பாஸ்."

"வீ ஆர் க்ரைம் ஃபைட்டர்ஸ். சட்டத்துக்கு தப்பி நடக்கிற காரியங்களை நாம கண்டிக்கனும். குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தரணும். அமைதியான குற்றங்களில்லாத ஒரு சமூகத்தை படைக்கணும்."

"பாஸ். சம்பந்தா சம்பந்தம் இல்லாம பேசறீங்களே. இது காமெடி ஸ்டோரி. நியாபகம் இருக்கட்டும்."

"எனஃப் காமெடி. ஆல் ஐ நீட் ஈஸ் ஆக்சன். இன்னிக்கு இந்த சமூகத்தை செல்லரிச்சுக்கிட்டு இருக்க முக்கியமான பிரச்சனை ப்ளூ ஃபிலிம். அதை எடுக்கறவங்களை கண்டு பிடிச்சு சட்டத்து முன்னாடி நிறுத்தி தண்டனை வாங்கி கொடுக்கிறோம். இந்த ஆப்பரேஷனுக்கு நான் வெச்சிருக்கிற பெயர் ஆப்பரேஷன் ப்ளூ ஃபிலிம் ஸ்டார்."

"வாவ். இண்ட்ரஸ்டிங். ஆனா அவங்களை எப்படி கண்டுபிடிப்பீங்க."

"இங்க பார்த்தியா. இது எல்லாம் ப்ளூ ஃபிலிம் சிடி டிவிடி. இதையெல்லாம் போட்டு பார்த்து...."

"ஓ. இவ்வளவு பில்ட் அப்பும் நீ ப்ளூ ஃபிலிம் பார்க்கறதுக்குத்தானா." கோபப்பட்டாள்.

"அச்சச்சோ. தப்பா புரிஞ்சிகிட்டியே. இதையெல்லாம் போட்டு பார்த்து அதுல வர்ற பங்களா. அதுல வர்ற இண்டீரியர் டிசைன் இதெல்லாம் நோட் பண்ணனும். அப்பதான் இதை எடுத்த பங்களா எதுன்னு தெரியும். நாமளும் ஈஸியா இதை எடுத்துடறவங்கள கண்டுபிடிச்சிடலாம்."

"பரவாயில்லையே ஐடியா நல்லா இருக்கே."

"நான் இந்த பத்து டிவிடியும் ஏற்கனவே பார்த்துட்டேன். இதுல வர்ற பங்களாவை பார்த்தா வளசரவாக்கம் பக்கத்துல இருக்க ஒரு பங்களா மாதிரியே இருக்கு. நாம அதை நோட்டம் விடறோம்."

"ஓ.."

"முதல்ல நீ அந்த பங்களாவுக்குள்ள போற. ஏதாவது ஏடாகூடமா இருந்தா இந்த விசிலை ஊது. அப்ப நான் கரெக்ட் டைமுக்கு வந்து உன்னை காப்பாத்துறேன். அவங்களை கையும் களவுமா பிடிக்கிறோம். இட் ஈஸ் ஆக்சன் டைம்."

"விளையாடறீங்களா. நான் ஒரு பொண்ணு ஏடா கூடமா ஏதாவது ஆயிட்டா."

"சரி. சரி. அப்படின்னா நானே பொம்பளை வேஷத்துல போறேன்.

-------------------------

"பாஸ். பொம்பளை வேஷத்தில அழகா இருக்கீங்க."

"சரி. சரி. நான் உள்ளே போறேன். எதாவதுன்னா விசில் அடிக்கிறேன். நீ போலீசுக்கு போன் போட்டு ரவுண்ட் அப் பண்ணிடு."

"விசிலெல்லாம் பழைய டெக்னிக் பாஸ்."

"அப்ப மொபைல் போன்ல மிஸ்டு கால் கொடுக்கறேன்."

"அப்பவும் மிஸ்டு கால்தானா. அல்பம் பாஸ் நீங்க."

"சரி. சரி" பெண்வேடத்திலிருந்த ஷங்கர் உள்ளே நுழைந்தான்.

"நீதான் ஷீலாவா. உனக்காகத்தான் வெயிட்டிங்." வரவேற்ற நபர் இளம் சொட்டையர். 45 வயது.

"நீங்க". பெண்மை கலந்த குரலில் ஷங்கர்.

"ஐ யம் டாக்டர் பிரகாஷ். இது பீட்டர். உன்னோட கோ ஆர்ட்டிஸ்ட்." பீட்டர் இளித்தான்.

எடுக்கிறது அந்தப்படம். இதுல இந்த தடியன் 'கோ ஆர்ட்டிஸ்ட்.'ஆ. மலையாளப்படங்களில் வருபவனை போல் இருந்தான் அவன்.

"நாம ஷாட்டுக்கு போலாமா ஷீலா."

"என்ன மாதிரி ஷாட்."

"ரேப் சீன். நான் எக்ஸ்ப்ளெயின் பண்ணட்டுமா." டாக்டர் பிரகாஷ் நெருங்க..

"சார்." இன்னொரு பெண் குரல் கேட்டது... "நான் ஷீலா." அவள் உள்ளே நுழைந்தாள்.

"அப்ப இது." ஷங்கர் ஆக்சன் டைம் என்பதை உணர்ந்து கொண்டான். கடமையாக ஒரு மிஸ்டு காலை தட்டிவிட்டவன் பாய்ந்தான்...

பிரகாஷின் தாடையில் ஒரு அடி இறங்கியது. அடியா அது இடி.
"ஹா. ஹா. என்னையாடா ரேப் பண்ணுவீங்க. நான் ஆம்பிளைடா." ஷங்கர் சிரித்தான்.
ஷீலா அலறி ஓடி பதுங்கினாள்.

சுதாரித்துக் கொண்ட பீட்டரும் பிரகாஷ்ம் நெருங்கி ஷங்கரை பிடித்தார்கள். கிட்டத்தட்ட ஷங்கர் இருவரிடமும் மாட்டிக் கொள்ள மாலு அதிரடியாக எண்டரி கொடுத்தாள்.

மாலு ஷங்கர் கூட்டணியின் அதிரடி தாக்குதலில் பீட்டரும் டாக்டரும் விழுந்தார்கள்.

"மாலு, நல்ல நேரத்தில வந்து என் கற்பை காப்பாத்தின."

கீழே விழுந்தவர்கள் மலங்க மலங்க பார்த்தார்கள்.

"என்ன பார்க்கறீங்க. நீங்க அந்த மாதிரி படம் எடுக்கறது எனக்கு எப்படி தெரியும்னா. துப்பறியும் சிங்கம் ஷங்கரை என்னன்னு நினைச்சீங்க." ஷங்கர் கர்ஜித்தான்.

"அந்த மாதிரி படமா." அடியின் வலியோடு டாக்டர் முனக.

"எஸ். நீங்க ரேப் சீன் எடுக்கறேன்னு சொன்னதை நான் ரெக்கார்ட் பண்ணிட்டேன். மாலு போலீஸ்க்கு போன் போடு. இவன்களை பிடிச்சி கொடுக்கலாம்."

அப்போதுதான் அந்த ஆசாமி உள்ளே ஓடி வந்தான். "சார். டைரக்டர் சார்..."

இன்னொரு வில்லன். மாலுவும் ஷங்கரும் அலர்ட்டானார்கள். "யாருய்யா நீ.."

"நான் புரொடக்சன் மேனேஜர்."

"அடப்பாவிகளா. புரோடக்சன் மேனேஜர் வச்சு அந்த மாதிரி படம் எடுக்கற அளவுக்கு ஆயிடுச்சா."

"என்னய்யா சொல்றீங்க. அங்க மொத்த யூனிட்டும் டைரக்டருக்காக காத்துக்கிட்டு இருக்கு. "தங்கை" சீரியலுக்காக....."

"தங்கை சீரியலா... இரண்டு வருசமா ஓடுதே அந்த மெகாசீரியலா.... இந்த ஆளு ரேப் அது இதுன்னானே" ஷங்கர் குளறினான்.

"ஆமாய்யா. ஹீரோயினோட அஞ்சாவது தங்கச்சி பத்து வருஷம் ஹாஸ்டல்ல தங்கி படிச்சு பெரிய பொண்ணாகி அக்காவை பாக்க வருது. வர்ற வழியில வில்லன் மயக்கி கொண்டு போய் அவளை கற்பழிச்சிடுறான். அந்த ஷாட்டை இன்னைக்கு புது ஆர்டிஸ்ட்டை வெச்சி எடுக்கறோம்."

"யோவ் புரொடக்சன். அந்த ஆளுகிட்ட என்னய்யா கதை பேசிக்கிட்டு. முதல்ல என்னை தூக்குய்யா." டைரக்டர் பிரகாஷ்.

"நீங்க டாக்டர் பிரகாஷ்? டீவி சீரியல்..."

"ஏன்யா. டாக்டருக்கு படிச்சா டிவி சீரியல் டைரக்ட் பண்ண கூடாதா. யோவ். புரொடக்சன். போலீசுக்கு போன் போடுய்யா... இவங்களை...."

"போலீசா." ஷங்கர் மாலுவை பார்த்தான்.

மாலு ஷங்கரை பார்க்க இருவருமாக தப்பி வெளியே ஓடினர்.

ஷங்கர் பைக்கை ஸ்டார்செய்ய தப்பி வந்து சேர்ந்தார்கள்.

இந்த தடவை ஷங்கருக்கு மாலுவிடம் இருந்து தேவைக்கு அதிகமாகவே கிடைத்தது எனர்ஜி பூஸ்ட் கன்னத்தில்.

வீங்கிய கன்னத்தை தடவியபடி ஷங்கர் "இட் ஈஸ் ஆல் இன் த கேம்." என்றான் சோகமாக.

---------------------------

மனுசப்பயலுங்க ஏன் காதலிக்க வேணும்

காதல்.
இந்த மூணு எழுத்து வார்த்தை மனுசனை படுத்தியெடுக்கிற மாதிரி வேறு எதுவும் படுத்தியெடுக்கிறதா தெரியலை.

அப்படியும் மனுசப் பயலுங்க காதலிச்சிட்டுதான் இருக்காங்க. ஏன் ?

உலகம் தோணுண காலத்துல இருந்து இந்த காதல் கருமம் இருந்துகிட்டுதானே இருக்கு.
எம்புட்டு காலம். எவ்வளவு காதல். இன்னும் இங்க காதல் ஏன் இருக்கு.

காதல் நெருப்புல கருகிய பலரை பார்த்தும் காதல் ஏன் தொடருது ?

காதல் கதகதப்பான நெருப்பு. அந்த கதகதப்புதான் மனுசனை இன்னும் காதலிக்க வைக்குது.
ரொம்பவே நெருங்கிட்டாலும் அதே நெருப்பு சுட்டெரிச்சுடுது.

காதல் கத்திரிக்காய் இல்லை. கத்தி இரண்டு பக்கமும் கூரான கத்தி. அதை வெச்சு கத்திரிக்காயை வெட்டலாம். என்ன கொஞ்சம் தப்புனா ஆளை வெட்டிடும். அதுக்காக கத்தியே வேணாம்னு தூக்கி போட்டுட முடியுதா என்ன.

காதல் சுயமிழத்தல். சுயநினைவிழத்தல். தன்னையே இழத்தல். அது ஒரு போதை. மதுவை குடித்தவன் மயங்குவது போல் அதுவும் ஆளை மயக்குகிறது. ஆனால் தேவையான போதை.
எல்லாத்துலயும் ஒரு அளவு தெளிவு வேணும். காதலில் கூட.

காதல் தப்பில்லை. சில சமயம் காதலிக்கிறவங்க தப்பா இருக்கிறதால காதலே தப்போன்னு தோணிடும்.

காதல்ன்றது என்ன. காதல் என்பது அன்பு. ஆண் பெண் இருவருக்கு இடையே இருக்கக்கூடிய அதீத அன்பு. தங்கள் வாழ்வின் கடைசி நிமிடம் வரை காதலிக்கப்படுபவர்கள் மிகவும் கொடுத்துவைத்தவர்கள். ஆனால் நடைமுறையில் காதல் ஏதேனும் ஒரு கட்டத்தில் காலாவதியாகிவிடுகிறது.

வெறும் பணத்தையோ இல்லை அழகையோ பார்த்து வந்தா அது காதல் இல்லை.
அந்த காதல்ல எதிர்பார்ப்பு மட்டும் இருக்குமே தவிர அன்பு இருக்காது.

உண்மையான காதல் என்பது எந்த காதலில் காதலன் அல்லது காதலியின் தோளில் சாய்ந்து அழ முடியுமோ அந்த காதல்தான்.
பொய்யான காதல் வாழ்வின் தோல்வியின் போது நம்மை விட்டு வெகுதூரம் சென்றுவிடும்.

காதலியுங்க. அன்பைத் தேடி காதலியுங்க.

நாம மறுத்தாலும் வெறுத்தாலும் ஒதுக்கினாலும் இந்த உலகம் இருக்கிற வரைக்கும் காதல் இருக்கும்.

அதே போல காதல் இருக்கிற வரைக்கும்தான் இந்த உலகமும் இருக்கும்.

காதலர் தின வாழ்த்துக்கள்.

(எச்சரிக்கை: காதல் மனநலத்திற்கு தீங்கானது.)

Monday, February 11, 2008

காதல் என்பது வெங்காயம்....

கண்டவுடன் காதல்.
அழகான வானவில்.
மழைநின்றதும் மறைந்துவிடும்.

----------------

காதல் ஒரு வெங்காயம்.
உரித்தால் ஒன்றுமில்லை.
வெட்டினால் கண்ணீர் வரும்.

---------

காதலுக்காக உயிர் கொடுப்பேனென்றாய்.
வேண்டாம்.
எனது உயிரை எடுக்காமல் இருந்தால் போதும்.

----------

காதலிப்பது
அறிவோடு யோசிப்பது.
இரண்டையும் ஒரே நேரத்தில் செய்ய முடியாது.

---------

உண்மையான காதல் என்பது பேய் பிசாசை போல
எல்லோரும் அதைப்பற்றி பேசுகிறோம்.
யாராவது ஓரிருவர்தான் அதைப் பார்த்திருக்கிறார்கள்.

---------

காதலில்லாத வாழ்க்கை வெறுமையானது.
ஆனால் காதலை விட அந்த வெறுமை மிக மேலானது.

----------

காதலென்பது ஒரு புதைகுழி.
எத்துணை ஆழம் நாம் அதில் இறங்குகிறோமோ
அத்துணை கடினம் அதிலிருந்து வெளியேறுவது.

----------

உலகத்தின் காதல்கள் அனைத்தும் தோல்வியில் முடிகின்றன.
பெரும்பாலானவை கல்யாணத்தில் முடிவதில்லை.
மற்றவை கல்யாணத்தோடு முடிந்து போகின்றன.

------------


காதலுக்கு கண்ணில்லை.
கண்மூடி கிடக்கும் வரை அது நீடிக்கிறது.
கண்திறந்தால் காணாமல் போகிறது.

------------

காதல் ஒரு கவசம்.
மனிதம் அதற்குள்தான் தன் காமத்தை மறைத்து வைத்திருக்கிறது.

காதலில்லாத காமம் சாத்தியம்.
காமமில்லாத காதல் ????

-------------

காதல் கணத்தில் தோன்றுகிறது.
நாட்கள் செல்ல வெளிப்படுகிறது.
மாதங்கள் வருடங்களில் வளர்கிறது.
மறக்கப்படுவதற்கு ஒரு வாழ்க்கையை எடுத்துக் கொள்கிறது.

----------

பிப்ரவரி 14
இன்னுமோர் முட்டாள்கள் தினம்.

---------

காதல் என்பது கடவுள்.
நான் நாத்திகவாதி.
இரண்டையுமே நம்புவதில்லை.

--------

Monday, February 04, 2008

எனது தற்கொலை பற்றிய தகவல்...

அன்புள்ள நட்புக்கு

இன்றைய தினம் நான் மரணிக்கவிருக்கிறேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

எத்துணை பேருக்கு தனது மரணத்தை பிறருக்கு அறிவித்து விட்டு மரணிக்கும் பேறு கிடைக்கும் என்று தெரியவில்லை. சொல்லி விட்டு விடைபெறும் பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது.

ஆம். நான் தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்திருக்கிறேன்.

அதிர்ச்சி வேண்டாம். பிறப்பு போல் இறப்பும் இந்த புவியில் மிக சகஜமானதுதான்.

என்ன இறப்பை எல்லோரும் விரும்புவதில்லை. ஆனால் நான் விரும்புகிறேன்.

வாழ்வில் நான் அனைத்தையும் கடந்து வந்திருக்கிறேன். சுகங்கள் சோகங்கள் அனைத்தையும்.

சோகங்கள் வந்தபோதும் சில பற்றுக்கோடுகள் இருந்ததால் இதற்குமுன் எளிதில் அதை கடந்து வந்திருக்கிறேன்.

இந்த தருணத்தில் எனது பற்றுக்கோடுகள் அனைத்தும் உடைந்து விட்டதாய் உணருகிறேன்.

எனது வாழ்வின் மகிழ்ச்சிகள் தொலைந்து போயுள்ளன. எதுவுமே எனக்கு மகிழ்ச்சி தருவதாக இல்லை.

எத்தருணத்தில் இது நிகழ்ந்தது என்பதை நான் அறிவேன். அது எனது வாழ்வின் சோகம்.

இன்று என்னைச் சுற்றி தனிமை மட்டும் மிஞ்சியிருக்கிறது. ஆயிரம் பேர்களுக்கு மத்தியில் இருந்தாலும் தனிமையை மட்டுமே உணர்கிறேன். அது மிக கொடுமையாக இருக்கிறது.

இருத்தலின் இறத்தல் நன்று என்று உணர்கிறேன்.

இனி எதுவும் எனது முடிவை மாற்ற முடியாது என்ற நிலையில் இந்த மின்னஞ்சலை எழுதுகிறேன்.

இன்றைய தினம் மாலை 6 மணியளவில் இவ்வுலகை துறக்கிறேன். நான் யார் என்பதை அறிய முயல வேண்டாம். என் மரண செய்தி எட்டும் போது நான் யார் என்பது தெரிய வரும்.

சொல்லாமல் போவதில் எனக்கு உடன்பாடில்லை என்பதால்தான் இந்த மின்னஞ்சல்.

போகிறேன் எனது மரணத்தில் வாழ்வு முழுமையடைந்தது என்ற மகிழ்வுடன்.

---பெயர் தெரிவிக்க விரும்பாத நண்பன்.

----------------------------------------------------------------------------------


திகைப்படைந்திருந்த ஷங்கரை மாலு உலுப்பினாள். "என்னாச்சு".

"நீயே படி." படித்தவள் தானும் அதிர்ச்சியானாள். "இது.. இது..".

"யார்னு தெரியலை... மெயில் ஐடி abcdef1234@gmail.com. னு இருக்கு. இந்த மெயில் அனுப்பறதுக்காக புதுசா ஒரு மெயில் ஐடி திறந்திருக்கலாம். 'எனது தற்கொலை பற்றிய தகவல்' அப்படின்ற சப்ஜக்டோட வந்திருக்கு."

"மெயில் படிச்சு பார்த்தாலே அதிர்ச்சியாயிருக்கு. போகஸா இருக்குமா."

"இருக்கும். இருக்கணும். ஆனா படிச்சு பார்த்தா அப்படி தோணலை.".

"யாருன்னு கண்டுபிடிச்சு காப்பாத்த முடியாதா..."

"உலகத்தோட எந்த மூலையில இருந்தும் வந்திருக்கலாம். ஐ.பி. அட்ரசை வெச்சு கண்டு பிடிக்கலாம். மணி இப்ப மதியம் 3. நமக்கு இன்னும் மூணு மணிநேரம்தான் இருக்கு."

"to, cc யில இருக்க பெயர்களை வெச்சு. யார் யாருக்கெல்லாம் காமன் ஃபிரெண்டுன்னு பார்த்து கண்டுபிடிக்கலாமா."

"பார்த்துட்டேன். எல்லா மெயிலும் bcc யில போட்டு மெயில் அனுப்பியிருக்கணும்."

ஐ.பி. அட்ரசை கண்டுபிடிக்கும் முயற்சிகளை மேற்கொண்டார்கள். மின்னஞ்சல் எக்மோரில் இன்டர்னெட் மையத்திலிருந்து வந்ததாக தெரிந்தது.

அவர்கள் அந்த இணைய மையத்தை அடைந்த போது நேரம் 4:45.

"எக்ஸ்கியூஸ் மி. மதியம் இங்க இருந்து 2:30 மணிக்கு எனக்கு ஒரு மெயில் வந்தது. அனுப்பினவரை பத்தி தெரிஞ்சுக்க முடியுமா."

"எத்தனையோ பேர் வர்றாங்க. போறாங்க. ஃபுளோட்டிங் பாப்புலேசன் இங்க அதிகம் சார். ஏதாவது அடையாளம் சொல்லுங்க."

"அந்த மெயில்ல நான் தற்கொலை செய்துக்க போகிறேன்னு இருந்தது."

"அந்த பைத்தியமா இருக்கும். மதியம் ஒரு பைத்தியம் சார். பார்த்தா பைத்தியம்னே தெரியாது. பிரெளஸ் செஞ்சிட்டிருந்தது. கீழ்பாக்கம் ஆஸ்பத்திரியில இருந்து வந்து பிடிச்சுட்டு போனாங்க."

"தாங்ஸ்." அங்கிருந்து கிளம்பினார்கள்.

"ஒரு வேளை அந்த பைத்தியம்தான் மெயில் அனுப்பியிருக்குமோ." மாலு.

"அப்படித்தான் தோணுது. ஹாஸ்பிட்டல்ல விசாரிச்சுடலாம்."


-----------------

கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை.

தலைமை மருத்துவரின் முன் அமர்ந்திருந்தனர் மாலுவும் ஷங்கரும்.

"மிஸ்டர் ஷங்கர். உங்களுக்கு வந்த மெயிலை அனுப்பியது கதிரேசனேதான்."

"கதிரேசன்."

"எஸ். அவர் இங்க இருக்க ஒரு பைத்தியம். மதியம் தப்பிப்போய் இன்டர்நெட்ல இருந்து மெயில் அனுப்பியிருக்காரு. எனக்கும் மெயில் வந்து இருக்கு."

"ஓ."

"கவலைப்படாதீங்க அவரைப் பிடிச்சிட்டோம். இனி பயமில்லை."

"தாங்ஸ் டாக்டர். ஆனா அவர் ஏன் இப்படி."

"அவர் ஒரு மென்பொறியாளர். டைவர்ஸீ. அவரது மனைவி பிரிஞ்சு போனது அவரை பெரிய அளவுல பாதிச்சு, அந்த அதிர்ச்சிகளால அவரது மனநிலை பாதிச்சுருக்கு. தற்கொலைக்கு பலமுறை முயற்சி செய்து மத்தவங்க காப்பாத்தியிருக்காங்க. ஒரு கட்டத்துல பேசறதையே நிறுத்தி மரம் மாதிரி ஆயிட்டார். அவரால யாருக்கும் பிரச்சனை இல்லை. ஆனா பேசுறதை நிறுத்தி தன்னையே மறந்திட்ட அவரை குணப்படுத்தறதுக்காக உறவினர்களும் நண்பர்களுமா இங்க சேர்த்திருக்காங்க. அவரோட ரெக்கார்ட்ஸ் படி இன்னைக்கு அவரோட திருமண நாள். தப்பிச்சு போனவரை கஷ்டப்பட்டு கொண்டு வந்து செடடிவ் கொடுத்து படுக்க வெச்சிருக்கோம். இனி பிரச்சனையில்லை."

"எனக்கு எப்படி அவர்கிட்ட இருந்து மெயில்."

"எங்க ரெக்கார்ட்ஸ் படி அவருக்கு துப்பறியும் கதைகள், நாவல்கள் பிடிக்கும். உங்க கதைகளை அவர் படிச்சிருக்கலாம்."

"நல்லது டாக்டர். ப்ளீஸ் டேக் கேர் ஆஃப் ஹிம்."

தடால் என்ற சத்தம் கேட்டது. கூச்சல் குழப்பங்கள். மூவருமாக வெளியே எட்டி பார்த்தனர்.

"டாக்டர். கதிரேசன் ஐந்தாவது மாடியில இருந்து குதிச்சிட்டார்." நர்ஸ் அலறினாள்.

மூவரும் கீழிறங்கி ஓடினார்கள்.

அங்கு கதிரேசன் இரத்த வெள்ளத்தின் நடுவே பிணமாக.....

ஷங்கர் தனது வாட்சை பார்த்தான். நேரம் மாலை 6:00.


--------------------------

Thursday, January 31, 2008

மீண்டும் சி.ஐ.டி. ஷங்கர் தோன்றும் "நடிகையின் அந்தரங்கம்".

(வாசகர்களுடைய பேராதரவை பெற்ற உலகபுகழ் துப்பறியும் சிங்கம் சி.ஐ.டி. ஷங்கர் இனி துப்பறியமாட்டார் என்று அறிவித்திருந்தோம். இதை கண்டித்து வாசகர் கடிதங்கள் லட்சக்கணக்கில் குவிந்த வண்ணம் இருக்கின்றன. இதில் ஒரு வாசகர் மீண்டும் ஷங்கருடைய துப்பறியும் கதைகள் வரவில்லையெனில் தீக்குளிப்பேன் என்று எழுதியிருந்தார். வாசகர்களுக்காக இதோ மீண்டும் வந்துவிட்டார் சி.ஐ.டி. ஷங்கர் - ஆசிரியர்.).

"என்ன இது.?" மாலு கோபத்துடன் செய்தித்தாளை வீசியெறிந்தாள்.

"உலகப்புகழ்பெற்ற சி.ஐ.டி. ஷங்கர் அவர்களின் துப்பறியும் நிறுவனம் புதிய இடத்திற்கு மாறியுள்ளது. முகவரி xxxxx. போன் xxxxx.". என்ற விளம்பரத்தை அவள் வட்டமிட்டிருந்தாள்.

அதே கோபத்தோடு ஷங்கரது கணினித்திரையை பார்த்தாள். "யோனி. முலை. ஆண்குறி." போன்ற வார்த்தைகள் கணினித்திரையெங்கும் இறைந்து கிடந்தன.

"ஆஃபீஸ்ல உட்கார்ந்து அந்த மாதிரி சைட் எல்லாம் வேற படிக்கறியா ?" மேலும் கோபமானாள்.

"அச்சச்சோ. இது தமிழ்மணம். தமிழ்பதிவு. இலக்கிய தமிழ். பின் நவீனத்துவம். எக்ஸ்பிரசனிசம். நீ தப்பா புரிஞ்சுகிட்ட...." குளறினான்.

"அந்த கண்றாவியை அப்புறம் வெச்சுக்கறேன். மொதல்ல இந்த கண்றாவிக்கு பதில் சொல்லு. துப்பறியும் வேலை வேண்டாம்னு சொன்னேன் இல்லையா ?".

"ஆமாம். ஆனா பாரு அப்பாவோட ட்ராவல் ஏஜென்சி போரடிக்குது. வாழ்க்கையில த்ரில் வேண்டாமா?"

"அதுக்காக.".

"பாரு பிசினசை நான் விடல. துப்பறியும் தொழில் பார்ட் டைம். ட்ராவல் ஏஜென்சியோட அட்ரஸ்தான் அதுக்கும் கொடுத்திருக்கேன்."

போன் அடித்தது. எடுத்தான்.

"ஷங்கர் டிடக்டிவ் ஏஜென்சி."

"எஸ்."

"சார். எங்க வீட்டு செப்டிக் டாங்க் அடைச்சிருச்சி. எங்க அடைச்சிருக்குன்னு துப்பறிஞ்சு சொல்றீங்களா."

"வையா. போனை." வைத்தான். "ஹி. ஹி. ராங் நம்பர்." அவளிடம் வழிந்தான். நல்ல வேளை போன்ல அவன் பேசுனதை அவ கேட்டிருக்க மாட்டா என்று சமாதானமானான்.

"மாலு. நான்தான் பார்ட் டைம்னு சொல்றனே. கன்சிடர் பண்ணேன். நீயும் வழக்கம் போல எனக்கு அசிஸ்டண்ட்டா இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்.".

பார்ட் டைம் என்பதில் அவள் சமாதானம் ஆனாள். "வேற வழி. பேயை காதலிச்சா முருங்கை மரம் ஏறித்தான் ஆகணும். இருந்து தொலைக்கிறேன்.".

"தாங்ஸ் மாலு." வழிந்தான்.

அப்போதுதான் அவன் வந்தான். வயது 35 இருக்கும்.

"சார் உள்ளே வரலாமா ?"

"நீங்க ?".

"நேனு எர்ரபள்ளி வெங்கடநாராயண ஸ்ரீனிவாச காந்திகிருஷ்ண ரெட்டி. நீங்கதானே தி ஃபேமஸ் டிடக்டிவ் ஷங்கர்."

"ஆமா. வாங்க ரெட்டி."

ரெட்டி நாற்காலியில் அமர்ந்தான்.

"சொல்லுங்க."

"சார். பெரிய மனசு பண்ணி என்னோட கேசை எடுத்துக்கணும்."

ஷங்கர் மாலுவை பார்த்து கண்சிமிட்டினான். பார்த்தாயா புது கேஸ் என்ற பெருமிதம் அதில் தெரிந்தது.

"கேசை சொல்லுங்க."

"என்ன சொல்ல சாரே. நான் ஒரு பாவப்பட்ட மனுச ஜன்மம். சினி இண்டஸ்ட்ரில கேட்டு பாருங்க. நேனு எந்த பெரிய ஃபைனான்சியர்னு எல்லாரும் சொல்லுவாங்க."

"அப்படியா. மேல சொல்லுங்க."

"உங்களுக்கு பப்பிஸ்ரீ தெரியுமில்லையா?"

"கவர்ச்சிக்கன்னி பப்பிஸ்ரீயை தெரியாதவன் தமிழனே இல்லை சார்.".

"அவளேதான். அவ என்னுடைய பொண்டாட்டி."

"ஓ."

"சீக்ரெட் மேரேஜ் சார். ஆந்திராவுலே விஜயவாடாவுல பெல்லி சேஸ்குன்னானு. ஒரு வருசம் ஆகுது. யாருக்கும் தெரியாது."

"இண்ட்ரஸ்டிங். பப்பிஸ்ரீக்கு கல்யாணம் ஆயிருச்சா."

"பாருங்க. எங்க மேரேஜ் நல்லாதான் போயிட்டிருந்தது. ஆனா பப்பிஸ்ரீக்கு திடீர்னு ஒரு பாய் ஃபிரெண்டு. அவன் கூட சுத்துறா. தப்பு பண்றா. சொன்னா கேக்குறதில்லை. நேனு எந்த பாதபட்குன்னானுன்னு மீக்கு தெள்ளிது சார்."

"புரியுது. இதுக்கு எங்க கிட்டே ஏன் வந்தீங்க."

"நான் அவளை விவாகரத்து செய்யணும். அதுக்கு எனக்கு அவ தப்பா நடக்கிறான்றதுக்கான ஃப்ருஃப் வேணும். நீங்கதான் எனக்கு ஹெல்ப் செய்யணும். "

ரெட்டி கதறி கதறி அழ ஆரம்பித்தான்.

"டேக் இட் ஈஸி ரெட்டி. உங்க கேசை நாங்க எடுத்துக்கறோம். உங்க மனைவியை நாங்க வாட்ச் பண்றோம். உங்களுக்கு வேண்டிய ஃப்ரூஃப் இன்னும் ஒரு வாரத்துல உங்களுக்கு கொடுக்குறோம்."

கதறி அழுத ரெட்டியை ஆறுதல் கொடுத்து அனுப்பி வைத்தார்கள்.

-----------------------------------------------

"மாலு என்னமோ சொன்னியே. இங்க பார்த்தியா ரெட்டி மொத்த பேமண்ட்டையும் கேஷாவே கொடுத்துட்டு போயிருக்கான். பிஃப்டி தவுசண்டு." ஷங்கர்.

"அவன் கேட்ட ஆதாரம் எல்லாம்." இது மாலு.

"இந்த ஷங்கரை யாருன்னு நினைச்சே. சும்மா ஒரு வாரமா பப்பிஸ்ரீயை வாட்ச் பண்ணினேன். அவளும் அவ பாய்ஃபிரண்டும் சோலா ஷெரட்டன்ல புக் பண்ணின ஓட்டல் ரூம்ல யாருக்கும் தெரியாம கேமராவை ஃபிக்ஸ் பண்ணினேன். தேவையான ஆதாரம் போட்டாவாவே கிடைச்சிருச்சி."

"ஓ."

"அந்த போட்டோவெல்லாம் நீ பார்க்கலையே. சும்மா கிளுகிளுப்பா இருந்தது. மூணு நாள் முன்னாடிதான் ரெட்டி எல்லாத்தையும் வாங்கிகிட்டு போனான். இன்நேரம் ரெட்டி அதை தன் வக்கீல் கிட்ட கொடுத்து இருப்பான். அவனோட கேஸ் ஸ்ட்ராங்கா ஆயிருக்கும். நம்ம கேஸ் கிராண்ட் சக்சஸ்"

"ப்ரில்லியண்ட். நான் ரிலேட்டிவ் மேரேஜ்காக போன இந்த ஒரு வாரத்துல நீ இவ்வளவையும் தனியாவே சாதிச்சு இருக்கியே". அவனுக்கு வேண்டிய புத்துணர்வு டபுள் டோசாக அவன் கன்னத்தில் கிடைத்தது.

"தட் ஈஸ் மை ஷங்கர்."

"இட் ஈஸ் ஆல் இன் த கேம்."

டெலிபோன் ஒலித்தது. "அடுத்த கிளையண்டா இருக்கும்" பெருமையாக ஷங்கர் போனை எடுத்தான்.

"ஹல்லோ. டிடக்டிவ் ஷங்கர் ஸ்பீக்கிங்."

"யோவ் உனக்கு அறிவிருக்கா ?" மறுமுனையில் கோபமான பெண்குரல்.

"மேடம். யார் நீங்க. ராங் நம்பர்னு நினைக்கிறேன்."

"கரெக்ட் நம்பர்தான். நான் பப்பிஸ்ரீ பேசுறேன். நீதானே ரெட்டிக்கு போட்டோ எடுத்து கொடுத்தது."

"ஆமா. உங்க கணவர் ரெட்டி உங்க நடத்தையில சந்தேகப்பட்டு ஆதாரம் கேட்டாரு.".

"கணவனா. அந்த ஆளு என்னோட மேனேஜரா இருந்தான். ஒரு மாசத்துக்கு முன்னாடிதான் வேலையை விட்டு துரத்தினேன். நான் கல்யாணம் பண்ணிக்க இருக்கிற என்னோட பாய் ஃபிரரெண்ட் கூட இருக்க போட்டோவை நீ அவனுக்கு எடுத்து கொடுத்திருக்கே."

"ஆ..."

"ஆமாய்யா. ரெட்டி அந்த போட்டோவை காண்பிச்சு வெளியிட்டுடுவேன்னு சொல்லி பிளாக் மெயில் பண்ணி அஞ்சு லட்சம் என்கிட்ட வாங்கிட்டான். சரி அஞ்சு லட்சத்தோட தொலையுதுன்னு கொடுத்து போட்டோவை வாங்கிட்டேன். அதுகூட விசிட்டிங் கார்ட்ல உன் அட்ரசும் போன் நம்பரும் இருந்தது."

"ஓ.."

"ஆனா அந்த ராஸ்கல் இன்டர்நெட்ல வேற படத்தை போட்டு விட்டுட்டான். என் மானமே போச்சு."

"சாரி. மேடம்."

"சாரி. என்னய்யா. சாரி. இன்னும் நாலு நாள்ல உனக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பறேன்."

போனை வைத்துவிட்டாள். ஷங்கரும் மாலுவும் பேயறைந்தவர்கள் ஆனார்கள்.

-------

நான்கு நாட்கள் ஓடின. ஷங்கர் வக்கீல் நோட்டீஸ் வரும் என்று பயந்திருந்தான்.

அன்று டெலிபோன் மணியடித்தது.

"ஹல்லோ ஷங்கர். பப்பிஸ்ரீ இயர்."

"மேடம். நீங்க வக்கீல் நோட்டீஸ்னு..."

"பர்கெட் இட். இன்னைக்கு பேப்பர் பார்த்தியா.". அவள் குரலில் மகிழ்ச்சி இருந்தது.

சுருக்கமான செய்தி: புகைப்படத்தில் இருப்பது நானல்ல - பப்பிஸ்ரீ மறுப்பு. டூப்பாகவோ அல்லது ஒட்டு வேலையாகவோ இருக்கும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார். உடன் இருக்கும் நபர் யார் என்றே தெரியாது என்றும் மேலும் அவர் தெரிவித்தார்.

"உன் மேல கேஸ் போட்டா அந்த ஃபோட்டோவில இருக்கிறது நான்தான்னு நானே ஒத்துக்கிட்ட மாதிரி இருக்கும்னு வக்கீல் சொன்னார். நான் கேஸ் எதுவும் போடலை."

"தாங்ஸ் மேடம்."

"நான் தான் உங்களுக்கு தாங்ஸ் சொல்லணும் ஷங்கர். தமிழ்ல படமே இல்லாம மலையாளத்துல மட்டும் பண்ணிட்டு இருந்தேன். இந்த மேட்டர் வந்ததுல நாலு தமிழ் படம் புக் ஆகியிருக்கு."

"ஓ. கங்கிராட்ஸ் மேடம்.".

"நீங்களும் இதை பத்தி யாருகிட்டயும் மூச்சு விடாதீங்க. முக்கியமா என் பாய் ஃபிரெண்ட் பத்தி. நாங்க ஒரு இரண்டு வருசம் கழிச்சு கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கோம்."

"வெரி நைஸ் ஆஃப் யூ மேடம். நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்."

"தாங்ஸ்" அவள் போனை வைத்து விட்டாள்.

"அப்பாடா" நிம்மதி பெருமூச்சு விட்டனர் மாலுவும் ஷங்கரும்.

(வாசகர்கள் சி.ஐ.டி. ஷங்கரின் இந்த சாகசத்தை ரசித்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். இனி ஷங்கரும் மாலுவும் அவ்வப்போது வந்து தங்கள் சாகசத்தை நிகழ்த்துவார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். வாசகர்கள் யாரும் தீக்குளிக்க வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - ஆசிரியர்.)

Wednesday, January 30, 2008

என்ன எழவுடா இது ?

கோடம்பாக்கத்தின் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் முன் தனது பைக்கை ஸ்டாண்டினான் ஷங்கர். உலகமே நமது கதாநாயகன் சி.ஐ.டி. ஷங்கரைப் பற்றி அறியும் என்பதால் அவனை பற்றிய வர்ணனைகளை வெட்டிவிட்டு ஓவர் டு மாலினி. மாலு அலையஸ் மாலினி நமது கதாநாயகனின் அசிஸ்டண்ட். சேர்ந்து நான்கு மாதம் ஆகிறது. நீல ஜீன்ஸ் கால்சட்டையும் வெள்ளை சட்டையும் போட்டு குதிரை வால் கொண்டையில் அழகாக இருந்தாள். மேலும் அந்த... வேண்டாம். பேக் டு ஹீரோ.

ஷங்கர் அந்த குடியிருப்பை நோட்டமிட்டவனாக சிக்லெட்டை மெல்ல துவங்கினான். துப்பறியும் சிங்கம் ஷங்கருக்கு சிக்லெட் புத்துணர்வு தரும் என்பது உலகமறிந்த செய்தி. (கதாநாயகர்கள் புகைப்பிடிக்கக் கூடாது என்பதால் நமது நாயகன் சிக்லெட்டுக்கு மாறிவிட்டான் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். - ஆசிரியர்.).

"பாஸ். இந்த ஃப்ளாட்ஸ்லதானா ?"

"எஸ் மாலு. இந்த அசோசியேசன் செக்ரட்ரி நரேஷ் அய்யர்தான் கால் பண்ணியிருந்தார். ஒரு திருட்டு நடக்கிறதாவும் அதை கண்டு பிடிக்கணும்னும் சொன்னார்."

"வாவ். நான் உங்க கிட்ட சேர்ந்து இந்த நாலு மாசத்துல முதல் கேஸ். திருட்டா ? த்ரில்லிங்.".

"முதல்ல இந்த பகுதியை நோட்டம் விட்டுக்கிட்டு அப்புறம் உள்ளே போவோம். "

"பாஸ். இந்த நாலு மாசத்துல நீங்க எனக்கு சாலரியே கொடுத்ததில்லை. ஆஃப்டர் திஸ் கேசாவது....".

"யூ சில்லி. யூ ஆர் நாட் ஜஸ்ட் மை அசிஸ்டன்ட். ஆல்சோ மை லவர். உனக்கு எதுக்கு சாலரி."

"ஆமா இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை. என்னோட அப்பா கிட்ட நீங்க பெரிய துப்பறியும் புலின்னு சொல்லி வெச்சிருக்கேன். எத்தனை கேஸ் கண்டுபிடிச்சிருக்கீங்கன்னு கேக்குறார். அட்லீஸ்ட் அச்சீவ் சம்திங் இன் திஸ் கேஸ் ஃபார் அவர் லவ் சேக்."

"ஓக்கே. ஓக்கே. குட் யூ ப்ளீஸ் கிவ் மி சம் எனர்ஜி பூஸ்ட்."

"ப்ச்" (சிக்லெட்டோடு இப்போது மாலுவின் முத்தமும் நமது நாயகனுக்கு புத்துணர்வு தருவது என்பதை வாசகர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம். - ஆர்.)

இருவருமாக மாடியேறிச் சென்று "F" இலக்கமிட்ட வீட்டின் காலிங்பெல்லை அழுத்தினர்.
ஒரு சொட்டைத் தலையர் எட்டிப் பார்த்தார்.

"குட் மார்னிங். மிஸ்டர் ஐயர்."

"ஐ அம் நாட் ஐயர். ஐயம் ஐயங்கார்."

"வாட்?"

"நான் ஐயங்காராக இருப்பதில் பெருமிதம் அடைகிறேன்."

"என்ன எழவுடா இது" மனதுக்குள் நினைத்துக் கொண்டான் ஷங்கர். "மிஸ்டர் நரேஷ் ஐயர்......"

"ஓ. அவரா. அவர் எதிர்ல F."

"ஆனா இதுதானே F".

"இது E. எழுத்தோட கால் உடைஞ்சிருச்சி." மாலு தலையிலடித்துக் கொண்டிருந்தாள்.

--------------

"கம் இன் மிஸ்டர் ஷங்கர். ஐ அம் நரேஷ் ஐயர். செக்ரட்ரி ஃபார் திஸ் ரெசிடென்சியல் அப்பாரட்மெண்ட்ஸ்."

நரேஷ் ஐயர் அவர்களை வரவேற்றார். "ப்ளீஸ் பீ சீட்டட்." அமர்ந்தார்கள்.

"மிஸ்டர் நரேஷ் இங்க திருட்டு போறதா சொல்லியிருந்தீங்க இல்லையா."

"எஸ்."

"ஐ அப்சர்வ்டு தி திங்ஸ் அரவுண்டு. ப்ராக்சிமிட்டி ஆஃப் அதர் பில்டிங்ஸ். யூ ஹவ் ஏ வாட்ச்மேன் அரவுண்ட் தி கிளாக். பட் ஸ்டில் திருட்டு போகுதுன்னா... ஐ திங்க் திருடன் பக்கத்து பில்டிங்ல இருந்து கயிறு மூலமா உங்க பில்டிங்குக்கு வந்து திருடியிருக்கலாம்."

"நோ. நோ. யூ ஆர் மிஸ்டேகன்."

"மே பி. ஐ ஜஸ்ட் சஜஸ்டட் எ பாசிபிலிட்டி. எங்க என்ன என்ன வேல்யபிள்ஸ் ஜிவல்லரீஸ் திருட்டு போச்சுன்னு சொல்றீங்களா."

"நான் உங்களை வரச்சொன்னது வேற ஒரு திருட்டுக்கு. தண்ணி திருட்டு."

"என்னது."

"எஸ். வாட்டர். யூ சீ. இந்த ஃப்ளாட்ஸ்க்காக டெய்லி ஒரு வாட்டர் லாரி ஃபுல்லா தண்ணி கொண்டு வந்து பேஸ்மண்ட் டேங்க் ஃபில் பண்றோம். அதுதான் திருட்டு போகுது."

"ஓ" (என்ன எழவுடா இது. திரும்பவும் மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.).

"காலையில 6 ஓ க்ளாக் ஃபில் பண்ற வாட்டர் மதியம் 12 ஓ க்ளாக்குக்குள்ள காணாம போயிடுது. யூ ஹவ் டு இன்வஸ்டிகேட் திஸ்."

"தண்ணிதானே சார். இதுக்கு போய் இன்வஸ்டிகேஷன் எல்லாம்."

"நோ. நோ. யூ சீ. ஹவ் காஸ்ட்லி தி வாட்டர் ஈஸ். 500 ருப்பீஸ் ஃபார் ஒன் ட்ரிப் இன் லாரி. அண்டு ஐ அம் தி ஆன்சரபிள் செக்ரட்ரி."

"ஓக்கே. யாராவது அதிகமா யூஸ் பண்ணி காலியாகியிருக்கும்.".

"நோ. இட் ஈஸ் நாட் யூஸ்டு டு பி லைக் திஸ். லாஸ்ட் ஒன் வீக்காகத்தான் இப்படி ஆகுது."

"ஓக்கே சார். வீ வில் ஹவ் யுவர் கேஸ்". மாலு அறிவித்தாள்.

"மாலு" என்று துவங்கிய ஷங்கரை கண்களால் அடக்கினாள்.

"தாங்ஸ். ஹோப் யூ வில் ஃபைன்ட் இட் அவுட். எனக்கு ஆஃபிஸ் போகணும். ஐ வில் பி பேக் பை ஃபைவ் இன் த ஈவினிங்."

"ஓக்கே சார். வீ வில் ஹேங்க் அரவுண்ட் அண்டு வில் ஃபைன்ட் இட் ஃபார் யூ.".

அவர் கிளம்பி சென்றார்.

"ஓழுங்கா இந்த கேசையாவது கண்டுபிடிங்க." என்ற மாலுவை ஷங்கர் பரிதாபமாக பார்த்தான்.

---------------------

மாலை திரும்பிய நரேஷை மகிழ்ச்சியோடு வரவேற்றது நமது துப்பறியும் ஜோடி.

"சார். வீ ஹவ் ஃபைன்ட் இட் ஃபார் யூ.". ஷங்கர் அறிவித்தான்.

"ரியலி."

"இட் ஈஸ் யுவர் வாட்ச்மேன்."

"ஓ."

"வீ வாட்ச்டு. அந்த காவல்கார கிழவன் 11 மணியிலிருந்து 12 மணி வரைக்கும் தொட்டி தண்ணியையும் வெறும் மண் தரையில ஊற்றி காலி செஞ்சுட்டான்."

"அப்படியா."

"ஸீ. போட்டோ ஃப்ரூப். வீ ஹவ் டேக்கன் பிக்சர்ஸ் ஆஃப் ஹிம் இன் ஆக்சன்."
போட்டோக்களை நரேஷ் பார்த்தார்.

"பைத்தியக்காரத்தனமா இருக்கு. வெறும் தரையில தண்ணிய இறைச்சுக்கிட்டு."

"ஐ திங்க் ஹி மஸ்ட் பி எ சைக்கோ."

"முனுசாமி..."
அந்த காவல் கிழவன் பம்மியபடி வந்தான்.

"என்ன இது. நீ ஏன் தண்ணியை இப்படி வீணடிச்சு இருக்க."

"ஐயா செக்ரட்ரி அம்மாதான்..."

"அம்மாவா..."

"அம்மா உங்க கிட்ட சொல்லலீங்களா?"

"வாட் தி ஹெல் ஈஸ் கோயிங் ஆன் ஹியர்." வெளியேயிருந்து உள்ளே நுழைந்த அவள் மிஸஸ் ஷீலா அய்யர் வைஃப் ஆஃப் மிஸ்டர் நரேஷ் ஐயர்.

"ஸீ திஸ் பிக்சர்ஸ் ஃபார் யுவர் செல்ஃப்." ஐயர் போட்டோக்களை அவளிடம் நீட்டினார்.

"எஸ். ஃபார் அவர் ரெசிடென்ஸ் உமென்ஸ் அசோஷியேசன் வீ நீட் எ பேட்மின்டன்ட் கோர்ட் வித் கிராஸ். நான்தான் முனுசாமியை லான்ல புல் வளரட்டும்னு தண்ணி விட சொன்னேன். வை யூ பிக்சர்டு இட்?"

"நத்திங்." நரேஷ் அய்யர் மென்று முழுங்கினார்.

"புல்ஷிட்." அவள் போய்விட்டாள்.

"சாரி. " நரேஷ் அய்யர் நமது ஜோடியிடம் மென்று முழுங்கினார்.
"ஆக்சுவலி எங்களுக்குள்ள பத்து நாளா சண்டை. நாங்க பேசிக்கிறது இல்லை. அதுல அவ எங்கிட்ட சொல்லாம விட்டுட்டா போல. ஐ அம் ரியலி சாரி."

"நோ பிராப்ளம் சார். இட் ஈஸ் ஆல் இன் த கேம்."

நமது ஜோடி சோகமாக வெளியேறியது.

"ஷங்கர் இனியும் இந்த துப்பறியற வேலை உங்களுக்கு தேவையா. ப்ளீஸ் ஜாயின் த பிசினஸ் ஆஃப் யுவர் டாட். அட்லீஸ்ட் ஃபார் அவர் லவ் சேக்."

"ஓக்கே". ஷங்கர் தலையாட்டினான்.

"தட் ஈஸ் நைஸ் ஆஃப் யூ."..... "ப்ச்ச்ச்" இன்னொரு முறை புத்துணர்வு கிடைத்தாலும் ஷங்கர் இனி எதையும் கண்டு பிடிக்கப்போவதில்லை.

(இவ்வாறாக அகில உலக புகழ்பெற்ற நமது கதாநாயகன் ஷங்கர் தனது துப்பறியும் தொழிலை விட்டு விட்டதால் இனி அவரது துப்பறியும் கதைகள் இடம் பெறாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். - ஆசிரியர்.)

Tuesday, January 29, 2008

காந்தி என்றொரு மனிதன் இருந்தான்

கோட்சேவின் துப்பாக்கி குண்டுகள் காந்தியை துளைத்து 60 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. (ஜனவரி 30, 1948). ஒரு தேசத்தின் தந்தை "மகாத்மா" என்று அழைக்கப்பட்ட மனிதரின் கொள்கைகளின் தாக்கங்கள் இன்றும் தொடர்கிறதா? அல்லது இந்த தேசம் அதைக் கடந்துவிட்டதா.

காந்தியின் குரல் வெறும் சுதந்திர போராட்ட குரலாக இருக்கவில்லை. அது ஒரு சித்தாந்தத்தை தேடி நிறுவி அதன் மூலம் சுதந்திரம் நோக்கி என்று பயணித்தது. "அகிம்சை" மூலம் காந்தி சுதந்திரம் பெற்றுத்தந்தார் என்று நமது வரலாற்று பாடபுத்தகங்கள் படிப்பிக்கின்றன.

சுதந்திரம் பெற்றுத்தந்தது "அகிம்சை வழி போராட்டங்கள்" மட்டுமல்ல. பல காரணிகளில் அதுவும் ஒன்று என்றாலும் அதன் பங்கை மறுப்பதற்கில்லை.

இன்றைய சூழலில் காந்திய தத்துவமான "அகிம்சை" இன்னும் எடுபடக் கூடியதா ?

காந்திய தத்துவார்த்த அரசியல்தான் என்ன. அறவழி போராட்டங்கள், அனைவரையும் நேசித்தல், வன்முறையை எதிர்க்க அகிம்சை வழியில் போராட்டம். இவை இன்றும் செல்லுபடியாகுமா?

"லகே ரஹோ முன்னா பாய்" திரைப்படம் இந்த கேள்வியை என்னுள் கிளறிவிட்டது. அடிதடியை தொழிலாக கொண்ட ஒருவன் காதலிக்காக காந்தியை உள்வாங்கி காந்தியவாதியாக மாறுகிறான். சமூகத்தின் சகல பிரச்சனைகளுக்கும் காந்திய முறையில் தீர்வு சொல்கிறான் வானொலியின் பண்பலையில்.
தீர்வுகள் பலன் தருகின்றன.

"எனது வாசலில் தினமும் பீடாவை துப்பிச் செல்லும் அடாவடியான பலவான் ஒருவனை என்ன செய்ய. அவனிடம் சண்டை போட்டு பீடாவை துப்பாதே என்று அடித்து சொல்லலாமா."
"வேண்டாம். அவனிடம் இன்முகம் காட்டு. அவன் துப்பிய இடத்தை இன்முகத்தோடு தூய்மை செய்."
அவன் தினமும் துப்ப இவனும் இன்முகத்தோடு தூய்மை செய்கிறான்.
ஒரு நாள் இரண்டு நாள் மூன்று நாள், அவன் துப்ப துப்ப இவனும் சிரித்தபடி தூய்மை செய்கிறான்.
நான்காம் நாள் துப்பியவன் உணர்ந்து துப்பாமல் மன்னிப்பு கோரி செல்கிறான்.
காந்தியம் வெல்கிறது.

ஒரு கன்னம் அறைந்தவனுக்கு மறு கன்னம் காட்டினால் அவன் வெட்கி திருந்துவான் என்பது காந்தியம்.
இது எல்லா நிலைகளிலும் சாத்தியமா?

ஒருவன் தன் தினசரி வாழ்வில் தன்னை அறைபவர்க்கு மறுகன்னம் காட்டிக் கொண்டிருந்தால் வாழ முடியுமா. இரு கன்னத்திலும் மாறி மாறி அறைபடுபவன் என்ன செய்வான்?

தினசரி வாழ்வில் காந்தியத்தின் சாத்தியம் காந்தியை போன்றோர்க்கு மட்டும். இத்துணை பெரிய மனிதர் இவ்வளவு பணிந்து வருகிறார் என்பதால் எதிராளியும்/அமைப்பும் பணிந்து போவான்/போகும்.
அகிம்சை ஆயுதம் தனி நபர்களை பொறுத்தவரை, பலமுள்ளவர்கள் அல்லது தங்கள் பலத்தை நிரூபித்தவர்கள் ஆகியோருக்கு மட்டுமே சாத்தியமானது. பயன்தரக்கூடியது.
புலி புலால் உணவை மறுதளித்தால் கவனிக்கப்படும். ஒரு மான் மறுதளித்தால் ?

ஒரு சாதாரணன் ஏற்கனவே பணிந்து கிடப்பவன் இன்னும் பணிவதால் என்ன சாதிக்க முடியும். காணாமல்தான் போவான்.
இந்த திரைப்படத்திலும் ஏற்கனவே பெரிய ரெளடியாக இருப்பவன் பணிந்து காந்தியம் பேசுவதாலேயே சாதிக்கிறான்.

மிகச் சாதாரணன் வாழ்வில் காந்தியம் பயனற்றதே.
எல்லோரும் காந்தியை தனிமனித வாழ்வில் பின்பற்றினால் என்ன ஆகும் ?
வேர்க்கடலை வியாபாரம் நன்றாக ஆகும். (சொன்னவர் கண்ணதாசன் என்று நியாபகம்).

காந்தி தன்னளவில் தன் கொள்கைகளை சோதித்து சத்திய சோதனையாக மேற்கொண்டார். அவர் அளவில் அது சரியே. அவர் தனது சோதனைகளில் வென்றார் என்பதற்கு அவருக்கு பரிசாக கிடைத்த துப்பாக்கி குண்டுகளே சான்று.
காந்தி மகாத்மா என்பதில் சந்தேகம் இல்லை. இது போன்று இன்னொரு மனிதர் பிறந்து வருதலும் சாத்தியமில்லை. அவருடைய கொள்கைகள் அரசியலில் தூய்மையும் எளிமையும் நேர்மையையும் வலியுறுத்தியவை.
அவை சாதாரணன் தனிமனித வாழ்வில் கைக்கொள்ள வேண்டியவை அல்ல. மக்கள் சேவைக்கென்று வரும் அரசியல்வாதிகள்/குழுக்கள் கைக்கொள்ள வேண்டியவை.

ஒற்றைச் சுள்ளி எளிதாக உடையும். கட்டுச் சுள்ளி எதிர்ப்பை தாங்கி நிற்கும். காந்தியவாதம் குழுக்களுக்கானது. சமூகம் குழுவாக இயங்கும் போது தனது துவேசங்களை களைந்து அகிம்சை வழியில் நடப்பதை உறுதி செய்வது. இன்றைய நிலையில் கொள்கை/மத/இன/சாதி ரீதியாக ஒன்றுபட்டு வலிமை பெறும் குழுக்கள்/அவற்றின் எதிர்குழுக்கள் காந்தியத்தை/அகிம்சையை கட்டாயம் கைக்கொள்ள வேண்டும். அதுவே வன்முறைகளை தவிர்க்கும் வழியாக இருக்கும்.
இன்றைய நிலையில் அரசியல் குழுக்கள்/கட்சிகளிடம் காந்தியவாதம் கவலைக்கிடமாகவே உள்ளது.
அதற்காக காந்தியம் காலாவதியாகி விட்டதா என்றால் நிச்சயம் இல்லை.
அது என்றும் இருக்கும்.
குறைந்த பட்சம் அரசியல்வாதிகளிடம் முகமூடியாகவாவது.

Monday, January 21, 2008

"கார்"ட்டூன் ரத்னா........










இது உங்கள் லட்ச ரூபாய் காரை இழுத்துச் செல்லும்.











நன்றி: "மிட் டே"

Thursday, January 17, 2008

நீங்க காதலிச்சு இருக்கீங்களா ???


"நீங்க காதலிச்சு இருக்கீங்களா". அதிகம் பழகாத ஒருவனிடம் இருந்து வரும் கேள்வி.

நாங்கள் அன்றுதான் சந்தித்திருந்தோம். செய்யாறு அரசு கலைக் கல்லூரியில் நடந்த பட்டிமன்றத்தில் எனது கல்லூரி சார்பில் கலந்துகொண்டு பேருந்தில் திருவண்ணாமலை திரும்பி கொண்டிருந்தேன்.
(தலைப்பு பாரதிதாசன் பாடல்களில் விஞ்சி நிற்பது தமிழா ? சமூக உணர்வா ? காதலா ? )
எனது அருகில் அவன் அமர்ந்தான்.

"நீங்க ரொம்ப நல்லா பேசினீங்க."

"நன்றி. நீங்களும் ரொம்ப நல்லாவே பேசினீங்க கதிர்வேல். பாரதிதாசன் பாடல்களில் விஞ்சி நிற்பது தமிழ்தான் அப்படின்னு நடுவர் தீர்ப்பு சொன்னார்னா அதுக்கு உங்க பேச்சு அப்புறம் வாதங்கள்தான் காரணம்."

"நன்றிங்க." என்றான் அவன்.

"கலைக்கல்லூரில என்ன படிக்கிறீங்க கதிர்."

"தமிழ். BA. எனக்கு ஆச்சரியங்க. இஞ்சினியரிங் கல்லூரியில இருந்து வந்து பட்டிமன்றம் பேசுறீங்க."

"ஒரு ஆர்வம்தான்." சிரித்தேன்.

ஓடும் பேருந்தில் ஊர் போய் சேர இரண்டு மணி நேரம் இருக்க இன்னும் என்ன என்னமோ பேசினோம்.
ப்ளஸ் டூ முடித்து தான் முதலில் ஆசிரியர் பயிற்சி முடித்ததாகவும், வேலைக்கு பதிந்து அது கிடைக்க ஐந்தாண்டுகள் ஆகலாம் என்பதால் இப்போது கல்லூரியில் சேர்ந்து தமிழ் படிப்பதாகவும் அவன் சொன்னான்.

"பாரதிதாசன் பாடல்களில் விஞ்சி நிற்பது காதலேன்னு நீங்க பேசுனது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. நல்ல நல்ல கவிதையெல்லாம் மேற்கோள் காட்டினீங்க."

"பாரதிதாசனை காதல் கவிஞர்னு சொல்லுறது அபத்தம். தோற்கப் போகிற தலைப்புன்னு தெரியும். இருந்தாலும் கொடுத்த தலைப்பில்தானே பேசமுடியும்." சிரித்தேன்.

"இருந்தாலும் அருமையாக பேசினீங்க. காதலை பாடாத கவிஞன் இல்லை. காதலை பாடாதவன் கவிஞனே இல்லை. அப்படின்னு நீங்க சொன்னீங்க பாருங்க அதுக்கு கைவலிக்கிற அளவுக்கு நான் கைதட்டினேன்."

"நன்றி. ஆனா என்னன்னா எனக்கு காதல் பிடிக்காது. தலைப்புக்காகத்தான் பேசினேன். எதிர்காலத்துல தமிழுக்கு எதாவது கஷ்டம் வந்து நான் கவிஞன் ஆனாக்கூட காதலை பாடத கவிஞனனாகத்தான் இருப்பேன்."

அப்போதுதான் அந்த கேள்வியைக் கேட்டான். "நீங்க காதலிச்சு இருக்கீங்களா ?".

"இல்லை. படிக்கிற காலத்துல காதல்னு சொல்லிக்கிட்டு பொண்ணுங்க கிட்ட வழியறதும், அவங்களுக்கு லெட்டர் கொடுக்கிறதும். அவங்களுக்கு பாடிகார்டு மாதிரி பின்னாடியே போறதும். எனக்கு பிடிக்கிறதில்லை."

"என்னை மாதிரியே யோசிச்சு இருக்கீங்க. என்னதான் நம்ம மனசு கல் கோட்டை மாதிரி இருந்தாலும் காதல் காத்து மாதிரி உள்ள நுழைஞ்சிடுது. அப்ப மனசு அலையடிச்ச மணல் கோட்டை மாதிரி கரைஞ்சு போயிடுது." கவிதையாய் பேசினான்.

அவனையே பார்த்தேன். இப்போது நான் கேட்டேன். "நீங்க காதலிச்சு இருக்கீங்களா ?".

"காதலிக்கப்பட்டிருக்கிறேன். காதலிப்பதை விட காதலிக்கப்படுவது சுகமானது."

"இண்ட்ரஸ்டிங். சொல்லுங்களேன்." கேட்பதற்கு எனக்கு நேரமிருந்தது. பாதி தூரபயணம் மீதியிருந்தது.

"இளவரசிகளை தேடிப்பிடித்து காதலிக்க நான் இளவரசன் இல்லைங்க. காதல்ன்றது எனக்கு வரமாயிருக்க முடியாது. சாபமாய்த்தான் இருக்கும். என்னுடைய அப்பா கூலி தொழிலாளி. அம்மா பீடி மண்டியில பீடி சுத்துறாங்க. மூணு தங்கச்சிங்க. நானும் லீவ் நாள்ள மண்டியில பீடி சுத்துவேன். கஷ்டத்திலதான் படிக்கிறேன். செலவு அதிகமில்லா அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளியில படிச்சிட்டேன். அதே மாதிரி ஒரு டிகிரி வேணும்னு அரசு கலைக் கல்லூரியில தமிழ் மூணாவது வருடம். நானெல்லாம் காதலிக்க முடியுமா சொல்லுங்க."

அமைதியாயிருந்தேன்.

அவன் தன் கதையை தொடர்ந்தான்.

------------


"காதல் எப்ப வரும்னு நினைக்கிறீங்க. முதல் பார்வையிலேயே வருமா. இல்லை பழகி பார்த்து புரிஞ்சிகிட்ட பின்னாடி வருமா?"

"என்னை பொறுத்த வரைக்கும் முதல் பார்வையிலேயே ஏதாவது வந்தா அது பேரு காதல் இல்லை காமம். பழகி நல்லா தெரிஞ்சிகிட்ட பின்னாடி வந்தா அது சுயநலம்." நான் சொன்னதற்கு சிரித்தான்.

"நிறைய பெண்கள் கிட்ட பழகறோம். ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கே தவிர அதை காதல்னு சொல்ல முடியறதில்லை. என்னுடைய வகுப்பில இருபது பெண்கள். எங்க துறையில முதலாமாண்டு இரண்டாமாண்டு எல்லாம் எடுத்துகிட்டா கூட ஒரு அறுபது பேராவது இருப்பாங்க. நான் கல்சுரல் செக்கரட்ரியா மற்ற துறையில இருக்கிறவங்க கிட்டயும் பழகுறேன். எப்படியும் நூறு பெண்கள் இருக்கிற சூழ்நிலையில எல்லார்கிட்டயும் பேச பழக இருந்தாலும் ஒரு தொலைவு இருக்கவே செய்யுது. அவங்க கிட்ட பேசும்போது ஒரு உதறல் கூட இருக்கும். நட்பு இருக்குமே தவிர காதல் எல்லாம் வந்ததில்லை. இந்த சிச்சுவேஷன்லதான் அந்த லெட்டர்."

"லெட்டரா.."

"ஆமா. காலேஜ் விட்டு வீடு கிளம்ப என்னுடைய சைக்கிளை எடுக்கறப்ப சைக்கிள் கேரியர்ல இருந்தது. அழகா இதயம் படம் போட்ட காகித உறை. யார் வெச்சிருப்பாங்கன்னு சுத்தி முத்தும் பார்த்தா யாரும் இல்லை."

"அப்புறம். "

"என்னுடைய பெயர் எழுதியிருந்த அந்த கவரை பிரிச்சு பார்க்கிறேன். அன்புள்ள கதிர்வேலுவுக்கு அப்படின்னு ஆரம்பிச்சு எழுதியிருந்தது."

"ம்.."

"நான் உங்களை மிகவும் விரும்புகிறேன். உங்கள் இனிய பேச்சு பழகும் விதம் எல்லாம் எனக்கு பிடித்திருக்கிறது. உங்களுடன் நட்பாக பழகிவிட்டு எப்படி காதலை சொல்வது என்று தெரியவில்லை. உங்கள் குடும்ப நிலையிலிருந்து உங்களை பற்றி எல்லாமே நான் அறிவேன். நீங்கள் என் காதலை நிராகரித்துவிட்டால் நமது நட்பும் உடன் சேர்ந்து உடைந்து விடும் என்பதால் மிகவும் தயங்குகிறேன். ஆனால் மனதிலுள்ள காதலை சொல்லாமலே வைத்திருக்க முடியுமா. சொல்லிவிடலாம் என்றுதான் இந்த கடிதம். இந்த கடிதத்தில் கூட என்னை வெளிப்படுத்திக் கொள்ள தயக்கமாகவே இருக்கிறது. எந்த தருணத்தில் உங்கள் மீது காதல் வந்தது என்று கூட எனக்கு தெரியவில்லை. எல்லோரிடமும் ஒரே மாதிரி பழகும் உங்களுக்கு என் மீது தனிப்பட்ட நேசமோ காதலே இருக்காது என்பதை நான் அறிவேன். ஒரு பெண்ணாக என்னுடைய காதலை என்னால் நேரடியாக சொல்ல முடியாது. அப்படி சொல்லி நிராகரிக்கப்பட்டுவிட்டால் அதை தாங்கும் சக்தி எனக்கு கிடையாது. என்னுடைய காதலை விவரித்து என்னால் இக்கடிதத்தில் முழுமையாக எழுதமுடியவில்லை. என்னுடைய காதல் விவரிக்க முடியாதது. என்னை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். நாளைய தினம் பிப்ரவரி 14. நீங்கள் எனக்காக உங்களிடம் இருக்கும் பச்சை நிற சட்டையை அணிந்து கல்லூரிக்கு வந்தால் மிகவும் மகிழ்வேன். என்னுடைய தயக்கத்தை உதறி தங்களிடம் என் காதலை சொல்வேன். அப்படி நீங்கள் பச்சை சட்டையில் வராவிட்டால்... நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. ஆனால் உங்கள் நிலையறிந்து விலகிவிடுவேன். ஆனால் என் மனதில் உங்கள் மீதான காதல் அழியாத ஓவியமாக என்றும் இருக்கும். அப்படி நடக்கக்கூடாது என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன். நாளைய தினத்திற்காக காத்திருக்கிறேன்.

காதலுடன்....
அப்படின்னு எழுதியிருந்தது. யார் எழுதியதுன்னு தெரியலை."

"அடுத்த நாள் பச்சை சட்டையில் போனீங்களா...".

"இல்லை. யாரோ விளையாடுறாங்கன்னு நினைச்சேன். ஆனா கடிதத்தை திரும்பி திரும்பி படிச்சு பார்த்தா விளையாட்டு இல்லைன்னு தோணிச்சு."

"ம்.."

"என்னுடைய நிலையில் காதலுக்கு எல்லாம் இடமில்லை. அடுத்த நாள் கருப்பு சட்டையில போனேன்."

"ஓ."

"இரண்டு நாள் கழிச்சு என்னுடைய சைக்கிள் கேரியர்ல இன்னொரு கடிதம்."

"அதில என்ன இருந்தது.."

"அன்பானவருக்கு...

எனது உள்ளம் உடைந்த நிலையில் எழுதுகிறேன். என் காதலை மறுக்க நீங்கள் பச்சை சட்டை அணியாமல் வந்திருக்கலாம். ஆனால் எனது மனதை உடைப்பது போல் ஏன் கருப்பு சட்டை அணிந்து வந்தீர்கள். எனது காதல் தோற்றாலும் இனியும் நான் உங்களிடம் எப்போதும் போல பழகுவேன். இனி எப்போதும் என்னுடைய காதலையோ என்னையோ நான் வெளிப்படுத்திக் கொள்ளப் போவதில்லை. யாரும் அறியாமல் என் மனதில் பூத்த இந்தக் காதல் யாரும் அறியாமல் என் மனதோடு காலத்திற்கும் இருந்து என் மரணத்தில்தான் மடியும்.

நான் உங்களை
காதலித்தேன்.
காதலிக்கிறேன்.
காதலிப்பேன் காலமெல்லாம்.

ஆனால் அதை உங்களிடம் சொல்ல மாட்டேன். மேலே சிவப்பு வண்ணத்தில் இருப்பது மை அல்ல. என் இரத்தம். ஏனெனில் இந்தக் காதல் என் இரத்தத்தில் ஊறியது. இதை இரத்தத்தால் சொல்வது பொருத்தம் அல்லவா. என்னுள் சூல் கொண்டு கருவாகி உருவாகி கனிந்த காதலை அதற்கு உரியவரிடம் சொல்லி விட்டேன் என்ற திருப்தி ஒன்றே எனக்கு போதும். இனி உங்களுக்கு என் காதலால் தொல்லை தரமாட்டேன். நான் யார் என்பதை அறிய முயலவேண்டாம். என் கையெழுத்தை வைத்து என்னை கண்டுபிடிக்க முடியாது. மாற்றி எழுதியிருக்கிறேன். என்றும் நீங்கள் உங்கள் வாழ்வில் சிறப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இறைவனிடத்தில் எந்த நாளும் உங்களுக்காக பிரார்த்திப்பேன். காதல் சிதைந்த நிலையில் மாறாத அன்புடன்... காதலை சுமக்கும் ஒருத்தி."

"படிச்சதும் நான் பெரிய தப்பு செஞ்சிட்டனோன்னு தோணுச்சு. யாராயிருக்கும். இரத்தத்தால காதலை சொல்லி..... எவ்வளவு காதல் இருந்திருந்தா. தப்பு பண்ணிட்டேன். இந்த அளவுக்கு காதல் இருக்கிற பெண்ணை ஏமாத்திட்டேன் அப்படின்னு ஒரு குற்ற உணர்வு. இந்த காதலுக்கு பதிலா நான் என்ன தர முடியும். காதலை தவிர...."

"யாருன்னு தெரிஞ்சதா."

"இல்லை. இந்த கடிதம் வந்து ஒரு மாசமாகுது. யாராயிருக்கும்னு முடிஞ்ச வரைக்கும் தேடிப்பார்த்துட்டேன். ஒரு நல்ல காதலை இழந்துட்டேன். இன்னிக்கு நீங்க காதலை பத்தி பேசினப்ப மனசு என்னமோ செஞ்சுது. உங்க கிட்ட சொல்லணும்னு தோணுச்சு."

எங்களுக்கிடையில் பெரும் மெளனம் நிலவியது. எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

"ஆனா. காதலைவிட காதலிக்கப்பட்டவனுடைய நலன் முக்கியம்னு அந்த பெண் தன்னை வெளிப்படுத்திக்காம விலகிட்டது என்னை பாதிச்சுருச்சு. என்னுடைய நட்பு வட்டத்தில் ஒரு பெண்தான்னு நல்லா தெரியுது. என்னுடன் நட்போட பழகிக்கிட்டுருக்கவங்கள்ல அவ யாரு அப்படின்னு நான் எப்படி தெரிஞ்சுக்கிறது. கல்லூரி முடிய இன்னும் ஒரு மாதம்தான் இருக்கு. அவளை எப்படியும் நான் கண்டுபிடிப்பேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. அவ யாரு எப்படியிருப்பா அப்படின்றது எனக்கு தெரியலை. ஆனா யாராயிருந்தாலும் இந்தக் காதல் இந்த அன்பு இழக்கப் படவேண்டிய ஒன்று இல்லை. இந்த அன்புக்காக எதுவும் செய்யலாம். அவளை கண்டுபிடிச்சு என் காதலை கட்டாயம் சொல்லுவேன்."

பஸ் பேருந்து நிலையத்தை அடைந்து விட்டது.

"காதலிப்பதை விட காதலிக்கப்படுவது மிக சிறப்பானது. உங்க காதலை நீங்க கண்டுபிடிக்க வாழ்த்துக்கள்." விடைபெற்றேன்.

எனது பயணம் முடிந்தது. அவன் தன் காதலைத் தேடி முடிவுறதா அவன் பயணத்தில் பிரிந்து பயணித்தான்.




நீங்க காதலிச்சு இருக்கீங்களா

கதை முழுமை பெற்று இங்கு உள்ளது.



பின்னூட்டி துரிதப்படுத்திய CVR, வெட்டி, கொத்தனாருக்கு நன்றி.

Tuesday, January 15, 2008

எயுதனதுல புட்சது

போன வருசத்துல நாம இன்னா எயுதிக்கிறமோ அதுல நமக்கு புட்சது இன்னான்னு சொல்லனுமாம்.

இப்படி ஒரு விளையாட்டு ஓடிக்கினுகீது. நண்பர் வெட்டியார் நம்மளையும் இதுல இயுத்து விட்டுட்டாரு.

பதிவுலகத்துல நாம இன்னா எயுதி சாதிச்சோம் அப்படின்னு நினைச்சி பார்த்தா நாம இன்னும் இங்க இருக்கறதே சாதனைதான்னு தோணுது.

இன்னா எயுதிக்கிறோம்னு திரும்பி பார்த்தா... கதை எயுதி இருக்கிறோம். கவிஜ எயுதி இருக்கோம். சர்ச்சைய கிளப்புற விஷயத்தை அப்பப்ப தொட்டு இருக்கோம்.
அப்புறம் இருக்கவே இருக்கு உப்புமா, ஜல்லி, மொக்கை எல்லாம். ரைட் சைடுல "ஏற்கனவே எயுதனது"ன்றதுக்கு அடியில எல்லாமே இருக்கு.

திரும்பி பார்த்தா குறுக்கால ஆறு மாசமா தலைமறைவா இருந்து கூட 64 பதிவு எயுதி இருக்கோம்ன்றது ஆச்சரியமாதான் இருக்கு.

இருந்தாலும் புட்சதா எதாவது ஒண்ணு சொல்லணுமாமே.

என்னான்ட ஒரு பிரச்சனை என்னன்னா ஒரு எழுத்தாளனா (!!) என்னோட பதிவு எல்லாமே எனக்கு பிடிக்கும். ஒரு விமர்சகனா என்னோட எந்த பதிவுமே எனக்கு பிடிக்காது.

சரி புட்சதா பதிவு சொல்லணும்னு வந்தாச்சு. முட்டைய ஒடைக்காம ஆம்லெட் போட முடியுமா என்ன.

எனக்கு காதல் கதைகள்லாம் பிடிக்காது. ஆனா நானே காதல் கதை எழுதி இருக்கேன்றது எனக்கே ஆச்சரியம்.
அந்த ஆச்சரியத்தையே இங்க சஜஸ்ட் பண்ணிடறேன்.
"கோடம்பாக்கத்தில் மிஸ்டர் ஷெர்லாக் ஹோம்ஸ்... "

புதிய பதிவர்கள் படித்திராத பட்சத்தில் எனது ஆல்டைம் ஃபேவரிட் காமெடி .கல்யாணராமனுக்கு லவ்வு மேரேஜி - குறும்பான முழு நீள கதை.

மேலும் நகைச்சுவைக்காக..
மும்பை பெண்கள் அழகானவர்கள் !!!! .
ராமர் பாலம் - இடிக்காதிருக்க சூப்பர் மாற்று வழி .
அமெரிக்காவில் கார் ஓட்ட லைசன்ஸ்.



அப்பாலிக்கா என்ன... அடுத்து மத்தவங்களை ஆட்டத்துக்கு கூப்பிடணுமாம்.
தெரிஞ்சோ தெரியாமலோ அரைபிளேடு "ஆணியவாதி" அப்படின்னு ஒரு இமேஜ் பில்ட் அப் ஆயிடுச்சி.
அதை உடைக்க இந்த பொன்னான வாய்ப்பை பயன் படுத்திக்கலாம்.

ஆறு பெண் பதிவர்களை தங்கள் சிறந்த படைப்புகளை பகிர்ந்து கொள்ளுமாறு பணிவோடு அழைக்கிறேன்.

1. ஷைலஜா. (http://shylajan.blogspot.com) - (2007 ல் இவர் அதிகம் எழுதவில்லை. இப்போது மீண்டும் அதிகம் எழுதுகிறார். கவிதை பக்கங்கள்.)
2. மை ஃபிரண்ட் (http://engineer2207.blogspot.com/) - (பதிவுகளை விட பின்னூட்டங்களில் இவரை அதிகம் படித்திருக்கிறேன். சிறந்த பதிவை படிக்க தர கோருகிறேன்)
3. காயத்ரி (http://gayatri8782.blogspot.com) - (கவிதாயினி. 76 கவிதைகள் இவரது பக்கத்தில் இருக்கிறது. எனக்கு கவிதை பயம். அதுவும் பெண் எழுதிய கவிதை என்றால் சுத்த அலர்ஜி. தங்களுடைய சிறந்த கவிதையை பகிர்ந்து எனது கவிதை பயத்தை போக்க தங்களை கேட்டுக்கொள்கிறேன்.)
4. ப்ரியா வேங்கடகிருஷ்ணன் (http://tamilkkalvi.blogspot.com/) (இவர் நட்சத்திரமானதும்தான் முதல் தடவையாக வாசித்தேன். ஆச்சரியமூட்டும் தமிழார்வம். 2007 இல் அதிகம் எழுதவில்லை. தமிழை நிறைய எழுதவும் இதுவரை தான் எழுதியதை பகிர்ந்து கொள்ளவும் இவரை கேட்டுக்கொள்கிறேன்.)
5. தூயா. (http://thooya.blogspot.com) - (இவரது சமையல்கட்டு பக்கங்களை பார்த்து சில சமையல் குறிப்புகளை முயன்றுள்ளேன். பதிலுக்கு பதில் பழிவாங்குவதற்காக இப்போது அவரை பதிவெழுத அழைக்கிறேன்.)
6. செல்லி (http://pirakeshpathi.blogspot.com) - (வெரைட்டியான பதிவுகள். இலக்கிய இன்பம் தொடரை இவர் படங்களுடன் தந்தது நன்றாக இருந்தது.).

துவங்கிய சர்வேசருக்கும் அழைத்த வெட்டியாருக்கும் தொடர்ஓட்டத்திலுள்ள பதிவர்களுக்கும் நன்றிகள்.