தேன்கூடு போட்டியில் குறும்பான தலைப்பில் பொருந்தும் என்று நான் குறும்பாக எழுதிய நாடக வடிவம் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு, அதுவும் முதல் பரிசு. நம்ப முடியாமல் நான்.
என்ன சொல்வதென்றே தெரியவில்லை...
பதிவுலகிற்கு மிகப்புதியவன் நான்.. எனது முதல் பதிவு நவம்பர் மாதம் இடையில்தான் துவங்கியது. உங்கள் அனைவரின் ஆதரவும் தொடர்ச்சியான பின்னூட்டங்களுமே என்னை தொடர்ச்சியாக எழுத தூண்டியது.
வலையில் எனது எழுத்துக்கள் சென்னை செந்தமிழிலேயே வந்திருக்கின்றன.
ஆனால் எனது கல்யாணராமனுக்கு லவ்வு மேரேஜி - குறும்பான முழு நீள கதை தமிழில் நானறிந்த பேச்சுக் கூறுகளை உள்ளடக்கியது. அதன் மூன்று பகுதிகளையும் தனித்தனியாக தொடர்ந்து பதிவிட்டேன். முதலில் போட்டிக்கு என்று எழுதவில்லை. பின்னர் கதையில் இருந்த குறும்பின் தன்மை நோக்கி ஏன் இதனை குறும்பு போட்டியில் இடக்கூடாது என்ற எண்ணம் தோன்ற தொகுத்து ஒரே பதிவாக இட்டு போட்டியில் இணைத்தேன்.
இன்று இப்படைப்பு தெரிவு செய்யப்பட்டு வென்று இருக்கிறது.
எனது படைப்பை தேர்ந்தெடுத்த நடுவர் குழுவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலாக தொடர்ந்து படித்து ஆதரவு தந்தும் பின்னூட்டம் இட்டு பாராட்டியும் வந்த அனைவருக்கும் வாக்களித்த வாசகர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
போட்டியில் கலந்து கொண்ட அனைத்து சகபதிவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். அனைத்து போட்டி பதிவுகளையும் வாசித்தேன். மகிழ்ந்தேன்.
வலையுலகில் இத்தகு போட்டி நிகழ்வுகள் எழுதும் ஆர்வம் உடையோர்க்கு உறுதுணையான தூண்டுகோல்கள். தேன்கூடு மற்றும் தமிழோவியத்திற்கு எனது சிறப்பான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது மற்றுமொரு போட்டி படைப்பான ஹிந்தி ஒயிக.. எக்சாம் ஹால் அக்குறும்பு.. விற்கும் பெருமளவு ஆதரவு. தங்களின் அன்பில் நனைந்து திக்குமுக்காடிவிட்டேன்.
இந்த அங்கீகாரம் மகிழ்வை தரும் அதே வேளையில் இனி சற்று கவனம் பெறுவேன் என்பதால் பதிவில் வழக்கம் போல் கிறுக்கித் தள்ளாமல் அதே நேரத்தில் நமக்கு அங்கீகாரம் பெற்றுத்தந்த சென்னை செந்தமிழையும் கைவிடாது தொடர்வேன்.
வெற்றி பெற்ற பதிவுகள்.
கல்யாணராமனுக்கு லவ்வு மேரேஜி - குறும்பான முழு நீள கதை - அரை பிளேடு
குறும்பு - நாமக்கல் சிபி
குறும்பெல்லாம் குறும்பா? - எஸ்.கே.
நந்தன் - ராம்
வாழ்த்துக்கள் நாமக்கல் சிபி, எஸ்.கே., ராம்.
போட்டி முடிவுகளை காண...
டிசம்பர் ‘06 போட்டி முடிவுகள்
வலையில் நமது பதிவுகள் பெருமளவில் நமது நிகழ்வுகளை பதிவு செய்வனவாய் அமைகின்றன. நமது வாழ்வின் நிகழ்வுகள் பிறர்க்கு படிப்பினை என்றாலும் இலக்கியத் தரத்திற்கு நிகழ்வுகளைத் தாண்டி கற்பனைகள் அவசியமாகிறது. கனவுகள் கற்பனையின் ஊற்று.. கனவுகளின் உலகம் தனியுலகம். கண்மூடிக் காணும் கனவுகளாகட்டும். அல்லது கண்திறந்து காணும் கனவுகளாகட்டும். கனவுகள் கால நேர வர்த்தமானங்களில் கட்டுப்படுவன அல்ல. விதிமுறைகளில் சிக்கித் தவிப்பன அல்ல. ஆழ்மனதின் அழகான வெளிப்பாடுகள். கனவுகளில் பேதங்களற்ற பிரிவினைகளற்ற சமுதாயங்களை காணலாம். வளமான வாழ்க்கையை காணலாம். கனவுகளில் நமது குறிக்கோள்களும் அதனை அடையும் பாதைகளையும் காணலாம். தினசரி நிகழ்வுகளிலிருந்து நம்மை பிரித்து ஆட்கொள்ளும் நித்திரையில் வரும் கனவுகள் போல் வலைத்தளத்தில் நமது நிகழ்வுகளை பதிவிடும் நாம் நமது கனவுகளையும் பதிவிடுவோம்.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
நன்றியுடன்
அரை பிளேடு.