Wednesday, August 22, 2007

பதிவர் மொக்கராசுவின் மொக்கை பதிவு.

இது பதிவர் மொக்கராசுவின் கதை.

மொக்கராசு உலகமறிந்த மொக்கை பதிவர். தமது பெயருக்கேற்ப மொக்கையான பதிவுகளை எழுதுபவர். இத்தகைய மொக்கராசு பதிவுலகமோ காணாத மொக்கை ஒன்றை பதிய முடிவெடுத்தார். மொக்கை என்றால் உங்க வீட்டு மொக்கை எங்க வீட்டு மொக்கையல்ல உலகமகா மொக்கையாக இருக்க வேண்டும். வருங்கால சந்ததிகள் மொக்கை பதிவென்றால் தன் பதிவைத்தான் காட்டும் அளவுக்கு அது இருக்கு வேண்டும் என்று நினைத்தார்.

மூளையை கசக்கினார். மொக்கை ரசத்தை பிழிந்தார்.
ஒவ்வொரு எழுத்தையும் ரம்பத்தால் ராவி வலையேற்றினார்.
மொக்கை தாங்காமல் அவரது கணினியின் கீபோர்டு கதறியதை கூட அவர் பொருட்படுத்தவில்லை.
திரட்டிகளில் இணைப்பு கொடுத்தபிறகு ஒருமுறை தன் கதையை தானே படித்துப்பார்த்தார் மொக்கராசு.
அவரது மொக்கையை அவராலேயே தாங்க முடியாமல் மொக்கராசு மண்டை சிதறி இறந்தார்.

அதற்குள் அந்த மொக்கை பதிவு வலையுலகமெங்கும் பரவிவிட்டது. அந்த பதிவை திறந்த சிலரின் கணினிகள் புகை கக்கின. நெருப்பு நரி நிஜமாகவே நெருப்பை கக்கியது. மொக்கை பதிவை படித்த இதய பலவீனமானவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
ஆணிபிடுங்குவதில் இருந்து ஆசுவாசப்படுத்திக்கொள்வோம் என அப்பதிவை திறந்தவர்கள் மொக்கையின் தாக்கத்தால் தங்கள் தலையில் கடப்பாரை இறங்குவதாக உணர்ந்தார்கள்.

பலர் பதிவை படித்து பைத்தியமானார்கள். பத்தாவது இருபதாவது மாடியென உயரமான இடங்களில் வேலை செய்த பலர் ஜன்னல்கள் மூலம் எகிறி குதித்தனர். பலர் தங்கள் கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்து தங்கள் கணினியே தாக்க ஆரம்பித்தனர். வீடுகள், பிரெளசிங் செண்டர்கள் எல்லாவற்றிலும் இதே நிலைதான். மென்பொருள் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களில் பலருக்கு என்ன ஆனது என்று அறியாமல் குழம்பின.

அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய அனைத்து நாடுகளின் உளவுத்துறையும் உஷார் படுத்தப்பட்டன.

ஒய்டுகே இதனுடன் ஒப்பிடும்போது ஒன்றுமேயில்லை என பில்கேட்ஸ் தெரிவித்தார்.

இது பின்லேடனின் சதியாக இருக்கலாம் என அமெரிக்க அதிபரும் இங்கிலாந்து அதிபரும் கருத்து தெரிவித்தனர்.

இத்தனை களேபரத்துக்கும் பின் இத்தனைக்கும் காரணம் ஒரு மொக்கை பதிவே என்று தெரிய வந்தது.

இந்தப்பதிவை தடைசெய்யக் கோரி ஐநாவின் மனிதஉரிமை அமைப்பு கோரிக்கை விடுத்தது.

போர்க்கால நடவடிக்கை எடுத்து பிளாக்கரில் அந்த மொக்கை பதிவு முடக்கப்பட்டது.

உலகமே பெருமூச்சு வாங்கியது.

இந்த மொக்கை பதிவின் ஆற்றல் அணுகுண்டின் ஆற்றலை விட அளப்பரியது என்று வியந்த அமெரிக்க இராணுவம் அதன் காப்பி ரைட்சை வாங்கியுள்ளது.

எதிர்காலத்தில் தன்னை எதிர்க்கும் நாடுகள் மீது இப்பதிவை ஏவிவிட அமெரிக்க இராணுவம் பதுக்கி வைத்துள்ளதாக தெரிகிறது.

ஐநாவில் மொக்கைபதிவு தடுப்புத் தீர்மானமும் அதையடுத்து நிறைவேறியுள்ளது.

இவ்வாறு உலகையே கலக்கிய மொக்கைராசுவின் மொக்கை பதிவு ஒரு முடிவுக்கு வந்தது.

சுபம்.

7 comments:

said...

யாராச்சும் காப்பாத்துங்க.... எனது கணிப்பொறியிலிருந்து புகை வருகிறது.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

\\இவ்வாறு உலகையே கலக்கிய மொக்கைராசுவின் மொக்கை பதிவு ஒரு முடிவுக்கு வந்தது.\\

அப்ப இனி நீங்க பதிவு எழுத மாட்டிங்களா! :)))



-------------------------------------------------------------------------------------------------------------
said...

அனானி...

பாத்தீங்களா. அந்த மொக்க பதிவு பத்தின பதிவ படிச்சாலே கம்ப்யூட்டர்ல புகை வருதுன்னா... சம்பந்தப்பட்ட பதிவையே படிச்சா என்ன ஆகறது. :)



-------------------------------------------------------------------------------------------------------------
said...

கோபிநாத்....

மொக்கராசு வேற... நான்வேற...
அப்ப என்னுடய மிகச்சிறந்த (!!) நகைச்சுவை பதிவுகளை மொக்கைன்னு சொல்றீங்களா...

நற.... நற... நற....

:)



-------------------------------------------------------------------------------------------------------------
said...

யப்பா... கண்ணை கட்டுதே :)



-------------------------------------------------------------------------------------------------------------
said...

கண்ணை கட்டுதே என்று சொன்ன அனானி :)



-------------------------------------------------------------------------------------------------------------
said...

தாங்க முடியல சாமி... :)



-------------------------------------------------------------------------------------------------------------