50 ஆண்டுகளுக்கு முன் தமிழனின் பெயர்கள்...
சுவாமிநாத ஐயர், பிரதாப முதலியார், ராமசாமி படையாச்சி, முத்துராமலிங்க தேவர், ராமசாமி நாயக்கர், அண்ணாமலைச் செட்டியார்.
தமிழனின் பெயரில் அவனது ஜாதி தவிர்க்க முடியாததாயிருந்தது. பெயரைக்கொண்டு ஒருவரின் ஜாதி அடையாளம் தெரிந்தது.
இன்று....
தமிழன் தனதுபெயரில் இருந்த ஜாதி அடையாளங்களை நீக்கி விட்டான்.
அவனது பெயர் ரமேஷ், கணேஷ், உமேஷ், காமேஷ் என்பதாக இருக்கிறது.
ஜாதி அடையாளங்களை துறந்த வகையில் இது உண்மையில் நல்ல முன்னேற்றமே.
ஆயின் இவை தமிழ்ப்பெயரா என்ற கேள்வி எழுகிறது.
இந்த உலகில் நமது பெயரை நமக்கு நாமே வைத்துக்கொள்ள இயலாதவர்களாய் இருக்கிறோம்.
நமக்கு உயிரைத்தந்தவர்கள்... நம்மை தமிழனாய் பிறக்கவைத்தவர்கள்... நமக்கு அளித்த பெயரைத் தாங்கியவர்களாக இருக்கிறோம்.
எனது பெயர் எனது கொள்கைக்கு எதிராக இருக்கிறது.
பெற்றோர் வடமொழிப்பெயர் இட்டுவிட்டனர். எனக்கு தமிழ்ப்பெயர் வேண்டும் என்பதோ...
என்பெற்றோர் தூய தமிழ்பெயர் இட்டனர். எனக்கு வடமொழிப்பெயர் வேண்டும்.... என்பதோ...
ஆயிரம் கனவுகளுடன் நமது பெற்றோர் நமக்கு வைத்த பெயரை மாற்றுவது அவர்களது கனவுகளை குலைப்பதாகும்.
நமது முந்தையதலைமுறை சாதி எதிர்ப்பு உணர்வுகளால் பெயரில் சாதியை தூக்கிஎறிந்துள்ளனர்.
பெயரில் ஜாதி அடையாளத்தை தொலைத்த நாம் உடன் சேர்த்து தமிழ் அடையாளத்தையும் சேர்த்தே தொலைத்துவிட்டோமோ.
தமிழனுக்கு தனது வாயில் நுழையாத "ஷ்' மீது அப்படியொரு மோகம்.
கணேஷ், ரமேஷ் என்று பெயரிட்டு "கணேசு"... "ரமேசு"... என்று கூப்பிடுவதில் ஏதோ ஆனந்தம்.
தன்னையாண்ட ரஜபுதன வீரன் "ராஜா தேஜ்சிங்" கை "ராஜா தேசிங்கு" வாக்கி தமிழ்ப்படுத்தியன் தமிழன்.
ராம் என்ற வடமொழியின் மீது "அன்" என்ற தமிழ் விகுதியை ஏற்று "ராமன்" என்கிறோம். வடமொழியை எடுத்தாண்டாலும் ஒரு காலத்தில் தமிழன் அதை தமிழ்ப்படுத்தியே வந்திருக்கிறான்.
(எ.கா) கந்தன் (ஸ்கந்தா), குமரன்(குமார்), சாமி (ஸ்வாமி).
ஆனால் தற்போதைய பெயர்களில் தமிழ்ப்படுத்துதலும், தமிழக்கான விகுதியும் காணாமல் போவது வியப்பளிக்கிறது.
சொல்லி வைத்தது போல் ஒரே மாதிரியான பெயர்களை வைக்கும் பொதுபுத்தி தமிழனுக்கு எப்படி வந்தது....
உற்று நோக்கினால் பெயரிடுதல் என்பது பெரும்பாலும் அந்த அந்த காலகட்டத்தின் ஃபேஷனை பொறுத்து அமைவதும் சமயத்தில் ஒப்பு நோக்கத்தக்கது.
தமிழன் தனது பெயரில் இருந்த ஜாதி அடையாளத்தை துறந்து... தமிழ் அடையாளத்தையும் தூக்கி எறிந்து... வடமொழிப் பெயர் இடுவதன் மூலமாக தமிழன் தனது அடையாளத்தை இந்தியனாக மட்டும் நிறுவி பெருமளவில் தேசிய நீரோட்டத்தில் கலந்து விட்டானோ.
நரேஷ், சுரேஷ் போன்ற பெயர்களில் இந்திய அடையாளம் மட்டும்தான் இருக்கிறது.
பெயரில் அடையாளம் என்பது அத்துணை இன்றியமையாததா.
இனம், மதம், நாடு இந்தஅடையாளங்கள் இல்லாத ஒரு பெயர் இருத்தல் இயலுமா.
அனைத்து அடையாளங்களையும் தூக்கியெறிந்து, கட்டுகளையும் உடைத்து பெயரிலிகளாக உலவுதல் சாத்தியமா.
ரமேஷ், உமேஷ், தமிழரசன், மண்ணாங்கட்டி, பிச்சாண்டி, ஜோசப், அப்துல்லா பெயர் எதுவாக இருந்தால் என்ன.
பெயரைவிட பெரியது பெயரைத்தாங்கியவனின் தமிழ்உணர்வுதான் அல்லவா.
பெயரில் என்ன இருக்கிறது.
சந்தனத்தை என்னபெயர் இட்டு அழைத்தாலும் அது மணக்கத்தான் செய்யும்.
எனது பெயர் எந்த அடையாளமுமின்று வெறுமனெ "ஓ" என்ற ஓசையாக இருந்தால் அது தமிழ் "ஓ"வா அல்லது ஆங்கில "O"வா என்று கேள்வி எழுப்பப்படுமா.
தமிழ்ப்பெயர்கள் மீது எனக்கு தனியாத தாகமுண்டு.
நிலவன், முகிலன், வளவன், மாறன், எழிலன்.... தமிழின் அன் விகுதியுடன் எத்துணை அழகுப் பெயர்கள்.
அதற்காக பெயர்மாற்றம் என்ற பொலிட்டிக்கல் ஜிம்மிக்சில் எனக்கு உடன்பாடு இல்லை.
பெயரிடுவதன் மூலம் நமது அடையாளங்களை நமது பெற்றோர் தேர்ந்தெடுத்தனர்.
நாளைய சமுதாயத்தின் பெயர்களை நமது பிள்ளைகளுக்கு இட்டு நாம்தான் தேர்ந்தெடுக்கிறொம்.
எதிர்கால சமுதாயத்திற்கு நற்தமிழ்ப் பெயர்களிடுவோம்...
ஆயினும் பெயரினும் பெரிது தமிழ் உணர்வு. அவ்வுணர்வோடு பிள்ளைகளை வளர்ப்போம்.
நல்லதோர் தமிழ்ச்சமுதாயம் சமைப்போம்.