Thursday, November 29, 2007

பெண்ணுரிமை காக்க கிளம்பி வா ஆணினமே.

தாங்க முடியலை சாமி. நாட்டுல ஏன் இப்படி கொடுமை எல்லாம் நடக்குது.

பெண்கள் புகுந்த வீட்டுக்கு போய்த்தான் தீரவேண்டுமா.
பெண்கள் மாமியாரோடு வாழ்ந்துதான் தீர வேண்டுமா.

கணவனுக்காக தியாகம் செய்து பெண் வாழவேண்டுமா.
உப்புமாவை பெண்தான் கிண்ட வேண்டுமா. இது என்ன பெண் அடிமைத்தனம். ஆண் கிண்டினால் உப்புமா வராதா.

குடும்பம் என்ற அமைப்பிற்காக பெண் ஓடாய்த்தேய வேண்டுமா.
மாமியார் என்ற ராட்சசியிடம் பெண் ஏன் கஸ்டப்படவேணும். (மாமியார்ன்றவங்க பெண்தான்றத வசதியா மறந்துடுங்க. ப்ளீஸ்.)

ஒரு ஆணுக்கு மாமியார் வீட்டுக்கு போவது மானப்பிரச்சனைன்னா பொண்ணுக்கும் அது மானப்பிரச்சனைதான் இல்லையா.
ரொம்ப கரெக்ட். இன்னா பண்ணலாம்.
கல்யாணம் பண்ண கையோட ஆண் மானத்தோட தன்னோட வீட்ல மட்டும் வாழணும். அதே மாதிரி பெண்ணும் மானத்தோட தன்னோட வீட்ல வாழணும்.
இவங்க எதுக்கு ஒருத்தர் மானத்தை ஒருத்தர் விட்டுக்கொடுத்துட்டு அடுத்தவங்க வீட்ல போய் வாழணும்ன்றேன்.
கல்யாணம் பண்ண கையோட ஆணும் பெண்ணும் மானத்தோட தனித்தனியா வாழ்ந்துட்டா பிரச்சனை சால்வ்டு.

இல்லை சேர்ந்துதான் வாழணுமா. இன்னா பண்ணலாம்.
இந்த மாமியார்.. மாமனார் கொடுமை எல்லாம் பொண்ணுக்கு வரக்கூடாது.
பையன் கல்யாணம் ஆன கையோட "இந்தா நைனா. இந்தாம்மா. எதோ பெத்தீங்க. வளர்த்தீங்க. உங்க கடமை முடிஞ்சி போச்சி. செத்தீங்கன்னா செய்தி சொல்லுங்க. வந்து கொள்ளி போடறேன்"னு சொல்லிட்டு கிளம்பி வந்துடணும்.
அதே மாதிரி பொண்ணும் அவங்க அப்பா அம்மா கிட்ட சொல்லிட்டு வந்துடணும்.
அப்பாலிக்கா மானப் பிரச்சனை இல்லாம இரண்டு பேரும் வாழலாம்.


அப்பாலிக்கா டெர்ம்ஸ் அண்டு கண்டிசன்ஸ்.
ஆண் இருபதாயிரம் வாங்குறானா. பொண்ணு பத்தாயிரம் வாங்குதா. ஆண் ஒரு வேளை சமைக்க வேண்டியது. பொண்ணு இரண்டு வேளை சமைக்க வேண்டியது.
பொண்ணு இருபதாயிரம் வாங்குது. பையன் பத்தாயிரம் வாங்குறானா. பையன் இரண்டு வேளை சமைக்க வேண்டியது. பொண்ணு ஒரு வேளை சமைக்க வேண்டியது.
பையன் மட்டும்தான் வேலைக்கு போறான்னா பொண்ணு சமைக்க வேண்டியது.
பொண்ணு மட்டும்தான் வேலைக்கு போகுதுன்னா பையன் சமைக்க வேண்டியது.
ரிஜிஸ்டர் ஆஃபீசுல கையெழுத்து போடறதுக்கு மின்னாடியே இந்த அக்கரிமெண்டை கரீக்டா எழுதிக்கணும்.
சமத்துவத்தை கரீக்டா நிலை நாட்டணும் இல்லை.


இன்னாமோ சொல்றாங்களேப்பா. அன்பு, பாசம் அப்படின்னு இன்னான்னாமோ. அதெல்லாம் இன்னாத்துக்கு சொல்லு.
அன்பும் பாசமும் மட்டுமே இருந்துச்சின்னா அடுத்தவேளை சோறு வந்துடுமா இன்னா.
டப்புதான் எல்லாமே. இன்னான்ற.

குழந்தைங்களுக்கு கதைசொல்றதுக்காவது தாத்தா பாட்டி வோணும்னு கதையா விடுறீங்க.
டிவியை திருப்புனா நூறு சானல் வருது. இதுல சொல்லாத கதையா அவங்க சொல்ல போறாங்க.
கதை சொல்றதுக்காக இரண்டு கிழடு கட்டைங்கள வெச்சிக்கிட்டு வடிச்சுக் கொட்டிக்கினு இருக்க முடியாது. கரீட்டுதானே.

உலகம் எங்கியோ போய்க்கினு கீது. இன்னமும் "கூட்டு" குடும்பம் "பொறியல்" குடும்பம்ன்னு கிட்டு.
சின்ன குடும்பமா இருந்தா வசதியான "பீட்சா" குடும்பமா "கோக்" குடும்பமா இருக்கலாம் இல்லை.
புள்ள எல்லாம் பொறுமையா பெத்து போர்டிங் ஸ்கூல்ல சேர்த்து விட்டுட்டா போச்சு. வசதிதான் முக்கியம்.


சிந்தியுங்க. புருசன் பொண்டாட்டி இரண்டுபேரு மட்டும் சந்தோசமா இருக்கணும்னா அப்பா அம்மாவை அடிச்சு தொறத்தறது தப்பே இல்லை.
நம்ம வாழ்க்கை நம்ம சந்தோசந்தான் முக்கியம்.
அதைவிட பெண்ணுரிமை ரொம்ப ரொம்ப முக்கியம்.
பொண்ணுக்கு வாழ்க்கையில வரக்கூடாத பெரிய கஷ்டம் மாமியார் கஷ்டம். அதை அவங்களுக்கு கொடுத்துடாதீங்க.


யோசிங்க ஆண்களே. யோசிங்க.
பெண்ணுரிமைய கட்டிக் காப்பாத்த கிளம்பி வாங்க.

(பொண்ணு மாமியார் வூட்டுக்கு போவக்கூடாதுன்னு எயுதறதுதான் பெண்ணுரிமையாம்.
அடடா. நானும் ஒரு பெண்ணரிமை கட்டுரை எயுதிட்டேன்ல. :)))))


பின்குறிப்பு:

நாட்டுல நிறைய கல்யாணமாகாத ஆண்கள் இந்த ரேஞ்சுலதான் பெண்ணுரிமைய பத்தி எயுதி பதிவு போட்டுக்னு கீறாங்கோ.
இதெல்லாம் ஒரு வியாதி. அவ்வளவுதான்.
கல்யாணம் ஆனா எல்லாம் சரியாப் பூடும்.
கல்யாணம் ஆயிருச்சின்னா இந்த மாதிரி பதிவு போடுவாங்கன்றீங்க.
ஒண்ணு பதிவு போடக்கூட சுதந்திரம் இல்லாம பதிவுலக விட்டு காணாம போய்டுவாங்க.
இல்லாட்டி எதாவது ஒரு மூலையா இருந்து வைஃபாலஜி, லைஃபாலஜின்னு கதறிக்னு இருப்பாங்க.



Tuesday, November 27, 2007

விற்றது தமிழ்.....

"மூவுலகையும் ஓர் குடையின் கீழ் ஆளும் அரசே. ஆயிரம் யானைகளை தனியனாக நின்று வெட்டி வீழ்த்திய வீராதி வீரனே. இப்போரில் நீ பெற்ற வெற்றியை பாடலாய் பாட யான் வந்தேன்."

"பாடும் புலவரே. பாடும். ஒவ்வொரு பாடலுக்கும் நூறு பொன் பரிசு."

"மன்னா உன் கொடைத் தன்மையே தன்மை."

அன்றைய புலவன் விற்றது தமிழ்.

----------------

"கவிஞரே நல்ல சிச்சுவேசன். ஹீரோயின் கனவுல ஹீரோவும் கவர்ச்சி நடிகையும் ஆடுறாங்க."

"நல்லது. எப்படிப்பட்ட பாடல் வரிகள் வேண்டும் உங்களுக்கு."

"சும்மா ஜிவ்வுன்னு சூடு ஏறனும். பிரட்யூசர் இந்த பாட்டை ரொம்ப எதிர்பார்க்கிறார்."

"சரசமாக பாடும் பாடலில் சற்று விரசத்தை விரவ விட சொல்கிறீர். நானும் சற்று எதிர்பார்க்கிறேன்."

"நீங்க எதிர்பார்க்கறதை விட அதிகமாவே கிடைக்கும். பாட்டை ஜமாய்ச்சிடுங்க."

இன்றைய கவிஞன் விற்றது தமிழ்.

--------------

"தமிழகத்தில் தமிழ் கற்றுத் தராத பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்".
செய்தித் தாளினை வைத்துக் கொண்டு தலைவனை பார்க்க ஓடி வந்திருந்தான் அவன்.

"என்ன தலைவரே. இப்படி சொல்லிட்டீங்க. உங்களுக்கு பினாமியா நான் நடத்துற பள்ளிக் கூடங்க நாலிலேயே தமிழ்ப் பாடம் கிடையாது. நம்ம பள்ளிக்கூடங்க என்ன ஆகிறது."

தலைவர் சிரித்தார்.

"ஆட்சிக்கு வந்தா தமிழுக்கு ஏதாவது செய்யணும்யா. நாளைக்கு ஒரு பய நம்மளை நீ என்ன செஞ்சன்னு கேள்வி கேட்க கூடாது பாரு."

"தலைவரே. ஆனா நம்ம பள்ளிக்கூடம் எல்லாம்."

"அரசாணையோட மூணாவது பக்கத்துல நாலாவது பத்தியில அரசின் சிறப்பு அனுமதி பெற்ற பள்ளிக்கூடங்களுக்கு விலக்கு அளிக்கப்படும்னு இருக்கு. நம்ம பள்ளிக்கூடம் எல்லாம் அதுல வரும்."

"தலைவரே. எங்கயோ போய்ட்டீங்க."

"அது மட்டும் இல்லையா. கிட்டத்தட்ட இந்த மாதிரி 1600 பள்ளிக் கூடம் இருக்கு. அத்தனை பயலும் அலறியடிச்சிட்டு வருவான். சிறப்பு அனுமதிக்கு ஒரு ரேட் போட்டு்ட்டோம்னு வை ஒரு கலக்சன் போட்டுடலாம் இல்லை."

"தெய்வமே எங்கயோ போய்ட்டீங்க." தலைவரின் காலில் விழுந்தான்.

அரசியல் விற்றது தமிழ்.

-------------

"சார். ரொம்ப நல்ல கதை சார். கேளுங்க சார்."

"சரி சொல்லுய்யா. "

"ஹீரோ ஒரு மாதிரி மன நிலை சரியில்லாத ஆளு. அவனுக்கு பிரியமானவங்க எல்லாம் செத்துடறாங்க. சின்ன வயசுலேயே அவங்க அம்மா. அப்புறமா அவனுக்கு பாடம் சொல்லி கொடுத்த வாத்தியாரு. அப்புறம் அவங்க அப்பா. யாருமே இல்லாத அனாதையா நிக்கிறான். "

"என்னய்யா கத இது."

"இருங்க சார் சொல்லி முடிக்கலை. சின்ன வயசுல ஹீரோ காதலிச்ச பொண்ணு கூட அவனை விட்டுட்டு எங்கயோ கண்காணாத தூரத்துல போயிடுது."

"சாதாரண கதையா இருக்கே."

"இல்லை சார். முக்கியமான திருப்பமே இப்பதான் வருது. போலீசால ஹீரோ பாதிக்கப்படுறான். தன்னுடைய இந்த நிலைக்கு சமுதாயம்தான் காரணம்னு ஹீரோ நினைக்கிறான். கொலை பண்ண ஆரம்பிக்கிறான். சார். ஒண்ணு இல்லை இரண்டு இல்லை. இருபத்தி மூணு கொலை. டிக்கெட் கொடுக்க மாட்டேன்னு சொன்ன ரயில்வே கிளார்க். டிரெயின்ல பார்த்த போலீஸ்காரன். பீச்ல இருந்த காதல் ஜோடி. எல்லாரையும் போட்டுத் தள்றான்."

"ஏன்யா. வாழைக் குலையாயா அவன் சீவி தள்ளுறதுக்கு. கதை சரி வரலையே."

"இருங்க சார். ஹீரோ ஏன் கொலை பண்றான்னு கேளுங்க. அங்கதான் சார் இருக்கு கதையோட முக்கியமான விஷயமே."

"என்னய்யா அது."

"ஹீரோ தமிழ் படிச்சான். தமிழ் நாட்டுல தமிழ் படிச்சவனுக்கு வேலை இல்லை. ஹீரோ தமிழுக்காக பாடுபடறான். தமிழோட இலக்கிய வளர்ச்சிக்காக பாடுபடறான். யாரும் மதிக்க மாட்டேங்கறாங்க."

"ம்..."

"இரண்டாயிரம் வருசத்து தமிழுக்கு மதிப்பில்லை. அவ்வளவுதான் சிவனா மாறுறான். அழிக்கிறான்."

"இது நல்லா இருக்குய்யா. நிச்சயமா ஓடும். வித்தியாசமா இருக்கு. இந்த கதையை கரெக்டா எடு. இன்னாமோ இலக்கிய வளர்ச்சி அது இதுன்னியே. அதெல்லாம் வேண்டாம். அதெல்லாம் சரிவராது. தூக்கிடு."

"சரி. சார்."

"பராவாயில்லையா. வித்தியாசமா யோசிக்கிறீங்க. நாம இந்த படத்தை எடுக்கலாம்."

"தாங்ஸ் சார்"

கற்றது தமிழ் - விற்றது தமிழ்.

-----------------------------------------------------


மறைந்த என் மனைவியின் நினைவாக..

என் அன்பு மனைவியே..

தேவதையாய் என் வாழ்வில் வந்த நீ இறந்து இன்று ஓராண்டு ஆகிறது. ஓரு யுகம் கடந்து போனதாய் உணர்கிறேன்.
உன் நினைவுகளை தொலைக்க முடியாதவனாய் சுற்றிக் கொண்டிருக்கிறேன்.
இதோ உன் கல்லறையில் நின்று கதறிக் கொண்டிருக்கிறேன்.

உனக்கு ரோஜா பிடிக்காது. மல்லிகைதான் பிடிக்கும்.
தினமும் வாங்கி வந்து உன் கூந்தலில் சூடி அழகு பார்ப்பேனே.
அந்த வாசத்தை முகர்கிறேன் என்று அருகே வரும்போது சிணுங்குவாயே. நினைவிருக்கிறதா.
உன் நினைவாக இதோ மல்லிகைப் பூ. ஆனால் இது உன் கூந்தலில் ஏறாது கல்லறையை அல்லவா அலங்கரிக்கிறது.
நம் வாழ்க்கையில் விதி ஏன் இப்படி விளையாடியது ?

அருமையாய் சமைத்திருந்த உன் கைப்பக்குவத்தில் மயங்கி சமைத்த கைகளுக்கு வைர வளையல் போட வேண்டும் என்று சொன்னேன் நான்.
வெறும் வாய் வார்த்தை என்றாய்.
மறுநாளே உன் கைகளில் வளையல் மாட்டி அழகு பார்த்தேன்.
பதில் பரிசாய் நீ கொடுத்த முத்தத்தின் ஈரம் இன்னும் என் கன்னத்தை விட்டுப் போகவில்லை.

நீச்சல் குளத்தில் நீந்த ஆசையென்றாய்.
தேடிச்சென்று நீந்தினோம். என் கைகளில் உனது பூ உடலின் எடையை நான் தாங்க நீ நீச்சல் பழகிய நினைவுகள்.
இன்னும் என் மனதில் நீ நீந்திக் கொண்டிருக்கிறாய்.

நீயும் நானும் கைகோர்த்து எங்கெல்லாம் சுற்றி வந்தோம்.
ஊட்டியில் அந்த மழையின் குளிரில் விரித்த அந்த குடையின் அடியில் சில்லென்று தொட்டு அணைத்து நடந்த உன் கைகளின் குளுமை.
இன்றும் என் இதயம் அந்த குளிர்கால மழையாய் உன் காதலை உணர்கிறது.

எனது உயிராகவும் உலகமாகவும் நீயே இருந்தாய்.
உனக்கென எதையும் மறுத்ததில்லை நான்.

நமது கனவு வீடு எப்படி இருக்க வேண்டும் என்று நீ சொன்னாய்.
பார்த்துப் பார்த்து உன் கனவிற்கு உருக் கொடுத்தேன் நான்.
நீ சொன்ன வண்ணத்தில் சுவர்கள், நீ தேர்ந்தெடுத்த கற்கள் பதித்த தரைகள்.
வீட்டின் ஒவ்வொரு மூலையும், ஒவ்வொரு பொருளும் உன் தேர்வு, கட்டில், மேஜை, நாற்காலிகள், தரைவிரிப்புகள், சன்னல் கதவு திரைகள்.
இன்று அந்த வீட்டில் தனியொருவனாக நான். வீட்டின் ஒவ்வொரு பொருளும் நீ எங்கே எங்கே என்று கேட்பதாய் உணர்கிறேன்.

எப்படி இது நேர்ந்தது. அன்று ஏன் கேஸ் அடுப்பு வெடித்தது.
உன் தளிர் மேனியை தீ ஏன் தின்றது.

உனக்கு தெரியுமா. நீ இறப்பதற்கு முன்னே நான் இறந்து விட்டேன் என்பது.
அன்று நான் அலுவலகம் விட்டு விரைவாக மதியப்பொழுதில் வீட்டிற்கு வந்திருக்க கூடாது.
கட்டிலில் அவன் அணைப்பில்.. அந்த கோலத்தில் நீ. அதை நான் பார்த்திருக்க கூடாது.
அந்த கணத்தில் நான் முதலில் இறந்து போனேன்.
நீ என்னை பார்க்கவில்லை. வந்த தடம் தெரியாமல் திரும்பி விட்டேன் நான்.
அன்று இரவுதான் அந்த அடுப்பு வெடித்தது. இத்தனை நாட்களாக நன்றாயிருந்த அடுப்பு அன்று ஏன் வெடித்தது என்பது எனக்கு மட்டும்தான் தெரியும்.

தீ உன் துரோகங்களை எரித்து விட்டது.
மாசு மருவில்லாத மாறாத காதலுடன் நீ இன்னமும் என் மனதிற்குள் இருக்கிறாய்.
உன் மரணத்தின் முதலாண்டில் உன் மீது கொண்ட காதலால் கதறிக் கொண்டிருக்கிறேன் நான்.

Monday, November 26, 2007

அவன் சாமியார் ஆனது ஏன் ?

"பொன் வேண்டேன். பொருள் வேண்டேன். இவ்வையத்தொருமுறை பிறந்த பிறப்பும் தொலைக்கும் வழியறியேன். இறைவா. இன்னொருமுறை பிறவா வரம்தா".
இழுத்து நிறுத்திய குரலுக்குரியவனை பார்த்தேன்.

பரதேசிக்கோலம். இடுப்பில் காவி. எங்கோ நிலைத்த பார்வை.

இளைஞன் அவன். இருபத்தியெட்டு வயதுக்குள்தான் இருக்கும் என்று தோன்றியது.

இந்த சிறுவயதில் ஏனிந்த தவக்கோலம்.

எதைத்தேடுகிறான் இவன். "நான் யார்?" என்ற ஒற்றைக் கேள்வியை முன்னிறுத்திக் கிளம்பி ஞானம் தேடிய ரமணனின் புண்ணிய பூமியாம் இந்த அருணை மலையின் அடிவாரத்தில் இவன் தேடுவது என்ன.

ஞானமா ? மோட்சமா ? பிறப்பறுக்க கிளம்பி வந்தது ஏன் ?

அதோ அந்த களையான முகத்தில் மண்டிக் கிடக்கும் தாடியும், பரட்டைத் தலையும்.

"இவனா.." என்றான் உடன் வந்த நண்பன்.

"இந்த சாமியாரை உனக்கு தெரியுமா."

"எங்க ஊர்தான். நல்ல குடும்பம். அப்பா பிள்ளை இரண்டே பேரு. பெரிய மளிகை கடை. நல்ல வியாபாரம். அப்பாவுக்கு உதவியா கடையா பார்த்துக்கிட்டு இருந்தான். ஊரே திரண்டு வந்து கல்யாணமாச்சு இவனுக்கு".

எங்கோ பார்த்துக் கொண்டிருந்த சாமியார் எங்களை கவனிக்காதவனாய் பாட ஆரம்பித்தான்.
"அண்ணா மலையை சுற்று. சுற்று.
அறுந்து போகும் பற்று. பற்று."

"பாடுறான் பாரு. திடீர்னு ஒரு நாள் அப்பா மண்டைய போட, சுத்தி இருந்தவங்க ஏமாத்திட எல்லாம் கடன்ல போச்சு. கடை. வீடு எல்லாம்."

"அச்சச்சோ..."

"அப்புறம் என்ன. பொண்டாட்டி பிள்ளைய தூக்கிட்டு அம்மா வீட்டுக்கு போயிட்டா. பின்னாடியே போனான். மாமியார் வீட்டுல நாய் பாடு. பொண்டாட்டியும் மதிக்கலை. வெளிய வந்திட்டான்."

இல்லானை இல்லாளும் மதியாள் போலும். "அப்புறமா..."

"கொஞ்ச நாள் இங்க அங்க சுத்துனான். எதோ ஒரு கட்டத்துல சித்த பிரமை பிடிச்சவனா ஆயிட்டான். கொஞ்ச நாள்ல காணாம போனவன்தான். இதோ இங்க சுத்திக்கிட்டு இருக்கான்."


"அட. தகப்பன் போனான். பாட்டன் போனான். பிள்ளைகளும் அவன்பின்னாலே.
சுற்றி சுழன்றிடும் உலகத்திலே சுகத்தில் வாழ்பவர்கள் யாரும் இல்லே.
எதைஎதையோ சுற்றாதே.
பதைபதைத்து நிற்காதே.
அண்ணாமலையை சுற்று. சுற்று.
அறுந்து போகும் பற்று. பற்று" அவன் தொடர்ந்து பாடிக்கொண்டிருந்தான்.

வாழ்க்கையில் ஏதோ ஒன்று எங்கேயே உடைந்த தருணத்தில் இப்படி ஆனான் போலும். தோற்ற அந்த கணத்தில் தோள்கொடுத்து தேற்றியிருக்க வேண்டியள் தள்ளி விட்டபின் வாழ்க்கையை தள்ளிவிட்டவன் இவன்.

"வெற்றி பெறுகிற ஆணுக்கு பின்னாடி பெண் இருக்கிறாளோ இல்லையோ தெரியாது. ஆனா இங்க இருக்கிற நிறைய சாமியார்ங்க பின்னாடி இரண்டு பெண்கள் இருக்கிறாங்க. ஒண்ணு அவனுடைய மனைவி. இன்னொன்னு அவனுடைய மாமியார்."

நண்பனின் அந்த நகைச்சுவையை என்னால் ரசிக்க முடியவில்லை.

"வெற்றுக் கைகளுடன் பிறந்து பலவகையில் பற்றுக்களை பிடித்தவரே.
மறுமுறை பிறப்பீரா. இல்லையொரு தனிவழிபோவீரா.
அண்ணாமலையை சுற்று சுற்று. அறுந்து போகும் பற்று".

அவன் தொடர்ந்து பாடிக்கொண்டிருந்தான்.

Wednesday, November 21, 2007

மும்பை பெண்கள் அழகானவர்கள் !!!!

மும்பை பெண்கள் அழகானவர்கள்.
அவர்களுக்கு திறந்த மனது. எதையும் மறைக்கத் தெரியாது.
இந்த ஒரு வாரகாலத்தில் அலுவலக வேலையாய் மும்பையை சுற்றியதில் மும்பை பெண்களைப் பார்த்து வியந்து போனேன்.
எப்போது வேண்டுமானாலும் கழண்டு விழலாம் போல ஒரு ஜீன்ஸ். கவர்ச்சிகர வாசகங்கள் பொறித்த டாப்ஸ். இரண்டிற்கும் இடைப்பட்ட இடைப்பிரதேசத்தை காலியாக வைத்து மனதை காலிசெய்தார்கள்.
இன்றோடு அலுவலக வேலை முடிந்தது. சென்னை திரும்ப வேண்டும். சே..

தாதர் எக்ஸ்பிரஸ்ஸின் S7 கோச்சின் முன் நின்று கொண்டிருந்தேன் நான். வெளியே ஒட்டியிருந்த பெயர்ப்பட்டியலில் எனது சகபயணிகளை பார்க்க பார்வையை ஓட்டினேன்.
சென்னையிலிருந்து மும்பை வந்தபோது பெட்டிமுழுவதும் ஆண்கள். கடலை வாங்கி கொறித்துக்கொண்டு வந்தேன். இந்தமுறையாவது கடலை சாகுபடிக்கு வாய்ப்புகள் இருக்குமா.

53. நாராயண் ஸ்வாமி (ஆண் 27) - (நான்தான். 27 வயது நவநாகரீக இளைஞனின் பெயர் நாராயண் ஸ்வாமி. என்ன கொடுமை நாராயண்.)
54. ரங்காச்சாரி (ஆண் 55) - எவனாயிருந்தா எனக்கென்ன.
55. கோவிந்தன் (ஆண் 42) - இன்னொரு எவனாயிருந்தா எனக்கென்ன.
56. குமாரஸ்வாமி (ஆண் 46) - சே. நாட்டுல கொசுத்தொல்லை தாங்க முடியலைடா. மருந்தடிச்சு கொல்லுங்கப்பா.
57. பர்வதம்மாள் (பெண் 62) - பாட்டிங்க எல்லாம் மும்பையில இருந்து சென்னை போகணும்னு யாரு இங்க அழுதா.
58. அனுஷ்கா (பெண் 19) - வாவ் !!! ஜாக்பாட். அழகான பெயர். எனது அடிவயிற்றில் பட்டாம்பூச்சிகள்.

அனுஷ்கா. எப்படி இருப்பாள் அந்த மும்பை தேவதை. பெட்டியில் ஏறி எனது இருக்கையை தேடினேன். மூன்று ஆண்கள் மட்டும் இருந்தார்கள். எங்கே அந்த பாட்டியும் பியூட்டியும்.

எனது சன்னலோர இருக்கையில் அமர்ந்து "ஸ்டார் டஸ்ட்" இதழை பிரித்தேன். அதோ அந்த பாட்டியும் பியூட்டியும். எனது அடிவயிற்றில் பறந்த பட்டாம் பூச்சிகள் சட்டென்று பாரதிராஜாவின் வெள்ளுடை தேவதைகளாக மாறி சுற்றி வருவதாக உணர்ந்தேன். அவள் அழகை.. என்ன சொல்வது. இந்த பெட்டியில் பயணிக்க இருப்பதன் மூலம் பிறவிப்பயன் அடையவிருப்பதாக உணர்ந்தேன்.

அவள் என் எதிர் சன்னலில் அமர்ந்தாள். என்னை கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். தொடர்ந்து "ஸ்டார் டஸ்ட்" படிப்பதாக காட்டிக்கொண்டேன்.

ரங்காச்சாரிதான் பேச்சை ஆரம்பித்தார். எங்கே போகிறீர்கள் என்று பாட்டியை கேட்டார்.

கதை ஆரம்பித்தது. பாட்டி சென்னையையே இதுவரை பார்க்காத தன் பேத்தியை சென்னைக்கு முதன்முறையாக அழைத்து செல்வதையும்.. பேத்தி படிக்கும் கல்லூரியின் கோடைவிடுமுறை காலம் என்பதையும் சொல்ல..

ரங்காச்சாரி தமது கவர்ண்மெண்ட உத்யோக விஷயமாக மும்பை வந்ததை சொல்ல... மற்ற இருவரும் பேச்சில் ஈடுபட அவர்களும் கவர்மெண்ட் உத்யோகஸ்தர்கள் என தெரியவந்தது. (சே. மீண்டும் கொசுத்தொல்லை).

அந்த பெண் வாயைத் திறக்கவில்லை. நானும்.. அவள் தன் கடைக்கண்ணால் என்னை அவ்வப்போது பார்ப்பது போன்ற உணர்வு. ரயில் ஆகாயத்தில் பறந்து செல்வது போல் உணர்ந்தேன்.

எப்படி இவளிடம் பேச்சை ஆரம்பிப்பது. தவறாக நினைப்பாளோ. சே. சே. மும்பை பார்ன் அண்டு பிராட் அப்.... பிராட் மைண்டட் பீப்பிள் யூ நோ. பேச ஆரம்பிக்க வேண்டியதுதான்.

ஸ்டார் டஸ்ட்டை மூடி வைத்தேன். பேச்சை ஆரம்பிப்பதற்கான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தேன்.

"அங்கிள். அந்த மேகசினை தர்றீங்களா."

"என்னது".

"ஸ்டார் டஸ்ட். தர்றீங்களா. படிச்சிட்டு தர்றேன்."

கொடுத்தேன். மேலேறி எனது அப்பர் பர்த்தில் படுத்துக் கொண்டேன் "அங்கிளாம். அங்கிள்.".

ஆங். அப்புறம் என்ன சொல்ல வந்தேன்.
மும்பை பெண்கள் அழகானவர்கள்.
ஆனால் நாகரீகம் தெரியாதவர்கள்.

Tuesday, November 20, 2007

ஒற்றை வரியில் மனிதகுல வரலாறு




ஆணாகிய நீ என்னை உன் தேவைகளுக்காக அடிமைப்படுத்தி இத்தோட்டத்தில் ஆடை அணிகலன்கள் கூட இல்லாதவளாய் இருக்க வைத்து வெளியுலகை காட்டாமல் கொடுமைப்படுத்தி இருக்கிறாய் என்று பெண்ணியம் பேசிய அவளை எச்சில் ஆப்பிளின் மீதத்தை சாப்பிட மறந்தவனாக பார்த்துக்கொண்டிருந்தான் ஆதாம்.








என் மனைவியின் காதலன்..................

எனக்கு தெரியாது என்று அவள் எண்ணிக் கொண்டிருக்கிறாள். சில நாட்களாக அவளிடம் காணும் மாற்றங்கள் நான் அறியாதது இல்லை. மகிழ்ச்சியாக இருக்கிறாள். எப்போதையும் விட என் மீது அதிகப் பிரியமாக இருக்கிறாள். எனக்கு பிடித்த உணவுப் பொருட்களாக சமைக்கிறாள். நான் அலுவலகம் செல்லும்போது ஆவலோடு கதவு வரை வந்து வழியனுப்புகிறாள். இந்த மாற்றங்களை நான் கவனித்துக் கொண்டுதானிருக்கிறேன்.

சில நேரங்களில் தொலைபேசி அழைப்பு வருவதும் நான் அப்புறம் பேசுகிறேன் என்று சொல்லி விட்டு அவள் வைத்துவிடுவதும், அழைத்த தோழியிடம் தான் பிறகு பேசுவதாக சொல்வதும்.

இணையத்தில் அதிக நேரம் மூழ்கி இருக்கிறாள். எனக்கு தெரிந்திருந்த அவளுடைய மின்னஞ்சலின் பாஸ்வேர்டை மாற்றிவிட்டாள். ஆயிரம்தான் கணவன் மனைவியாக இருந்தாலும் மின்னஞ்சலில் ஒரு பிரைவசி வேண்டும் என்று அவள் சொன்னபோது தலையாட்டினேன்.

என்னுடைய மின்னஞ்சலின் அவள் அறிந்த பாஸ்வேர்டை நான் மாற்றவில்லை. அவளுடைய மாற்றங்கள் ஆச்சரியமளித்தன.


அன்று. வெளியே செல்வதற்கு தயாராக அவள் குளிக்க சென்றாள். எனது மின்னஞ்சலை பார்க்க கணிணியில் அமர்ந்தேன் நான். அவளது மின்னஞ்சல் கணக்கு லாக் அவுட் செய்யப்படாமல் அப்படியே இருந்தது. லாக் அவுட் செய்யப்போந்தவனை அந்த மின்னஞ்சலின் தலைப்பு இழுத்து நிறுத்தியது. "வித் கிஸ்ஸஸ்".

எனது மனைவி தன் கைப்பட அனுப்பிய மின்னஞ்சல். முகவரியை பார்த்தேன் எனக்கு முற்றிலும் தெரியாத பெயர்.

ஏகப்பட்ட மின்னஞ்சல்கள்... பதில் மின்னஞ்சல்கள்.. "எப்படியிருக்கிறாய் கண்ணா.." .. "நீ அனுப்பிய உனது புகைப்படங்களில் நீ அழகாக இருக்கிறாய்.".. "அச்சச்சோ தனிமையில் ரொம்ப கஷ்டப்படுகிறாய் போலும்"..... "நான் உன்னை மிகவும் மிஸ் செய்கிறேன்.." "உன்னையே நினைத்துக் கொண்டிருக்கிறேன்." "உம்ம்ம்ம்ம்ம்மாாாாாா"... "வித் கிஸ்ஸஸ்"...

ஒன்றிரண்டு படிக்கவும் வெலவெலத்துப் போனேன். என் அன்பு மனைவியா இப்படி. உன் அன்பு எல்லாம் வேஷமா..

எது உன்னை இவ்வாறு செலுத்தியது. அமைதியாக கணினியை விட்டு விலகினேன். அவள் குளித்து ஒப்பனை முடித்து வந்தாள். நான் எதுவும் பேசவில்லை. வெளியே சென்றோம். உயர்ந்த நட்சத்திர ஓட்டலில் உணவருந்தினோம். மகிழ்ச்சியாக இருந்தாள். உள்ளுக்குள் நான் நொறுங்கியிருந்தேன். வெளிக் காட்டிக் கொள்ளவில்லை. எனது மகிழ்ச்சி தொலைந்திருந்தது.

அடுத்த சில நாட்களில் தனியார் துப்பறியும் நிறுவனம். தொலை பேசி எண்களை சரிபார்த்தேன். ஒரு குறிப்பிட்ட எண்ணிற்கு அதிக அளவு தொலைபேசப்பட்டிருந்தது. அந்த எண்ணின் உரிமையாளனின் பெயர் மின்னஞ்சலின் அதே பெயர்.

துப்பறியும் நிறுவனத்தின் முழுவிவரம் வந்தது. அவர்கள் இருவருமாய் சிரித்தபடி இருந்த புகைப்படங்கள். அவன் என் மனைவியின் காதலன் கல்லூரி காலத்தில் இருந்து. கல்லூரி முடித்து அவனுக்கு வேலை கிடைக்காத நிலையில் வீட்டினர் காதலை எதிர்த்த நிலையில் அவனை உதறி என்னை மணந்திருந்தாள். இது எனக்கு தெரியாதது. இன்று அவன் வாழ்க்கையில் சற்று உயர, எங்கள் தனிக்குடித்தனம் சகல வசதிகளையும் தர, அவள் வாழ்வில் மீண்டும் அவன்.

மொத்தமாய் நொறுங்கியிருந்தேன். ஆத்திரம் வந்தது. ஆனால் என்ன செய்ய.

1. அவளை அடிக்கலாம். நொறுக்கலாம். வழிக்கு கொண்டு வரலாம். சே. ஒரு எறும்பை கூட மிதித்திராத எனக்கு இப்படி ஒரு எண்ணமா.
2. அன்பாய் பேசி வழிக்கு கொண்டு வரலாம். இத்துணை நாள் நான் செலுத்திய அன்பு நம்பிக்கை அனைத்தும் உடைந்த நிலையில்............. மேலும் அன்புக்கு எங்கு செல்வேன்.
3. எனக்கு எல்லாம் தெரியும் என்று சொல்லி அவளை விலக்கி என் வாழ்க்கைப் பாதையை பார்த்துக்கொண்டு போய்க்கொண்டே இருக்கலாம். ஆனால் அவள் மேல் நான் கொண்ட அன்பால் அவளில்லாத வாழ்க்கையை நினைத்தும் பார்க்க இயலவில்லை. அவளை பிரிவதை என்னால் தாங்க முடியாது.
4. பேசாமல் நான் இறந்து விடலாம். அவளிற்கு என் மீது அன்பு இல்லை என்ற நிலையில் நான் வாழ்வதில் பயனில்லை.

ஒரு மூலையாக நின்று பார்த்துக் கொண்டிருந்தேன் நான். என் சடலத்தின் மீது மாலைகள் குவிந்திருந்தன. அவள் அழுது கொண்டிருப்பதாக தோன்றியது. யார் யாரோ வந்து கொண்டும் போய்க்கொண்டும் இருந்தார்கள்.

அதோ அது அவன்தான். சந்தேகமில்லை. அவள் முகத்தில் ஒரு புன்னகை. அவன் முகத்திலும். இருவருடைய பார்வையில் இருப்பது... சீ... சீ... இது நிச்சயமாய் காதலில்லை.

மேற்கொண்டு என்னால் பார்க்கமுடியவில்லை.

வெளியேறிக்கொண்டிருந்தேன் பெரும் சூன்ய வெளியை நோக்கி மிதந்தவாறு.

Sunday, November 18, 2007

கோடம்பாக்கத்தில் மிஸ்டர் ஷெர்லாக் ஹோம்ஸ்...

நல்ல மத்தியான நேரம். கோடம்பாக்கம் ரயில்நிலையம். கிளம்பவிருந்த ரயிலில் ஓடிவந்து ஏறினாள் அவள். மதியநேரம் காலியாக இருந்த அந்த ரயில் பெட்டியில் ஒரே ஒரு இளைஞன் மட்டும் இருந்தான்.

அவன் தன்னையே பார்ப்பதாக தோன்றியது அவளுக்கு. அவனது பார்வை பல இடங்களிலும் ஓடுவதாக உணர்ந்தாள். அமைதியாக ஒரு சன்னலோர இருக்கையில் அமர்ந்தாள். சிறிது நேரம் கழித்து மீண்டும் அந்த இளைஞனை பார்த்தாள். அவன் தொடர்ந்து அவளையே பார்த்து கொண்டிருந்தான். நல்ல உயரம். மாநிறம். பார்க்க நல்லவிதமாய்த் தோன்றினாலும் அவன் பார்வை சரியில்லை என்று நினைத்தாள்.

அவன் தனது இருக்கையை விட்டு எழுந்து வந்து அவளுக்கு எதிரில் அமர்ந்தான்.

"எங்க படிக்கிறீங்க. கோடம்பாக்கம் மீனாட்சி லேடீஸ் காலேஜா."

"ஆமா. எப்படித் தெரியும்."

"கோடம்பாக்கம் ஸ்டேசன்ல ஏறியிருக்கீங்க. ஸ்டூடண்ட் மாதிரி இருக்கீங்க. பக்கத்துல இருக்கிற பெண்கள் காலேஜ்னா மீனாட்சி காலேஜ்தான். அதை வெச்சுத்தான் கண்டுபிடிச்சேன்."

"ரயிலில ஏறுற பொண்ணுங்க எல்லாம் எந்த காலேஜ்னு கண்டு பிடிச்சு சொல்லுறதுதான் உங்க வேலையா."

"சே. சே. அப்படியில்லை. நீங்க என்ன தப்பா புரிஞ்சிகிட்டீங்க. நான் ஒரு துப்பறியும் நிபுணன். உங்களுக்கு ஷெர்லாக் ஹோம்ஸ் தெரியுமில்லையா. அந்த மாதிரி."

'ரியலி".

"எஸ். பவர் ஆஃப் டிடக்சன். சூழ்நிலைகள ஆராய்ஞ்சு கிடைக்கிற தடங்களை வெச்சு ஒருத்தரை பத்தி கரெக்டா சொல்லிடலாம். உதாரணத்துக்கு நீங்க கெமிஸ்ட்ரி ஃபைனல் இயர் படிக்கிறீங்க. கரெக்டா."

"கரெக்ட். என் புத்தகத்தை பார்த்து சொல்லியிருப்பீங்க."

"ஆமா. நீங்க தாம்பரம் போறீங்க. சரியா."

"எப்படி சொல்றீங்க."

"உங்க சீசன் டிக்கட்டை பார்த்தேன்."

"அவ்வளவு தூரத்துல இருந்து என் சீசன் டிக்கட்டை எப்படி படிக்க முடிஞ்சது."

"ஒரு துப்பறியும் நிபுணனுக்கு ரொம்ப தேவையானது பார்வைத் திறன். தட்ஸ் இட். இன்னிக்கு கெமிஸ்ட்ரி பிராக்டிகல் எக்சாம் முடிச்சிட்டு வர்றீங்க. கரெக்டா."

"அமேசிங். எப்படி கண்டுபிடிச்சீங்க."

"உங்க கிட்ட இருந்து வர்ற கந்தக அமிலத்தோட வாசனை. அது நீங்க கெமிஸ்ட்ரி லேப்ல இருந்து வர்றீங்கன்னு சொல்லுது. இது எக்சாம் டைம். காலேஜ் டைமுக்கு முன்னாடியே வீட்டுக்கு திரும்பறீங்கன்னா பிராக்டிகல் எக்சாமாத்தான் இருக்கணும்."

"வாவ்".

"உங்களுக்கு அப்பா மட்டும்தான் இருக்காரு. அம்மா கிடையாது. அப்பாவுக்கு கவர்ன்மெண்ட் வேலை. ஸ்கூல் போகிற ஒரு தம்பியோ இல்லை தங்கச்சியோ இருக்காங்க".

"தம்பியும் அப்பாவுந்தான் இருக்காங்க. அம்மா இல்லை. ஆனா எப்படி கண்டு பிடிச்சீங்க".

" உங்க வலது கையில இருக்கிற சூடு சமைக்கறப்ப வச்சிகிட்டதா இருக்கணும். எக்சாம் டைம்லயும் நீங்க சமைக்கறீங்கண்ணா... அப்புறம் உங்க கண்ணுல இருக்க அந்த சோகம். உங்க அம்மா சமீபத்திலதான் தவறியிருக்கணும்னு நினைக்கிறேன்."

"ஆமா." கொஞ்சம் சோகமானவள் "கவர்ண்மென்ட் வேலையில அப்பா, ஸ்கூல் போற தம்பி எல்லாம் எப்படி கரெக்டா சொன்னீங்க."

"நீங்க வெச்சிருக்கிற நோட் புக், பேனா இரண்டும் கவர்ண்மென்ட் ஆஃபீசுல பார்த்திருக்கேன். இதை நீங்க யூஸ் பண்றீங்கண்ணா.. அப்பா கவர்மெண்ட் வேலையில இருக்கணும்."

சிரித்தாள்.

"அப்புறம் உங்க இடது கைவிரல்கள்ல கண்ணு மூக்கு வச்சு பொம்மை வரைஞ்சிருக்கு. காலேஜ் போற பொண்ணு கையில இப்படி எதாவது இருக்குன்னா, இந்த மாதிரி வரைஞ்சிவிட ஸ்கூல் போகிற மாதிரி தம்பியோ தங்கச்சியோ இருக்கணும்.".

"வாவ். எல்லாமே கரெக்ட். நீங்க நிஜமாவே துப்பறியும் ஜீனியஸ்."

"தாங்ஸ்".

"உங்களைப் பத்தி நான் சொல்லவா. யூஸிங் த சேம் பவர் ஆஃப் டிடக்சன்".

"ரியலி. சொல்லுங்க பார்ப்போம்.".

"முதல்ல நீங்க ஒரு துப்பறியும் நிபுணர் இல்லை. இரண்டாவது நீங்க அசோக் நகர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர். மூணாவது நீங்க எங்க அப்பா எனக்கு பார்த்திருக்கிற மாப்பிள்ளை".

"எப்படி கண்டுபிடிச்சீங்க. உங்க போட்டோவைதான் உங்க அப்பா கொடுத்தாரே தவிர என்னோட போட்டோவை நான் தரவேயில்லையே."

"அசோக் நகர் எஸ்.ஐ. அப்படின்னு அப்பா சொன்னதும் நான் என் ஃபிரண்ஸோட நேத்தே உங்களை நோட்டம் விட்டாச்சு. நீங்கதான் லேட்."

சிரித்தான். "உங்க அப்பா உன்னை பத்தி எல்லாமே சொன்னாரு. ஷெர்லாக் ஹோம்ஸ் மாதிரி துப்பறியும் கதைகள் உனக்கு பிடிக்கும்னு சொன்னார்".

"அதையெல்லாம் வச்சிக்கிட்டுதான் புதுசா கண்டுபிடிச்சா மாதிரி கதை விட்டீங்களாக்கும். நீங்க இன்னைக்கு காலையில இருந்து என்னை ஃபாலோ பண்ணிக்கிட்டிருக்கிறது எனக்கு தெரியும்."

சிரித்தான் "உன்னை எனக்கு பிடிச்சிருக்கு. உனக்கு என்னை பிடிச்சிருக்கா."

இவ்வளவு நேரம் படபடவென பேசிக் கொண்டிருந்தவளிடம் மெளனம். தலைகுனிந்தவாறு சொன்னாள் "பிடிச்சிருக்கு.."

அவன் சிரித்தான். அவளும். ரயில் இந்த காதல் நாடகத்தை பாராதது போல் ஓடிக்கொண்டிருந்தது.

Thursday, November 15, 2007

ஆஃபீசா இல்லை ஜெயிலா.. எது சிறந்தது?

சிறைச்சாலை மற்றும் அலுவலகம். ஒரு ஒப்பீடு.

ஜெயில் என்பது பெரும்பாலும் 8 x 10 அடியாவது உள்ள அறை.
அலுவலகம் என்பது 6 x 8 அடி மட்டுமே உள்ள க்யூபிக்கிள். (தடுப்பு)

ஜெயிலில் மூன்று வேளை சாப்பாடு கிடைக்கும்.
ஆஃபீசில் ஒரே ஒரு உணவு இடைவேளை. அந்த உணவுக்கும் நாம்தான் காசு தரவேண்டும்.

ஜெயிலில் நன்னடத்தைக்கு ஜெயில் காலம் குறைக்கப்படும்.
ஆஃபீசில் நன்னடத்தைக்கு அதிக வேலைநேரம் கிடைக்கும்.

ஜெயிலில் காவலாளிகள் நமக்காக கதவுகளை திறப்பர். பூட்டுவர்.
ஆஃபீசில் கழுத்தில் ஒரு அட்டையை தொங்க விட்டுக்கொண்டு கதவுகளை நாம்தான் திறக்கவேண்டும்.

ஜெயிலில் டிவி பார்க்கலாம். விளையாடலாம்.
ஆஃபீசில் டிவி பார்த்தாலோ விளையாடினாலோ வெளியேற்றப்படுவோம்.

சிறையில் ஒவ்வொரு செல்லிலும் தனிக் கழிப்பிட வசதி.
ஆஃபீசில் பொதுகழிப்பிடம்தான்.

சிறையில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் நம்மை பார்க்க வரலாம்.
அலுவலகத்தில் குடும்பத்தினரோ நண்பர்களோ நம்மை வந்து பார்க்கமுடியாது.

சிறையில் நமக்கு ஆகும் செலவுகளை வரிகட்டுவோர் ஏற்றுக் கொள்வர்.
அலுவலகத்தில் அலுவலகம் செல்ல ஆகும் அனைத்து செலவையும் நாமே ஏற்பதோடு, யாரோ சிறையில் அனுபவிப்பதற்காக நாம் வரியும் கட்டுகிறோம்.

சிறையில் நமக்கு எது நடந்தாலும் கேள்வி கேட்க மனித உரிமைக் குழுக்கள் இருக்கின்றன.
அலுவலகத்தில் 14 மணிநேரம் உழைத்தாலும் கேள்வி கேட்க யாரும் கிடையாது.


சிறையில் "பார்" கம்பிகளுக்கு உள்ளிருந்து கொண்டு எப்போது வெளியே போவோம் என்று யோசிப்போம்.
அலுவலகத்தில் பெரும்பாலான நேரம் "பாருக்குள்" செல்வதைப் பற்றி யோசித்துக் கொண்டிருப்போம்.

சிறையில் சாடிச மனப்பான்மை உள்ள வார்டன்கள் இருப்பார்கள்.
அலுவலகத்திலும் இது போல சிலர் இருப்பார்கள். அவர்களுக்கு டேமேஜர், சாரி மேனேஜர் என்று பெயர். :)))


முடிவு செய்யுங்கள். எது சிறந்தது. அலுவலகமா? சிறைச்சாலையா ?

Wednesday, November 14, 2007

நாம பிரிஞ்சிடலாம்...

"நாம பிரிஞ்சிடலாம்" சொன்னவளை பார்த்து சிலையாக உட்கார்ந்திருந்தான் அவன்.

"ஐ யம் சீரியஸ். எனக்கு உங்ககூட தொடர்ந்து வாழ்ந்து குப்பை கொட்ட முடியும்னு தோணலை."

"ஏன். நாம லவ்பண்ணிதான கல்யாணம் பண்ணிக்கிட்டோம். ஐ ஸ்டில் லவ் யூ."

"எஸ். லவ் பண்ணினோம். கல்யாணத்துக்கு முன்னே நான் பார்த்த நீங்க வேற. இப்ப நான் பார்க்கிற நீங்க வேற.".

"அப்படியெல்லாம் இல்லை. நான் எப்பவும் ஒரே மாதிரிதான் இருக்கேன்."

"யூ ஆர் ரைட். கல்யாணத்துக்கு முன்னாடியும் கவிதை எழுதினீங்க. என் மேல இருக்க காதலாலதான் கவிதை எழுதறீங்கன்னு நினைச்சேன். ஆனா கவிதை மேல இருக்கிற காதலாலதான் கவிதை எழுதறீங்கன்னு கல்யாணத்துக்கு அப்புறம்தான் தெரிஞ்சுது".

"பிரச்சனை அதுதானா. நான் கவிதை எழுதறதையே விட்டுடறேன்."

"பிரச்சனை அது இல்லை. நீங்கதான்."

"நானா. கல்யாணமாகி இந்த ஆறு மாசத்தில எப்பவாவது உன்னை எதாவது சொல்லியிருப்பனா. நீ சொல்ற மாதிரிதானே கேட்டுக்கறேன்."

"பிரச்சனையே அதுதான். நீங்க சொல்லி நான் கேட்கணும். இங்க தலைகீழா இருக்கு. நான் சொல்றதை எல்லாம் நீங்க கேட்டுக்கறீங்க."

"அதுல என்ன தப்பு. அதுதானே பெண்சுதந்திரம்."

"சுதந்திரம்னா என்னோட கருத்தை நீங்க கேட்டுக்கணும். உங்க கருத்தையும் சொல்லணும். இரண்டுல எது நல்லதோ அதை நீங்க செய்யணும். யூ நீட் டு கைட் மி."

"நீ சொல்றது வித்தியாசமா இருக்கு. நான் எப்பவாவது உன்னை அதிர்ந்து எதாவது சொல்லியிருக்கனா. இன்ஃபேக்ட் நீதான் ஒரு சில சமயங்கள்ல என்னை திட்டியிருக்க. அப்ப கூட நான் அமைதியாதான் இருந்திருக்கேன்.".

"நான் ஏதாவது தப்பு பண்ணினா நீங்க சொல்லணும்ன்றதுதான் நான் எதிர்பார்க்கிறது. இந்த ஆறு மாத வாழ்க்கையில என் எதிர்பார்ப்புகள் எல்லாம் பொய்யாயிருக்கு."

"நான் என்ன தப்பு செய்யறேன். நீ கேட்கறது எல்லாம் வாங்கி தர்றேன். அப்பப்ப வெளியில போய் சாப்பிடறோம். நேத்து கூட வெளிய போனோம்.".

"சரிதான். இல்லைன்னு சொல்லலை. நேத்து நாம வெளிய போனப்ப நான் போட்டிருந்த டிரஸ் கலர் சொல்லுங்க பார்ப்போம்."

"...."

"சொல்ல மாட்டீங்க. கவனிக்கலை. நான் என்னை நீங்க வெளிய கூட்டிட்டு போகணும்னு விரும்பலை. என்னை கவனிக்கனும்னுதான் விரும்பறேன்."

"நியாபகம் இல்லாதது தப்பா."

"நியாபகம் இல்லாததுன்னு இல்லை. எதையும் கவனிச்சு பார்த்தா மறக்காது. நீங்க.. உங்க வேலை. உங்க இலக்கியங்கள்... உங்க உலகம் தனி. இதுல நான் தேவையில்லாம இருக்கேன்னு தோணுது."

"அப்படியெல்லாம் இல்லை. என் உலகமே நீதான்."

"பொய். உங்களுக்கு நான் தேவையில்லை.".

"நான் அப்படி என்ன தப்பு பண்ணிட்டேன். தண்ணியடிக்கிறேனா.. இல்லை கண்டபடி ஊர் சுத்தறேனா."

"அப்படியிருந்தா கூட பரவாயில்லையே. திருத்திடலாம். நீங்க தனிரகம். நீங்க நல்லவர்தான். இல்லைன்ல. ஓவர் நல்லவராயிருக்கீங்க. அதுதான் பிரச்சனை. கெட்டவனை திருத்திடலாம். நல்லவனை திருத்தமுடியாது."

"....."

"நீங்க சாஃப்ட்ன்றதாலதான் உங்களை பிடிச்சிருந்தது. ஆனா இவ்வளவு ஓவர் சாஃப்டான ஆளா இருப்பீங்கன்னு நினைச்சு கூட பார்க்கலை. இப்படி இருந்தீங்கன்னா நீங்க வாழ்க்கையில முன்னேறவும் மாட்டீங்க."

"என்னதான் சொல்ல வர்ற.."

"உங்க கூட தொடர்ந்து வாழ விரும்பலை. நாம பிரிஞ்சிடலாம்".

அவர்கள் பிரிந்து போனார்கள். அவன் இப்போது கூட அதிர்ந்து பேசமுடியாதவனாக உள்ளுக்குள் அழுது கொண்டிருந்தான்.

Monday, November 12, 2007

அஜால் குஜால் கவிதை

நேரம் பொழுதாச்சி.
கருக்கல் கவிழ்ந்தாச்சி.
ஓலைக் குடிசையது
ஒருத்தன் தட்டி நின்னான்.

"மாரி மரிக்கொழுந்தே
மச்சான் வந்திருக்கேன்.
கதவை திறந்திடடி.
கால்கடுக்க நின்னிருக்கேன்."

"வெளக்கு வெச்சு
வெகுநேரம் ஆயிருச்சு.
காலையில போனதுதான்.
காத்திருந்து காத்திருந்து
கண்ணு பூத்து போனதுதான்.
கடை தேடி போனாயோ.
கண்டதையும் குடிச்சாயோ.
கதவை திறக்க மாட்டேன்."

"கோவம் அதுதானா.
குடிச்சா குடலழிஞ்சி போகுமின்னு
நீ சொன்ன கேட்டுக்கிட்டேன்.
சத்தியமா குடிக்கலை நான்.
குலதெய்வம் மேல சத்தியம்தான்."

"எத்தனை சத்தியம்தான்
நாளும் நாளும் நான்கேட்பேன்.
நிச்சயமா நம்ப மாட்டேன்."

"நிசத்ததான் நான் சொன்னேன்.
நம்பிடடி என் தங்கம்.
காலையில ஆயாகடையில
வாங்கி துன்ன ஆப்பம்.
இன்னம் வருது பாரு ஏப்பம்.
வேற எதுவும் இறங்கலியே.
வெறும்வயிறாத்தான் வந்திருக்கேன்."

"பின்ன ஏன் பொழுதாச்சு.
கண்ட காவாளி பயகூட
சகவாசம் வச்சு
சீட்டாடி வந்தாயா."

"அச்சச்சோ. அப்படி ஏதுமில்லை.
தொட்டு தாலி கட்டுன பின்னாடி
கெட்ட சகவாசம் விட்டாச்சு."

"பின்ன வேறென்ன.
இம்புட்டு நேரம் நீயும்
இருந்ததெங்க."

"பட்ட உழைப்புக்குத்தான்
கூலி பணமா கிடைச்சுதடி.
பத்து கடையேறி
பதமா பார்த்து பார்த்து
பாதாம் அல்வா வாங்கி வந்தேன்"

"நிசமாவா".

"அதுமட்டும் இல்லையடி.
முத்து முத்து முல்லைப்பூவும்
முழங்கணக்கில் வாங்கி வந்தேன்.
அதனால நேரமாச்சு.
கதவை திறந்திடடி".

"அப்படியா?".

கதவும் திறந்திடுச்சி.
திறந்த கதவு மூடிருச்சி.
விளக்கும் அணைஞ்சிருச்சி.
வானத்து நட்சத்திரமே,
எதைப்பார்த்து கண்ணடிச்சே.

Thursday, November 01, 2007

சாஃப்ட்வேரு இஞ்சினியர்கள் சமூகத்தை சீரழிக்கிறாங்களா.. ஒரு தீர்வு

சாஃப்ட்வேர் மக்களால் சமூக சீரழிவு - முதல்ல மறுத்து சில பாயிண்டுகள்.


1. சாஃப்டுவேரு இஞ்சினியருங்க சம்பளம் அதிகம் வாங்கனாலும் வாங்கறாங்க. வீடு விலை ஏறிபோச்சி, வாடகை ஏறிபோச்சி, ஹோட்டல பில்லு ஏறி போச்சி, பஸ் டிக்கட் ஏறிபோச்சி, தியேட்டர் டிக்கட்ல இருந்து பாப்கார்ன் வரிக்கும் எல்லாமே ஏறிபோச்சின்னு சமீபத்துல படிக்க முடிஞ்சது. (நன்றி வெட்டி, வசந்தம் ரவி.).

"இவன் கிட்ட நிறைய காசு இருக்கு. நாலு இடம் அலைஞ்சி எங்க பொருள் கம்மியா கிடைக்கும்னு தேட கூட இவனுக்கு நேரம் கிடையாது. கேட்ட விலைய கொடுத்துடுவான்டா இவன் ரொம்ப நல்லவன்டான்னு" ஆட்டோக்காரன்ல இருந்து வீட்டு புரோக்கர்ல இருந்து வீட்டு ஓனர் வரிக்கும் எல்லோரும் முடிஞ்ச அளவுக்கு விலை ஏத்தறாங்க.

புத்து லட்சத்துல வீட்ட கட்டிட்டு அதை இருபது லட்சத்துக்கு விக்கற ரியல் எஸ்டேட்காரன் சமூகத்தை சீரழிக்கிறானா.

இல்ல இருபத்தஞ்சாயிரம் சம்பளக்கார சாஃப்ட்வேர் இஞ்சினியர் அந்த வீட்டை லோன் போட்டு வாங்கிட்டு மாசம் பத்தாயிர ரூபா சுளையா வட்டியோட இருபது வருசத்துக்கு கட்டணுமேன்னு கவலையோட இருக்கானே அவன் சமூகத்தை சீரழிக்கிறானா.

ரியல் எஸ்டேட்காரங்க எல்லாம் சேர்ந்து எக்குதப்பா ஏத்திபுட்டு ஒரு வீடு 60 லட்சம்ன்றான். அட நாப்பாதாயிரம் வாங்குறவனுக்கு கூட இது கட்டுபடியாவதேப்பா.

2. காலை 5 மணிக்கு எழுந்து அரக்க பரக்க தயாராகி எங்கோ சென்னை புறநகரிலோ அல்லது பெங்களூர் புறநகரிலோ இருக்கும் ஆஃபிஸ் செல்ல பேருந்தை பிடித்து அதில் இரண்டு மணி நேரம் பயணம் செய்து.. பின்னர் பின்னிரவு வரை வேலை செய்து மீண்டும் எட்டு மணியோ பத்து மணியோ அதற்கு மேல் அலுவலகத்தில் இருந்து கிளம்பி பன்னிரண்டு மணிக்கு மேல் வீட்டுக்கு வந்து சேரும் சாஃப்ட்வேர் மக்களே இங்கு பெரும்பான்மை.
இவர்களுக்கு தன் குடும்ப உறுப்பினர்களை பார்க்கவே நேரம் இல்லாத போது சமூகத்தை சீரழிக்க நேரம் நிச்சயமாக கிடையாது.

வீக் எண்டுகளில் சிலர் உற்சாக பானங்களால் கவிழ்ந்து விடுவதால் எழுந்து நிற்கவே நேரம் இல்லாததால் வீக் எண்டுகளிலும் சமூகத்தை சீரழிக்க வாய்ப்பு கிடையாது.


3. ஹோட்டல்ல விலையேறிச்சின்னாலும் ஐட்டிக்காரன்தான் பொறுப்பா. சரவணபவன் எல்லா ஊர்லயுமே சாப்பாடு 40 ரூபா வைக்கிறானே இது எப்படி.
கமிட்மெண்ட் இல்லாத பேச்சிலர் சாஃப்டுவேர் இஞ்சினியர்க்கு வேணும்னா இது கட்டுப்படியாவலாம். குடும்பஸ்தனுக்கு எல்லாம் மாசம் ஒரு தடவை போனாலே பெரிய விஷயம்தான்.
"குந்தி தின்னா குன்றே மாளும்" இருபத்தஞ்சாயிரம் எந்த மூலைக்கு.

4. ஐபாட் வாங்கி பாட்டு கேட்டாலோ, இல்லை 8 மெகா பிக்சல் காமிரா வாங்கி படம் எடுத்தாலோ, பிராட்பாண்ட் இண்டர்நெட் கனெக்சன் வாங்கினாலோ சமூகம் சீரழியுமா என்ன.
காமெடி பண்ணாதீங்க.

5. பேச்சிலருக்கு வீடு கொடுக்கவே பத்து வருசத்துக்கு மின்னாடி யோசிச்ச மெட்றாஸ் இன்னிக்கு வீடு பேச்சிலருக்கு மட்டும்தான்னுது.

"அஞ்சி பேரா தங்கிக்கு தம்பி. பத்தாயிரம் கொடுங்க. ஆளுக்கு இரண்டாயிரம்தான் வருது.".

"சார். நானும் சாஃப்ட்வேர்தான். ஆனா ஃபேமிலி. மாசம் அஞ்சாயிரம் தர்றேன்."

"கட்டுபடியாவதுங்க. பேச்சிலர் பசங்க நாலு பேர் கேட்டிருக்காங்க. எட்டாயிரம் தர்றதா சொன்னாங்க. அவங்களுக்கே விட்டிடலாம்னு இருக்கேன்."

அய்யா தப்பு சாஃப்டுவேர் இஞ்சினியருங்க மேல இல்லை. பேராசைக்கார வீட்டுக்காரங்க மேலதான்.

6. ஆட்டோக்காரன் அதிகமா கேக்குறதுக்கு எல்லாம் சாஃப்ட்வேரு காரணமில்லைங்க.
நீங்க ஆட்டோவுல டைடல் பார்க்குல இருந்து கிளம்பி டைடல் பார்க்குக்கே போகணும்னா கூட 60 ரூபா ஆகும்னு தெரியுமா உங்களுக்கு.

7. நடந்து போறவனுக்கு சைக்கிள் வேணும்னு ஆசை.
சைக்கிள்காரனுக்கு பைக் வேணும்னு ஆசை.
பைக் வெச்சிருக்கவனுக்கு கார் வாங்கணுன்னு ஆசை.
கார் வெச்சிருக்கவனுக்கு ஒசத்தியான வெளிநாட்டு கார் வாங்கணும்னு ஆசை.
வெளிநாட்டு கார் வெச்சிருக்கவனுக்கு இன்னும் நாலஞ்சி கார் வாங்கணும்னு ஆசை.
ஆசைகள் மட்டும் குறையவே குறையாது...

அதுக்காக சைக்கிளோ பைக்கோ காரோ இல்லாதவன் வெச்சிருக்கிறவன பாத்து நீ எப்படி இத வாங்கலாம். வாங்காதேன்னு சொல்ல முடியுமா.

இன்னமும் சாஃப்ட்வேர் இஞ்சினியர்ங்களாலதான் வெலைவாசி ஏறுது. சமூகம் சீரழியுதுன்னு நீங்க சொன்னா...
இந்த உலகமகா பிரச்சனைக்கு எங்கிட்ட தீர்வு இருக்கு:

பிரச்சனைக்கு காரணம் இன்னான்னா இருபத்தோரு இரபத்திரண்டு வயசுல சாஃப்ட்வேர் இஞ்சினியராவுற நிறைய பசங்க கையில கும்சா இருபபத்தஞ்சி கிடைச்சதும் அளவுக்கு அதிகமா செலவழிச்சு வெல வாசிய ஏத்திடறாங்கன்னு தெரியுது.

நிறைய சம்பளத்தோட வேலை கிடைச்ச கையோட கபால்னு அவங்களுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணிப்போட்டம்னா பொறுப்பு வரும். வீண் செலவு இருக்காது.

கல்யாணம்னு ஆகிபோச்சின்னா இருபத்தஞ்சாயிரம் என்ன... லட்சலட்சமா சம்பாதிச்சாலும் பத்தாது.

அதனால கவர்ன்மெண்ட் ஒருத்தருக்கு இருபத்தஞ்சாயிரத்துக்கு மேல சம்பளம் கிடைச்சா மூணாவது சம்பளம் வாங்கறதுக்குள்ள கல்யாணம் பண்ணனும்னு சட்டம் போடணும்.

நம்ம சமூக பிரச்சனை ஆட்டோ மெட்டிக்கா தீர்ந்துடும்.