Sunday, September 09, 2007

நன்றி. வணக்கம். வலைப்பதிவு முற்றும்

நண்பர்களுக்கு...

பல்வேறு காரணிகளால் வலைப்பதிவு எழுதுவதற்கு விடைகொடுக்க முடிவெடுத்துள்ளேன்.

தொடர்ந்து எனது மொக்கை மற்றும் ஜல்லி பதிவுகளைப் படித்து வந்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இது ஒரு தனிப்பட்ட முடிவு.. எந்த நிகழ்வும் இதற்கு காரணமல்ல.

எனது வலைப்பூவை நானே சுயமதிப்பீடு செய்ததில்..

1) சிரிக்க வைக்க முயற்சி செய்து சிலசமயங்களில் வெற்றிபெற்றுள்ளேன்.
2) பொது விவாதங்களை பதிவாக்கும் போது மையக்கருத்தை எப்போதாவது தொட்டிருக்கிறேன்.
3) நானும் பதிகிறேன் என்று தொடர்ந்து குப்பைகளை கொட்டி வந்துள்ளேன்.

வாசித்தலையும் பரந்த விரிவான கருத்து ஆழமும் கொண்டு எழுதவேண்டிய தேவையை உணருகிறேன்.
விரிவான கருத்துத் தேடல்களை நோக்கி நகருகிறேன். "அரை"குறையாய் இருப்பதிலிருந்து "முழு"மையாய் மாறும் முயற்சி இது.

ஒரு பார்வையாளாக இங்குதான் தொடர்ந்து சுற்றிக் கொண்டிருப்பேன்.
திரும்பி எழுத வருவேனா என்பது தற்போதைக்கு.... "தெரியாது".

அனைவருக்கும் நன்றிகள். இதோ என் கடைசி முற்றுப்புள்ளி "."

அன்பன்
அரைபிளேடு

தொண்ணூற்றி ஏழு சதவீதத்தில் ஒருவனின் குரல்

இவ்வுலகில் தனது மொழியின் இலக்கிய செல்வங்களை தானே இகழ்ந்து பேசும் தமிழினத்தைப் போலொரு இனம் வேறு எங்காணும் இருக்குமா என்பது சந்தேகமே.
இலக்கியங்கள் படிப்பதில் உள்ள உனது சோம்பேறித்தனத்தால் என்னரும் தமிழனே... நீ உன் தாய்மொழியாம் தமிழையல்லவா இகழ்ந்து கொண்டிருக்கிறாய்.

ஆரிய திராவிட மாயைகளை விட்டு வெளியே வா. நீ தமிழன். உன் மொழி தமிழ். இதை மறவாதே.

மதமென்னும் மூர்க்கம் தலைக்கேறி பிதற்றாதே. மதஎதிர்ப்பு என்னும் மயக்கத்தால் உன்கையை நீயே வெட்டிக் கொள்ளாதே.

பகுத்தறிவைக் கைக்கொள். தமிழை தமிழிலக்கியங்களைப் படி. எதையும் ஆராயாமல் இன்னார் சொன்னார் என்னார் என்று ஏற்காதே அல்லது விலக்காதே.

உனக்கென்று சுயஅறிவோ புத்தியோ இல்லையா என்ன. தமிழொன்றும் வெறும் மூட இலக்கியங்களை மட்டும் கொண்ட மொழியன்று. சித்தர் பாடல்களை படி. அவற்றிலும் பகுத்தறிவு சுடர்விடுவதை காண்பாய்.
பண்டைத்தமிழர் வாழ்வியலை காட்டும் சிலம்பை மூடமாதொருத்தி பற்றிய காவியம் என்று புறந்தள்ளினால் பண்டைத்தமிழர் வாழ்வு குறித்த ஒரு காவியத்தை புறந்தள்ளுகிறாய்.
சோழ நாட்டின் சிறப்பை விவரித்து, பாண்டி நாட்டின் தெருக்களில் நடந்து சேரநாட்டில் முடிந்து தமிழகம் முழுவதையும் படம் பிடித்துக் காட்டும் சிலம்பு தனியொரு மன்னனையோ கடவுளையோ பாடியது அல்ல. ஒரு சராசரி தமிழனின் வாழ்வியலை சொன்ன நூல்.

தனது நிலத்தை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை என்று வகுத்து வாழ்ந்தவன் தமிழன். முருகனும், மாலவனும், இந்திரனும், வருணனும், கொற்றவையும் முறையே இந்நிலத்துக்குரிய கடவுள்கள் என்று காட்டுகிறது தமிழ் இலக்கியங்கள். தமிழன் கடவுளை வணங்காத காட்டுமிராண்டியல்ல, வெளியே இருந்து ஒருவர் வந்தேகி கடவுளை கற்பிப்பதற்கு. கோவில் கட்டுவதிலும் தமிழனுக்கென்று ஒரு தனிப்பாங்கு. அவன் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக அவனது கோவில்கள் விளங்குகின்றன. இத்தகு கோவில்களை வடஇந்தியா முழுவதும் தேடிப்பார்த்தாலும் காணக்கிடைப்பதில்லை. வடக்கிருந்து வந்த ஆரியர் கட்டுவித்த கோவில்கள் இவையெனில் இத்தகு கோவில்கள் ஏன் வடக்கில் இல்லை.

மூன்று சதவீதம் 97 சதவீதத்தை விழுங்கிவிட்டது என்ற குரல் வரும்போதெல்லாம் 97 சதத்தில் ஒருவனான எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இன்று காலம் எவ்வளவோ மாறிவிட்டது என்பதை கண்ணெதிரே காண்கிறோம்.

சமூக கலகக்காரராக பெரியார் பெருமளவு வெற்றி பெற்றுவிட்டார். அதன் பலன்களை நாம் இன்று அனுபவித்து வருகிறோம், பெரியாரே விரும்பாத பக்கவிளைவுகளாக ஜாதிக்கொரு கட்சி என்று இருந்தபோதிலும்.
இன்னமும் மூன்று சதவீதத்தினர் நம்மை ஆட்கொண்டு அடிமைப்படுத்துகின்றனர் என்று சொல்வோமானால் பெரியார் தோற்றுவிட்டார் என்று சொல்வதாகும். பார்ப்பனீயக் கருத்துக்கள் செத்த பாம்புகள். அதை அடிப்பதற்கு செலவிடும் நேரத்தை தமிழ் வளர்சிக்கு செலவிடலாம்.

97 சதத்தாரான நாம் இன்று பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மிக மிக பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் என்று நமக்குள் நாமே வர்ணபேதங்களை கட்டியமைத்து எழுப்பியுள்ளோம். மொத்த சாதிக்களையும் பட்டியலிட்டு அரசாங்கம் அட்டவணைப்படுத்த நாம் நமது சாதியமைப்பை கட்டிக் காத்து வருகிறோம்.

உண்மையான சாதியொழிப்பு என்பது அனைவரும் சமம். சாதிகள் இல்லை என்பதாகவல்லவா இருக்க வேண்டும். சுதந்திரத்தின் 60 ஆண்டுகளுக்குப் பின்னும் சாதி ஒழியாதது யார் குற்றம். தனிப்பட்ட பிரிவாரை மட்டும் காரணம் காட்டுவது சரியல்ல என்பது என் கருத்து.

ஒட்டுமொத்த 100 சதவீதமும்தான் காரணம். அடிப்படையில் நம் ஒவ்வொருவரிடமும் சாதிஉணர்வு நீறுபூத்த நெருப்பாகவே இருக்கிறது.

சாதி உணர்வு மனதில் வேண்டாம்... அது உங்கள் சாதிசான்றாக காகிதத்தில் மட்டும் இருந்து போகட்டும். இன்னும் ஒரு தலைமுறை அனைவரும் சமமென்ற சமுதாயத்தை படைப்போம். அந்த சமுதாயத்தில் சாதி சொல்லும் காகித குப்பைகளுக்கு கூட இடம் இருக்க வேண்டாம்.

என்னைப் பொறுத்தவரை திராவிடன் ஆரியன் என்று யாருமில்லை. தமிழறிந்தவர் யாவரும் தமிழரே.

ஒவ்வொரு தமிழனுக்கும் தன்னுடைய மதத்தையோ இறைவனையோ தேர்ந்தெடுத்து வழிபடும் உரிமை உண்டு.

நான் நாத்திகன் என்றால் அது என்னோடு மட்டுமே. அதை என் வாழ்க்கைத் துணையிடம் கூட வலியுறுத்த மாட்டேன் என்னும் போது இன்னொரு தமிழனின் எண்ணங்களை உணர்வுகளை சிறுமைப்படுத்த துணியமாட்டேன்.

இந்திய அரசலமைப்பு சட்டம் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அளித்துள்ள
சமத்துவ உரிமை
பேச்சு எழுத்து கருத்து சுதந்திரம்
கலாச்சார மற்றும் கல்வி உரிமை
மத உரிமை
ஆகியவற்றை இணையத்திலும் காப்போம்.

உன்னை காயப்படுத்தாத என்னிடமுள்ள எனது கருத்துக்களுக்காகவும்....
என்னை காயப்படுத்தாத உன்னிடமுள்ள உன் கருத்துக்களுக்காகவும்..

கருத்து பேதங்கள் பல இருந்தாலும் மொழியால் நாம் தமிழரென தமிழுணர்வு கொள்வோம்.

Saturday, September 08, 2007

அன்புள்ள தமிழ்விரோதி தந்தை பெரியாருக்கு

அன்புள்ள பகுத்தறிவு பகலவனே...

தங்கள் பகுத்தறிவு கருத்துக்களால் கவரப்பட்டு உணர்வும் பகுத்தறிவும் பெற்ற பலரில் நானும் ஒருவன்.

தங்கள் கருத்துக்களால் சுயமரியாதை ஊட்டப்பட்டவன்.

இந்த சமூகத்தின் கடைநிலை மக்களுக்கு விடுதலை உணர்வை சுயமரியாதையை ஊட்டியவர் தாங்கள் என்பதால் தங்கள் மேல் எனக்கு பேரன்பும் பெருமதிப்பும் என்றும் உண்டு அவர்களில் ஒருவனாக.

எதையும் புத்தியைக்கொண்டு யோசித்து ஏற்பதுதான் பகுத்தறிவு என்ற தங்கள் பகுத்தறிவு வாதம் என்னுள் பகுத்தறிவை ஊட்டியுள்ளது.

அதே பகுத்தறிவு தங்கள் சொன்ன கருத்துக்களையும் ஆராய்ந்து ஏற்பதுதான் அல்லவா.

எனது பகுத்தறிவு தங்களை தமிழ் இனத்தை காக்க வந்த மீட்பராகவோ, மெசையாவகவோ அல்லது இறைத்தூதராகவோ காணவில்லை.
மதங்களை விலக்கியெரிய சொன்ன பகலவனே, தங்கள் கருத்துகள் தொகுக்கப்பட்டு ஒரு புனிதநூலாக்கப்பட்டு "பெரியார்மதம்" ஒன்று நிறுவப்படுவதை தாங்களே ஒப்புக்கொள்ள மாட்டீர்கள் என்று கருதுகிறேன்.

எனக்கு உணர்வும் சுயமரியாதையும் ஊட்டியவர் என்ற ஒரே காரணத்திற்காக தங்களை கேள்விகளுக்கு அப்பாற்பட்ட புனிதராக கொள்ள என் பகுத்தறிவு இடம் தரவில்லை ஐயனே.

தங்களை இரத்தமும், சதையும் ஆசாபாசங்களும் உள்ள ஒரு சகமனிதராகவே எனது பகுத்தறிவு சொல்கிறது.

ஐயனே, தமிழினத்தை பீடித்த ஆரிய மாயையை கலைந்தெறிந்த தங்களுக்கு தமிழினம் காலத்திற்கும் கடமைப்பட்டிருக்கிறது. இந்த இனம் இன்றல்ல தான் இருக்கும் வரை தங்கள் புகழ் பாடும்.

ஆனால் ஐயனே என்னுள் கேள்விகள் இருக்கின்றன...

திராவிட இயக்கம் கண்டீர். திராவிட இனம் என்பது தமிழர் தெலுங்கர் கன்னடர் மற்றும் மலையாளத்தவர் அனைவரையும் உள்ளடக்கியது.

ஆனால் தங்கள் திராவிட இயக்கம் தமிழ்நாட்டுக்குள் மட்டும் சுருங்கிப்போனது ஏன் ஐயனே.

ஆரியமாயையை கலைந்த தாங்கள் திராவிட மாயையை தமிழனுள் விதைத்ததின் பின்னுள்ள அரசியல் என்ன.

சமஸ்கிருதம் பேசும் ஆரியனை எதிர்த்த தாங்கள், ஆரியனிடமிருந்து தமிழனை விடுவித்த தாங்கள், தமிழனிடம் திராவிட உணர்வுகளை விதைத்தீர்கள்.

ஒவ்வொரு தமிழனிடம் நாம் திராவிடர் என்ற உணர்வு இன்று உள்ளது.

இன்று கர்நாடகத்தில் கன்னடன் தமிழனை தமிழன் என்பதற்காக உதைக்கிறான். மலையாளி முல்லையாறை திறக்க மறுக்கிறான். இவர்களிடம் திராவிட உணர்வு இல்லாத போது தமிழனிடம் மட்டும் திராவிட உணர்வு இருந்து என்ன பயன்.

சமஸ்கிருதம் பேசும் ஆரியனை எதிர்த்த தாங்கள், கன்னட நாயக்கர் என்பதினாலேயே தமிழகம் வாழ் கன்னட மொழிபேசும் மக்களின் நலனையும் மனதில் இருத்தி, தமிழர் இயக்கம் காணாமல் திராவிட இயக்கம் கண்டீர் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டுகின்றேன்.

தமிழ் தங்களுக்கு புனிதமானதாக இல்லாமல் இருக்கலாம்.

பச்சைத் தமிழனான எனக்கு அப்படியல்ல. அது எனது உயிரில் உணர்வில் கலந்த மொழி. எனது சிந்தையில் கருத்தில் இயைந்த மொழி.

அத்தகு என்மொழியை தாங்கள் "காட்டுமிராண்டி" மொழி என விளித்துள்ளீர்கள், எனது பண்டை இலக்கியங்களை எனது முன்னோர் தந்த பொக்கிஷங்களை குப்பைகள் எனக் கூறியுள்ளீர்கள்.

தங்கள் கன்னடம் தோன்றாத காலத்திலேயே தோன்றிய தமிழர் வாழ்வியலை தெரிவிக்கும் நூலான திருக்குறளை "மலம்" என்று கூறியுள்ளீர்.

இது சுயமரியாதை உள்ள எந்த ஒரு தமிழனாலும் ஏற்க முடியாத ஒன்று.

தங்களால் உடைத்தெறியப்பட்ட ஆரிய விலங்குகள் தொலைவில் உள்ளன. தமிழனான எனக்கு தாங்கள் பூட்டிய "திராவிட விலங்குகளால்" என் கை கட்டப்பட்டுள்ளது.

இந்த விலங்குகளை உடைத்தெறிகிறேன்.

நான் ஆரியனுமல்ல... திராவிடனுமல்ல....

சுயமரியாதையுள்ள பச்சைத் தமிழன்.

என் தாய்மொழியைப் பழித்தவனை தலைவன் என்று கொள்ள மாட்டேன்.

இதற்குமேலும் என் தாய்மொழியாம் தமிழை தாங்களும் தங்கள் "திராவிட" உணர்வாளர்களும் பழிப்பீராயின் "போங்கடா வெங்காயங்களா".

"எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு" - அது பெரியாராக இருந்தாலும், திருவள்ளுவனாக இருந்தாலும்.


அன்புடன்...
ஒரு பச்சைத் தமிழன்.

-----------------------------------------------------------

பிற்சேர்க்கை:

பெரியாரின் எழுத்தை பதியும் தமிழச்சி உள்ளிட்ட தோழர்களுக்கு...

தூங்கிக் கொண்டிருந்த தமிழனை எழுப்பியவர் பெரியார். பெரியாரின் காலகட்டம் சுட்டிக்காட்டி தமிழனுக்கு உணர்வூட்டக் கூடிய காலகட்டமல்ல. எனவே தமிழனின் தலையில் குட்டிக்காட்டி உணர்வூட்டத் தலைப்பட்டார். பெரியாரின் குறள், சிலப்பதிகாரம் மற்றும் தொல்காப்பியக் கருத்துக்களை அவ்வாறே காண்கின்றேன்.

தோழர்கள் பெரியாரின் புரட்சிகர எழுத்தை பதியும் போது அதுகுறித்த மேலதிக தகவல்களையும் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அது இதுபோன்ற தவறான புரிதல்கள் வாசகர்களிடம் ஏற்படுவதிலிருந்து தவிர்க்கும்.

பெரியார் பெருமளவில் படிக்கப்படவேண்டும் சரியாக புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்பதே இப்பதிவின் நோக்கம். அது நிறைவேறியதாகவே கருதுகிறேன். பின்னூட்டிய ஆக்கபூர்வமாக விவாதத்தை எடுத்துச்சென்று பெரியார் குறித்த புரிதலை முழுமையாக்கிய தோழர்கள் அனைவருக்கும் நன்றி.

அன்பன்
அரைபிளேடு